Friday 6 November 2020

மழைக்குள் தீ





நான்கு நாட்களுக்கு முன்னர் முன்னுரை எழுதிய வடகிழக்கு பருவ மழை நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை பொழிப்புரை எழுதி விட்டு ஓய்ந்திருக்கின்றது.


நள்ளிரவு ஒன்றரை மணி போலிருக்கும். கடும் இடியும் மின்னலும் எழுப்பி விட்டது. எனது படுக்கையறைக்கு மூன்று சாளரங்கள் உண்டு. எல்லா சாளரங்களின் வழியாகவும் மின்னல் தனது ஒளிக்கணைகளை உள்ளே எறிந்து கொண்டிருந்தது.


திரைச்சீலைகளை போட்டாலும் இடைவெளி பார்த்து உள்ளே வந்து மின்னல் மினுக்குகின்றது.


இடியின் அதிர்வில் எனது ஒன்றரை வயது பேத்தி என்ன செய்கின்றாளோ என நானும் மனைவியும் அவளது அறைக்கு சென்றோம். மின்சாரம் தடைப்பட்டிருந்தது.


அவளோ அறையிலுள்ள மின்னேற்ற விளக்கை பார்த்து கைதட்டியவாறே " தீ " என்றாள்.


மழைக்குள் தீயையும் தீக்குள் மழையையும் பார்க்க அவளது உலகத்தால் மட்டுமே முடியும்.


எனது அறைக்கு வந்து சாலரத்தின் வெளியே எட்டிப்பார்த்தேன். மின்னலில்லை. சில இடி பொறுமல்களைத் தவிர வானம் குறைந்த வெளிச்சத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.



No comments:

Post a Comment