Monday 4 January 2021

யாத் வஷேம் – கன்னட நாவல்



கன்னட எழுத்தாளர் நேமி சந்த்ராவால் எழுதப்பட்டு கே.நல்லதம்பியின் தங்குதடையற்ற மொழியாக்கத்தில்  எதிர் பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர்.

 

 1995 ஆம் ஆண்டு இந்த நாவலை எழுதத் தொடங்கிய நேமிசந்த்ரா  2006 ஆம் ஆண்டு நிறைவுபடுத்தியுள்ளார். உள்நாட்டு, வெளிநாட்டுப்பயணங்கள், தரவுகள் சேகரிப்பு என பெரும் உழைப்பை தன்னுள் கொண்டுள்ள நாவலிது.

 

ஒரு படைப்பாளி தான் வாழும் சம காலத்திற்கு முன்னேயும் பின்னேயும்  தடங்கலின்றி உலவக்கூடியவர். பதினாறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நாவலை காற்புள்ளி கூட மாற்றாமல் இந்தியச்சூழலுக்கு அப்படியே பொருத்த முடியும். மதியற்ற உற்சாக மடையனான ஒரு  முற்றதிகாரியின் புதைமிதியின் கீழ் அகப்பட்ட குப்பையாக  இவ்வளவு விரைவில் இந்த  பென்னாம்பெரிய நாடு சீரழியும் என்பதை  நேமிசந்த்ரா  முன்னுணர்ந்திருக்கின்றார்.

 

ஹிட்லரும் அவனது நாஜி தேசமும் யூதர்களை ஆடிய வேட்டையினை அப்படியே அள்ளி ஆவணப்படுத்தியுள்ளனர் யூதர்கள். தங்களின் மீது உலகம் இரக்கம் கொள்ளவேண்டும் என்பதற்காக  நாஜிக் கொடுமைகளை யூதர்கள் மிகைப்படுத்தியுள்ளனர் என கருதுவோரும் உண்டு.

 

“ iஇரண்டாம் உலகப்பெரும்போர் பற்றிய ஏராளமான நூல்களையும் ஆவணப்படங்களையும் ஆங்கிலேயர்களும் யூதர்களும்  படைத்துக் குவித்துள்ளனர். காரணம் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகம் மறந்து விடக்கூடாது என்பதற்காகவும், வரலாற்றில் தாங்கள் இழைக்கும் அநீதிகள் அனைத்தும் ஏற்கனவே தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகத்தான் என்பதை உலகிற்கு வேறு வகையில் சொல்வதற்காகவும்தான். யூதர்கள் இன்று அதைத்தானே செய்து கொண்டிருக்கின்றனர்” என்கின்றார் ஆவணப்பட இயக்குநரும் பேச்சாளருமான  பாரதி கிருஷ்ணகுமார்

 

உலகில் நடந்த ஒரே இன அழித்தொழிப்பு ஹோலோகாஸ்ட்தான் என்ற புகையடித்தலில்  அமெரிக்கர்கள் ஆதிகுடி செவ்விந்தியர்கள் மீதும் ஆஃப்ரிக்கர்கள்  மீதும் நடத்திய  இன அழித்தொழிப்புகளும் யூதர்கள்  ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் மீது எண்பது வருடங்களுக்கும் மேலாக நடத்தி வரும்   எல்லாவித கொடுமைகளுடன் கூடிய நாடு விரட்டலும் மங்கித்தான் போகின்றன.

 

தங்களுக்கு சாதகமில்லாத வரலாற்றின் பக்கங்களை சிறியதாக்கி தட்டையானதாக மாற்றுவதும் வரலாற்றுத்திரிபு குற்றத்துக்கு சற்றும் குறைந்ததில்லை.

 

 சாதி, இன, மத, குல நிற, மொழி, பிராந்திய , வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று கொண்டு ‘  எந்த மனித உயிரும்  அநீதியாக கொல்லப்படுவதை என்னால்  ஏற்க முடியாது’  எனச் சொல்வதற்கு உண்மையிலேயே தனியானதொரு  துணிவும் நேர்மையும்  வேண்டும்.

 

கோவிந்த் பன்சாரே, கல்புர்க்கி, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ்களுக்கு ஹிந்து ராஷ்டிரம் அளித்த அதி உயர் பரிசுகள் குறித்து நாம் மறந்திருக்க மாட்டோம். நேமிசந்த்ரா போன்ற அரசு ஊழியத்துடன் படைப்புத்துறையிலும் சம நேரத்தில் ஈடுபடுபவர்களுக்கு   இந்தியா போன்ற ஃபாஸிஸமயமாக்கப்பட்டு வரும் நாடுகளில் துணிவு நேர்மையுடன் கூடவே தனது உயிரையும் துச்சமாக்கி மதிக்கவும் தெரிய வேண்டும். நேமிசந்த்ரா அந்த அளவுகோலின் உச்சத்தில் நிற்பவர்.

 


இந்த நாவலை படித்த பிறகு நேமிசந்த்ரா அவர்களுடனும் மொழியாக்கிய நல்லதம்பி அவர்களுடனும் பேசினேன்.  நான் அவருக்கு எனது முழு நன்றிகளையும் சொன்னபோது நேமிசந்த்ரா கூறினார் “ எல்லாம் உங்களைப்போன்றவர்களின் ஆசீர்வாதம்தான்” . அவர் என்னை விட பத்து வயது மூத்தவர். அவர் சொன்னதை அப்படியே திருப்பி போட்டு சொன்னேன் “ இது போன்ற எழுத்துக்களால்தான்  இந்தியா இன்னும் இந்தியாவாக நீடிக்கிறது “.

 

 

இந்தியா, ஜர்மனி, இஸ்ராயீல்( இஸ்ரேல் ) என்ற மூன்று நிலப்பரப்புக்களையும் களனாகக் கொண்டு நடக்கின்றது இந்த நாவல்.

 

 

ஹோலோகாஸ்டில் தப்பிப்பிழைத்த தகப்பனும் மகளும் அடைக்கலந்தேடி இந்தியாவிற்கு வருகின்றனர். தகப்பன் இந்தியாவிலேயே இறந்து போக தனித்து விடப்படும் மகள் ஓர் ஹிந்து குடும்பத்தினரால் போற்றி வளர்க்கப்படுகின்றார்.  

 

 

தனது சிறு வயதின் மிகக் குறைந்த வருடங்களை ஜர்மனியில் கழித்த அந்த யூதப்பெண் நச்சுக்காற்று, எரியூட்டும் அறைகளில் முடிந்து போன தன் அம்மா, அக்கா, தம்பியின் நினைவுகளினால் வாடுகின்றார். வரலாற்றினுள் சாம்பலாகக் கூட எஞ்சியிராத  தனது வேர்களைத்தேடி அழிவின் எச்சங்களை தடங்களைத் தேடி  இஸ்ராயீலுக்கும் ஹோலோகாஸ்ட் நடந்த நிலமான ஜர்மனிக்கும் தான் காதலித்து மணமுடித்த ஹிந்து கணவனுடன் பயணிக்கின்றார்.

 

 

புகையாகி கரைந்து போன தன் குடும்பத்தின் மீதான ஏக்கத்தை சுமந்து கொண்டு அவர் மேற்கொள்ளும் அந்த பயணத்தில் அவர் பெற்ற பார்வைகள், அடைந்த கண்ணோட்டங்கள் நாவல் முழுக்க பரவுகின்றது.

 

உலர்ந்த வற்றிய சருகுகள்தான் நெருப்பை விழுங்குகின்றன. எல்லோரும் கூடி வாழும் ஒரு நாட்டில் ரத்தமும் சதையுமாய் ஊனும் நிணமுமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதத் தொகையினரை எல்லோரையும் சாட்சியாக்கி கொன்றொழிக்க எப்படி முடிகின்றது? அதைத்தான் இந்த நாவல் கேள்விகளாக்கி கள்ள மௌனம் சாதிக்கும் பெரும்பான்மையினரின் முகத்திற்கு நேரே நீட்டுகின்றது.

 

 

இது போன்ற இன அழித்தொழிப்புக்கள் நடக்கும்போது பெரும்பான்மையினர் கள்ள மௌனம் மட்டும் காப்பதில்லை. பல நேரங்களில் அவர்களே நேரடி பங்கேற்பாளர்களாகவும் இருப்பதோடு  அந்த கொலைப்படலத்தில் சிறு சலனங்கூட இல்லாமல் எவ்வாறெல்லாம் ஆதாயமடைகின்றனர் என்பதையும்  இந்த கூட்டு பாதகத்தில் பங்கேற்போர் உதிரிகள் மட்டுமல்ல சமூகத்தின் உயர் அடுக்கில் ஒய்யாரமாக வீற்றிருக்கும் அறிவியலாளர்கள், தொழிலதிபர்கள் என்பனவற்றையும் உறுத்தும் அம்மணமாக்கி நம் முன் நிறுத்துகின்றது நாவல். குஜராத்தும் உத்திரபிரதேசம் அடங்கலான வடபுலமும் நினைவின் எல்லாப்பக்கங்களையும் கறுப்பாக்கிக் கொண்டு நமக்குள் உறைந்து போக மறுக்கின்றன.

 

 

இங்குள்ள தமிழ் ஹிந்து நாளிதழ் மக்கள் ஆதரவு  நரேந்திர மோதிக்கு பெருகி வருகின்றது என அவ்வப்போது வாக்கெடுப்பு   நடத்தி குதூகலிப்பதைப்போல கம்யூனிஸ்டுகள், மாற்றுத்திறனாளிகள், யூதர்களுக்கெதிரான அழித்தொழிப்பை ஹிட்லரும் நாஜிப்படையினரும் பிரகடனப்படுத்தும்போதுதான் ஹிட்லருக்கு  ஆகச்சிறந்த மனிதர் பட்டத்தை  கொடுத்து மகிழ்ந்தன ஜர்மானிய ஊடகங்கள்.

 

 

“ வெளிளத்தான் பிரச்ன. இங்க எல்லாரும் சவுரியமாத்தான் இருக்கோம் “ என பல் குத்திக் கொண்டே எல்லா கொடூரங்களையும் கடந்து செல்லும் பெரும்பான்மையின் மூளையில் ஆணியை இறக்குகின்றது கதை.

 

உலகை உய்விக்க வந்த  பெரு சிறு மதங்களின் நந்தவனங்களிலிருந்துதான் மென்னிதழ்களைக் கொண்ட பூக்களும் கருக்கிப்போடும் கந்தக உருண்டைகளும்  அறுவடை செய்யப்படுகின்றன. ஒடுக்கப்படும் ஒரு மனிதத்திரள் அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையான பிறகு வலியதொரு கட்டாய மறதித்திரையை தங்களின் மிது போர்த்திக் கொண்டு சக மாணுட கூட்டத்தின் மீது ஆயுதங்களை பாய்ச்சுகின்றனர்.

 

 

ஹிட்லரின் நாஜிஸம் இஸ்ராயீலில் ஜியோனிசமாகவும் இந்தியாவில் ஹிந்துத்வமாகவும் உருவெடுத்துள்ளன என்ற சமகால அரசியல் பருண்மைகளை பசப்பி மழுப்பாமல் நெஞ்சுரக்க சொல்லி நிலைக்கின்றது கதை , ஹிட்லரும் நாஜிஸமும் நாடுகள் என்ற வெற்று மண் பரப்புக்களிலிருந்து கிளைப்பதல்ல எனக்குள்ளும் உங்களுக்குள்ளும்  எப்போது வேண்டுமானாலும் முளைக்க முடியும் என பிரச்னையின் மூலாதாரமானது  நாம் தப்பி ஓட முடியாத ஓரிடத்திலிருந்து அடையாளங்காட்டப்படுகின்றது.

 

 

இவை எல்லாவற்றையும் தாண்டி இந்த நாவலை ஏன் நாம் வாசிக்க வேண்டும் என்பதற்கு நாவலில் வரும் கீழ்க்கண்ட வரிகளே போதுமாகயிருக்கும்.

 

 

 

யூதர்களின் மீது வன்மம் செய்தவர்கள் ஐரோப்பியர்கள். அதற்கு விலை கொடுத்தவர்கள் அரேபியர்கள்

 

உங்கள் நாட்டை நேசியுங்கள் உங்கள் அரசை சந்தேகப்படுங்கள்

 

 

நான் நானாகவும் அவர்கள் அவர்களாகவும் இருந்து கொண்டே நாமாக முடியும்




 

2 comments:

  1. நல்ல நூல் அறிமுகம். கட்டாயம் இந்த நூலை வாசிக்க ஆசைப்படுகிறேன். நன்றி.

    ReplyDelete