தோல் பையிலுள்ள துணிப் பந்தையெடுத்துக் கை விரல்களின் இண்டு இடுக்குகளையும் நகக்கண்களையும் கூர்த்தவாறே நிதானமாக அழுத்தித் துடைத்தார். விரல்களிலிருந்து கண்களை விலக்காமலேயே சொன்னார் “ இது எல்லாத்துக்கும் வர்ற வாய்வு புடிப்புதான். பயப்புடறதுக்கு ஒன்னுமில்ல. ஆனா ஒங்களுக்கு வந்த மாதிரி வேற யாருக்கும் வந்து நான் பாத்ததில்ல. வெந்நில ஒத்தடம் வச்ச பொறவு மூணு சொட்டு தைலத்த எடுத்து ராத்திரிக்கும் பகலய்க்கும் தேய்ச்சுட்டு வாங்க. வலி இருந்தா மட்டும் திங்க கிழம கடப்பக்கம் வாங்க…. ”. முந்நூறு ரூபாய்களை வாங்கிக் கொண்டுக் கிளம்பினார் பண்டாரவிளைக்காரர்.