Wednesday 5 April 2023

தஸவ்வுப், இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம் -- (கலாநிதி. எம்.ஏ.எம். சுக்ரி) -- நூல் பார்வை


தஸவ்வஃப் என்றால் சூஃபியாகுதல் எனப்பொருள்.

இலங்கையின் தலை சிறந்த கல்வியாளர், அறிஞர்களில் ஒருவரான மறைந்த கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் சூஃபியியம் பற்றி இஸ்லாமிய சிந்தனை’ முத்திங்கள் சஞ்சிகையில் எழுதியவற்றுடன் புதியதாக சில  கட்டுரைகளையும் இணைத்து வெளிவந்திருக்கும் நூல் இது.

அன்னாரை  2003 – 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டு மூன்று முறை இலங்கை ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் சந்தித்திருக்கிறேன்.

அவருடன்  கை குலுக்கும்போது ஒரு மலரின் மென்மை தலைக்குள் கடந்தது. நித்திய தொடுகைகளின் சேகரத்தில் ஒரு பொன்னிறகு.



கலாநிதி.எம்.ஏ.எம்.சுக்ரி

காண்பவர்களுக்கு தன்னை ஓர் இறகாகவே   தோற்ற மயக்கம் உண்டாக்கிக் கொண்டு  பெரும் மலையொன்று  இவ்வுலகிலிருந்து விடை பெற்று விட்டது. சுக்ரி அவர்கள் 2020 ஆம் ஆண்டு  இறைவனிடம் மீண்டு விட்டார்.

நளீமிய்யா வளாகத்தில்  அவரது அலுவல் குடியிருப்பு  இல்லத்தை ஒரு தடவை கடந்து செல்ல நேரிட்டது.நெடு நாட்களாக யாருமே வசித்திராத தோற்றத்தை தாங்கி நின்றது அவ்வீடு. பௌதிக இருப்பையும் தடங்களையும் பற்றி அலட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து சென்றதின் குறியீடு.

அவர் வாழும் காலத்தில் மொத்த நாட்டிலும் அறியப்பட்டவராக இருந்தாலும் அவரது ஆளுமையின் கனதிக்கேற்ப அவர் முழுவதுமாக அறியப்படவில்லைதான்.

இன்று இலங்கையின் அறிவுத்தளத்தில் முனைப்புடன் தொழிற்பட்டுக்  கொண்டிருக்கும் அறிஞரொருவர் எனது நண்பராவார். அவர் கலாநிதி சுக்ரி அவர்களின் மாணவருங்கூட.  

ஒரு தனிப்பட்ட  உரையாடலில் தனது ஆசிரியரைப்பற்றி. அவர் கூறும்போது  சுக்ரி அவர்களின் வாசிப்பு முழுக்க சூஃபியியத்தின் பக்கம் மட்டுமே  ஒதுங்கி நின்றதால் சம கால இஸ்லாமிய திசை வழிகள்  பக்கம்  அவர் மனங்கொள்ளவில்லை என்றார்.

இந்நூலோ அம்மாணவரின் பார்வையை பொருளிழக்கச்செய்கிறது. எல்லா துறைகளிலும் இஸ்லாத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வதில் தஸவ்வுஃபின் பங்களிப்பு கடந்த காலத்தில் மட்டுமில்லை  நிகழ், எதிர்காலத்திலும் பொருத்தப்பாடுடையதாகவே விளங்குகிறது என்பதை நூலின் வழியாக ஆசிரியர் நிறுவுகிறார்.

தமிழுலகிற்கு இந்நூலின் வருகையானது  நல்லதொரு கண் திறப்பை வழங்கிடும். காரணம்,உலகளவில் கொண்டாடப்பட்ட அளவிற்கு சரியாக முழுமையாக புரிந்து கொள்ளப்படாத துறையாக விளங்குவது சூஃபியியம். அதிலும் ஒன்றிய / தமிழ்ச்சூழலில் இது இன்னும் வீரியம்தான்.

சூஃபியியத்தை தவறாக கையாளும் பிரிவினரை சரியாக அடையாளங்காணாமல் சிக்கலின் தீவிரத்தை நாம் புரிந்து கொள்ளவியலாது.

1.சூஃபியியம் இஸ்லாத்திற்கு புறம்பானது என பரப்பியவர்கள் உலகத்தை  சுரண்டும் காலனியாதிக்கவாதிகள். அதை ஒரு சொல் மாறாமல் வழிமொழிந்து  சூஃபிகளை இணைவைப்பாளர்களாக சமய புறம்பாளர்களாக தீர்ப்புரைக்கும் வஹ்ஹாபியம்.

2.தங்களின் தீய நோக்கங்களையும் இலக்குகளையும் நிறைவேற்றிக் கொள்ளவும், முஸ்லிம் சமூகத்தை பிளந்து அழிப்பதற்காகவும், செயலூக்கமுள்ள இஸ்லாமிய அமைப்புக்களை குறி வைத்து தனிமைப்படுத்திடவும்  சூஃபியியம் X  வஹ்ஹாபிய அடிப்படைவாத தீவிரவாதம் என்ற இருமை சூத்திரத்தை கட்டமைக்கும் பல்வேறு ஆதிக்க, அரச ஆற்றல்கள். குறிப்பாக ஒன்றிய இந்துத்வ நாஜியரசு.

3.இஸ்லாத்தின் கடமைகளை, உயிர்த்துடிப்பு மிக்க  இயங்கு விசையை, அதன் உயரிய இம்மை மறுமை இலக்குகளை பற்றி பேசாமல்  குறுக்கு வழியில்  நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம், அற்புதங்களை மட்டுமே நம்பி வழி  நடந்தால் போதும்  என சாமானியர்களை மயக்கும் திரிபு சூஃபிகள்,

4.இறைவனின் பக்கம் மக்களை அழைத்து செல்வதற்கு மாற்றாக  தங்களையே மையப்படுத்தும் ஆன்மீக திருஉருக்கள்.

5.சூஃபியியத்தை கொச்சைபடுத்தக்கூடிய வஹ்ஹாபிகளை மட்டுமே முதன்மை எதிரியாக்கி, சூஃபியியத்தின் மற்ற  எல்லா நோக்கங்களையும் இலக்குகளையும் கைகழுவி விடுவதோடு மட்டுமின்றி இஸ்லாத்தை ஒழிக்க கங்கணம் கட்டி செயல்படும் நேரடி/மறைமுக வைரிகளுடன் இணங்கி நிற்பதில் எவ்வித கூச்சமும் தயக்கமும் தோன்றாதவர்கள்.

6.இஸ்லாம் வேண்டாம் சூஃபியியம் வேண்டும் என ஒதுக்கம் வேண்டுபவர்கள்.

7.சூஃபியியத்தை இஸ்லாமிய நீக்கம் செய்வோர்.

8.சூஃபிய முகமூடி தரித்தவாறே அந்தரங்கத்தில் நிராகரிப்பையும் இறை மறுப்பையும்  போற்றும்   முஸ்லிம் பெயர்தாங்கிய பிளவுவாதிகள்.

9.சூஃபியியத்தின் மறைவில் நின்று கொண்டு மத நல்லிணக்கம் என்ற பெயரில் ஏகத்துவத்தையும் இணை வைப்பையும்  சமமாக்க முயலும்  போலி அறிவாளிகள்

உண்மை சூஃபிகள் எங்கோ ஒரு மூலையில் ஓசையற்ற நதி போல ஒழுகிக் கொண்டிருக்க எதிர்மறைகளால் சூஃபியிய்ம் பற்றிய புரிதல் களமானது  ஒரு வகையாகக் கோலப்பட்டுக் கிடக்கிறது.

இந்த அவலப்பார்வைகளிலிருந்தும் தெற்று போக்குகளிலிருந்தும் சூஃபியியத்தை விடுவிக்கிறது இச்சிறு நூல்.

சூஃபிய ஆசான்களில் ஒருவரான புகழ் பெற்ற இமாம் கஸ்ஸாலி சொல்கிறார்:  ‘ஒருவன் வானத்தில் பறக்கவும் நீரில் நடக்கவும் நீவிர் கண்டாலும் அவரது செயல்கள் ஷரீஆவிற்கு ( இஸ்லாமிய சட்ட நெறிகள்) முரணாக இருப்பின் அது ஷெய்த்தானின் செயற்பாடு என்பதை அறிந்து கொள்வீராக”

முதல் அடியிலேயே பாதி மாய்மாலங்கள் விழுந்து நொறுங்குகின்றன. ஷரீஆவின் அக நீட்சியாகத்தான் சூஃபியியத்தை இமாம் கஸ்ஸாலி வரையறுக்கிறார்.

இஸ்லாமிய சட்ட விதிகளுக்குள் பொதிந்திருக்கும் இறைவனின் நுண்ணறிவை ஞானத்தை வெளிக்கொணரும் துணைக்கருவிதான் சூஃபியியம்.

நமக்குள்ளும் புறத்திலும் நடக்கும் செயல்களை தனித்தனி துண்டங்களாக்கி தீவுகளாக்கி அவற்றை உற்று நோக்கி உலைந்து போகாமல் அவையனைத்தும் பிரபஞ்சங்களின் நாதனின் மொத்த செயற் திட்டத்தின் துணுக்குகளே என்ற புரிதலை ஏற்படுத்துகிறது சூஃபியியம்.

இந்த தெளிவு பிறக்கும் சூஃபியொருவர் ஸுஹ்த் என்ற பற்ற்ற தன்மையை  கை வரப்பெறுகிறார்.

அந்த ஸூஹ்தானது தன்னை சமூகத்திலிருந்து  நடப்புலகிலிருந்து துண்டித்துக் கொண்டு மலைப்பொதும்புகளில்  அந்த சூஃபியை ஒதுக்குவதுமில்லை அல்லது மடங்களை கட்டி தான் மக்களை விட மேலானவன் என மிகை மனிதனாக மனிதக்கடவுளாக ஆக்கி விடுவதுமில்லை.

ஸுஹ்த் என்ற பற்றற்ற தன்மை கிடைக்கப்பெற்ற சூஃபிக்கு உள்ளத்தின் கீழான உணர்வுகளிலிருந்தும் சடத்தின் ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை கிடைப்பதுடன் வாழ்க்கையின் பக்கம் முழு ஈடுபாட்டுடன் திருப்பப்படுகிறார்.

ஆனால் வாழ்க்கைக்குள் அவர்கள் முங்கி காணாமல் போவதுமில்லை. ஓர் இலைக்கே உரிய மிதத்தலுடன் எல்லா வண்ணங்களும் சாத்தியமாகி விடுகிறது.

தான் மட்டும் தனியே அந்த வாழ்க்கையை துய்த்து தொலைவதற்கு அல்ல, மாறாக ‘படைப்பினங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பம். அவனது குடும்பத்திற்கு பயன் நல்குபவர்களே அவனுக்கு மிகவும் விருப்பமானவர்கள் என்ற நபி மொழியானது செயல்பாட்டின் தீரா விசைக்குள் அவர்களை வழி நடத்தும்.

இந்த விசைதான் அஜ்மீர் காஜா நாயகம், நாகூர் ஷாகுல் ஹமீது நாயகம் உள்ளிட்ட எண்ணிலடங்கா சூஃபி மெய்ஞ்ஞானிகளை எல்லா எல்லைகளையும் கடந்து அன்ன சுரபிகளாக நோய் தீர்க்கும் சஞ்சீவிகளாக விடுவிப்பாளர்களாக  வரலாறு நெடுக வழி நடத்தியது.

காலத்தின் தேவையை ஒட்டி எழுந்த காதிரிய்யா, சுஹ்ரவர்த்திய்யா, ரிஃபாயிய்யா, ஷாதுலிய்யா, ஜிஸ்திய்யா,தீஜானிய்யா, நக்சபந்தியா என்ற சூஃபி தரீக்கத்துகள் ( சூஃபிய பயிற்சி மரபுகள்,நிறுவனங்கள்) பற்றிய அறிமுகத்தை  அடர்த்தியான சிறு குறிப்புக்களாக ஆசிரியர் தருகிறார்.

தரீக்காக்கள் தனி மனித , சமூக ஆன்மிக வளர்ச்சிக்கும் பயிற்சிக்கும் அப்பால் மனித சமூக கட்டுமானத்தின் எல்லா துறைகளிலும் சமன் பேணிய பங்களிப்பை வழங்கியிருக்கின்றன.

பசி ஆற்றுதல், நோய் தீர்த்தல்,  உள ஆற்றுப்படுத்தல், கை வினை தொழிற் பயிற்சி கூடங்கள், விவசாயம் என தங்களின் அனைத்து  ஆற்றல்களையும் பூமியை வளப்படுத்துவதில் செலவழித்திருக்கின்றன சூஃபிய தரீக்காக்கள்.

கண்மூடித்தனமான வளர்ச்சியின் ஆசியினால் மனித மனத்தின் கட்டற்ற தன்மையினால் நுகர்வு வெறியினால் வளங்கள் மீதான தீராப்பசியினால் உலகம் வெற்றுக்கூடான மனங்களை பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது.

இவை உண்டாக்கும் வலிக்கும் எதிர் விளைவுகளிலிருந்து தப்பிப்பதற்காக ஜென், சூஃபியியம் என உலகம்  ஆன்மீக ஈடுபாடு கொள்ளத்தொடங்க, இன்று சூஃபியியத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது ஒரு பாங்காக மாறியிருக்கிறது.

ஆனால் பாங்குகள் என்பன பெரும்பாலும் பாசாங்காகவே மாற்றமடைகின்றன. பாசாங்குகளோ வட்டச்சூனியத்தை தவிர எவற்றையும் எட்டப்போவதில்லை

ஆனால் ,உண்மையான சூஃபியம் என்பது முழு  கீழ்ப்படிதலை வழிபாட்டை தன்னடக்கத்தை கோருவது.

அறப்பணிகளில் மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உலகை, உலகாயத ஆதிக்க ஆற்றல்களிடம் ஒப்படைத்து விட்டு தனியறைகளில் தியானத்தில் கண்ணை மூடிக் கொள்வதல்ல சூஃபியியம்.

காலனிய, ஆதிக்க ஆற்றல்களால் மார்க்கம், நிலம் பண்பாடு வளம் ஆக்கிரமிக்கப்படும்போது மானுடம் நசுக்கப்படும்போது அதற்கெதிராக நேர்க் களங்கண்டு மண்ணின் உரமானவர்கள் சூஃபியிய்யாக்கள்.

போர்த்துக்கீசியர்களுக்கெதிரான நூற்றாண்டு கால போரின் சிற்பியான முதலாம் ஜைனுத்தீன் மக்தூம் நக்சபந்திய்யா தரீக்காவின் சீடரும் ஆசானுமாவார்.

மாப்பிளா எழுச்சியின்  நோக்கங்களில் ஒன்று, சாதிய தீண்டாமை நிலப்புரபுத்துவ அட்டூழியங்களுக்கெதிராகவும் தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்காகவும் போராடுவது. 

இப்போராட்டங்களின் சிற்பி, காதிரிய்யா தரீக்கத்தின் வழிகாட்டியும் சூஃபியுமான  செய்யத் அலவி தங்ஙள் ஆவார்.

பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வெந்நியூரை சார்ந்த தாழ்த்தப்பட்ட   மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் தீண்டாமையை எதிர்த்து இஸ்லாத்தை தழுவினர்.

அச்சமயம் அப்பகுதியின் மார்க்க அறிஞரும் காதிரிய்யா தரீக்கத்தின் ஷேஹ்( வழிகாட்டியாகவுமிருந்த செய்யத் அலவி தங்ஙள் கீழ்க்கண்ட ஃபத்வாவை (தீர்ப்பு) பிறப்பித்தார்.

“ இஸ்லாத்தை தழுவியவர்கள் ஜென்மிகள் எனப்படும் மேல் சாதி நில உடைமையாளர்களை இனிமேலும் மரியாதையாக “ நீங்கள் “ என விளிக்கத்தேவையில்லை. ஜென்மி சாப்பிட்டு மீதம் வைத்த எச்சில் உணவையும் சாப்பிடக்கூடாது”

இந்த தீர்ப்பிற்கான காரணம் இஸ்லாத்தை தழுவிய தாழ்த்தப்ப்ட்டோர், முஸ்லிமான பின்னரும் ஜென்மிகளுக்கு அடங்கி ஒடுங்கியிருக்கும் செயல்களை கைவிடவில்லை.

இஸ்லாத்தை தழுவிய அந்த பெண், அப்பகுதியின் ஜென்மியான அதிகாரி கப்றாட்டு கிருஷ்ண பணிக்கரின் வேலையாளாகவும் இருந்தார்.

அந்த பெண் உள்ளிட்ட சிலரை விசாரிப்பதற்காக தனது இருப்பிடத்திற்கு வரவழைத்தார் ஜென்மி.

காலாகால வழமைக்கு மாறாக தனது வேலையாள் மேற்சட்டை அணிந்து வந்ததை கண்டு திகைத்த  ஜென்மியை அந்த பெண் வழமையான மரியாதைகள் எதுவும் தராமல் அவர்து இயற் பெயரைச் சொல்லி “ நீ “ என அழைத்தாள்.

வெகுண்ட ஜென்மி அதிகாரி கப்றாட் கிருஷ்ண பணிக்கர் அந்த பெண் அணிந்திருந்த மேற் சட்டையையும் காலணியையும் வலுவில் அகற்றினார்.

இது மாப்பிள்ளா முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகத்தான் பொ.ஆ 1843 இல் சேரூர் போராட்டம் வெடித்தது. இதுதான் மாப்பிளா எழுச்சியின் முதல் பக்கம்.

டச்சு, ஃபிரெஞ்சு காலனியாதிக்கத்திற்கெதிராந சமரை தொடங்கி ஒழுங்கமைத்து வழி நடத்தியது காதிரிய்யா தரீக்கா

இத்தாலியர்களுக்கெதிரான போரில் இரத்த சாட்சியம் பகர்ந்த. உமர் முக்தார் சனூசிய சூஃபி  மரபினை சார்ந்தவர்.

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷார் உள்ளிட்ட பல எதிரிகளை எதிர்த்து களங்கண்டு இரத்த சாட்சியமான செய்யத் அஹ்மது ஷஹீத் ராய்பரேலி காதிரிய்யா, சிஷ்திய்யா, நக்சபந்திய்யா தரீக்காக்களின் மாணவராவார்.

சூஃபியியர்கள் மனிதர்களுக்கு அக விடுதலை தருவதோடு மட்டும் தங்கள் பணிகளை மட்டிறுத்திடவில்லை. புற விடுதலையையும் உத்திரவாதப்படுத்தியவர்கள். மண்ணையும் மனத்தையும் ஒரு சேர கையாண்டு நெறிப்படுத்தியவர்கள்.

“ பகலில் வீராவேசத்தோடு போராடும் குதிரை வீரர்கள்.

இரவில் பற்றற்ற மன நிலையுடைய துறவிகள்”

(புர்ஹானுன் பின் நஹார் ருஹ்பானுன் பில் லைல்) என்ற வாக்கிகேற்ப வாழ்ந்த நபித்தோழர்களின் பிற்கால நீட்சிதான் சூஃபிய்யாக்கள் எனப்படும் சூஃபியராவர்.

எல்லா சூஃபி  தரீக்காக்களின் ஆன்மீக சமூக அரசியல் பங்களிப்புகள் பற்றி தனி நூற்களாகவே வர வேண்டிய அளவிற்கு அவற்றின் பணிகள் ஆழமும் விரிவும் கொண்டவை.

உலோகாயதத்தின் தாக்குதலுக்கு முன் ஆயுதங்களை போட்டு விட்டு  கீழடங்கிய கிறிஸ்தவத்தினால் அய்ரோப்பாவானது உள்ளீடற்ற மனத்தை வெறுமையை கை மேல் பலனாக பெற்றது.

கிறிஸ்தவத்தின் வீழ்ச்சியை மதம் என்ற மொத்த நிறுவனத்திற்கெதிரான பார்வையாகவே வளர்த்தெடுத்து ஈற்றில் நாத்திகத்தில் போய்  நின்றது மேலை மனம்.

“உளவியல் முதலில் ‘ஆன்மா’வை இழந்தது. அதன் பின் ‘உள்ளத்தை’ இழந்தது. பின்னர் ‘தன்னுணர்வை’ இழந்தது. இப்போது புலன்களுக்கு தட்டுப்படும் ‘நடத்தை’ மட்டுமே அதற்கு எஞ்சியுள்ளது.” என்ற வேட்ஸ்வொர்த்தின் மேற்கோளை எடுத்தியம்பும் நூலாசிரியர் மேற்கின் ஓட்டாண்டித்தனத்தை சுட்டுகிறார்.

மனிதனை மேற்குலகம் வெறும் சடத்தொகுதியாக பார்க்கும்போது இஸ்லாமோ மனிதனுக்குரிய உயரிய இடத்தை வழங்கியிருக்கிறது. மனிதனின் ஆன்மா, உள்ளம் பற்றிய இஸ்லாத்தின் வரையறையை  எளிய  மொழியில் விளக்கிச் செல்கிறார் ஆசிரியர்.

மேற்கு முட்டிக் கொண்டு வந்து சேர்ந்திருக்கும் இடத்திற்கானபாதை திறப்பை  முற்கால தற்கால சூஃபியாக்கள், தத்துவ ஞானிகள் ஆன்ம ஞானிகள் என்றோ செய்து வைத்துள்ளனர்.

மௌலானா ரூமியும் ராபிய்யத்துல் பஸரிய்யாவும் இப்றாஹிம் இப்னு அத்ஹமும் மெய்ஞ்ஞான வட்டத்தையும் மீறி  காலந்தோறும் பேசு பொருளாக ஒளிக்கம்பங்களாக  நீடிக்கின்றனர்.

வெறுமையின் கனம் தாளவியலாமல். சூஃபியியத்தில் நிழல் தேடுகிறது மேலை மனம்.

சூஃபியியத்தினூடாக மானுடம் பெற்றுக்கொள்ளும்  உளவியல் விளக்கங்கள் உள்ளிட்ட ந்ல்லறங்கள் அனைத்தும் அல்லாஹ்வோடு தொடர்புபடுவதினாலேயே தங்களுக்குரிய உன்னதங்களை பெற்றிருக்கின்றன..

அத்தொடர்பால் மட்டுமே இச்சிறப்புகள் தோன்றவும்  வளரவும் நிலை பெறவும் முடியும் என்பதை சடவாத  நிராகரிக்கும் உள்ளங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முல்லா நஸ்ருத்தீன். ஓர் உணவகத்தில் ரொட்டி உண்டு கொண்டிருந்தார். நான்கு ரொட்டிகள் வரை உண்டபின்  ஐந்தாவது ரொட்டியும் வந்து சேர்ந்தது அதையும் உண்ட பின் அவரது வயிறு நிறைந்து விட்டது,

பிறிதொரு நாள் அந்த உணவகத்திற்கு போன அவர், சாப்பாட்டு செலவை மிச்சம் பிடிக்க எண்ணி,” எனக்கு அந்த அய்ந்தாவது ரொட்டியை மட்டும் கொண்டு வா” என்றாராம்.

இஸ்லாத்தை கழற்றி ஓரமாக வைத்து விட்டு சூஃபியியத்தை பின்பற்ற நினைப்பவர்கள் அய்ந்தாம் ரொட்டியை ஆசிக்கிறவர்கள்தாம்.

சூஃபியியத்தின் முழு இரசவாதமும் தனக்குள் நிகழ வேண்டும் என விரும்புபவர்கள் இஸ்லாம் என்ற  மலர் வனத்தினுள்  நுழைய வேண்டும். முழு ஈடுபாடில்லாத எதுவும் வெற்றியையோ  அதன் முழு இலக்கையோ எட்டப்போவதில்லை.

அறிமுக நிலையில் உள்ளவர்களுக்கும் தவறான புரிதல்களுக்குள்ளாகியிருப்போருக்கும் மட்டுமில்லாது சூஃபியியல் குறித்து புதிய ஆய்வுகளை செய்ய விழைவோருக்கான மூலப்பொருட்களையும் அடையாளங்காட்டும் குறு நூலிது.

இந்த நூலின் தனித்தன்மை மிக்க பகுதியாக நான் நினைப்பது இமாம் இப்னு தைமிய்யா அவர்களைப்பற்றிய குறிப்புதான்.

இனி வருங்காலங்களில் சூஃபியியத்தை ஆய விழைவோருக்கான ஒரு வகை மாதிரி ஆளுமை இமாம் இப்னு தைமிய்யா.

சூஃபியியம் தவறாக புரியப்பட்டது போலவே சூஃபியியத்தை பொன் துல்லியத்துடன் மதிப்பீடு செய்த ஒரே காரணத்திற்காகவே தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஆளுமைதான் பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா.

தரையிலும் போட்டுடைக்காமல் தலையிலும் வைத்து ஆடாமல் முன் முடிவுகளற்ற சாய்மானமில்லாத போக்கில், குர்ஆன் ஹதீஸின் ஒளியில்  சூஃபியியத்தை நிறுத்ததினாலேயும், அதற்கு உரிய இடத்தை வழங்கியதினாலுமே  திரிபு  சூஃபிகளால்  அவர் வெறுக்கப்படுகிறார்

 இமாம் இப்னு தைமிய்யாவை கொண்டாடும் வஹ்ஹாபிகளோ, அவர் காதிரிய்யா தரீக்கத்தின் முரீது என்பதையும் சூஃபியியத்தை பற்றிய அவரின் உடன்பாடான கருத்துக்களையும் பற்றி மூச்சே காட்டுவதில்லை,

இமாம் இப்னு தைமிய்யா என்ற பெயரை உச்சரிப்பவருக்கு உடனே முத்திரைகள் காத்திருக்கும் சம காலத்தில் துணிவுடன் அவரைப்பற்றி  தன்னுடைய மதிப்பீட்டை  வரலாற்றின் ஏடுகளிலிருந்து நேர்மையாக முன் வைத்துள்ளார் கலாநிதி சுக்ரி அவர்கள்.

நுண்மான் நுழை புலத்துடன் நேர்மையும் துணிவும் சேருமிடத்தில்தான் அறிஞர்கள் காலங்களை கடக்கின்றனர்.




நூல் பதிப்பாளர்

NALEEMIAH BUREAU OF ISLAMIC PUBLICATIONS

P.O.BOX: 1

CHINAFORT

BERUWELA

SRI LANKA

TEL:  00 94 342 276 338

Email: info@naleemiah.edu.lk



 

1 comment:

  1. LAFEES SHAHEED லஃபீஸ் ஷஹீத்த்24 June 2023 at 09:21

    மிகவும் முக்கியமான நூல் அறிமுகம் இது. கவித்துவ நடையுடன் எழுதப்பட்டதும் கூட. ஆனால் உண்மையில் டாக்டர் எம். ஏ. எம் சுக்ரியின் 'தஸவ்வுஃப் - இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம்' நூலை வாசித்து எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. சாளை பஷீர் கூறியிருப்பது போலவே டாக்டர் சுக்ரி அவருக்குரிய கல்விப் புல மாண்பு, பரந்து விரிந்த வாசிப்பு, சக்தி வாய்ந்த எழுத்தாற்றல் போன்ற கனதிகளுடன் உரிய விதத்தில் சமூகத்தில் அறிமுகம் ஆகவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவர் பெரும் புகழ் படைத்த அறிஞரும், அறிவுப் புலங்களிலும், பொது மன்றங்களிலும் நன்கு மதிக்கப்பட்டவரும் தான் என்பது விந்தையே. தஸவ்வுஃப் குறித்த மேலைத்தேய ஆக்கங்களிலும், ஷெய்குல் அஸ்ஹர் இமாம் அப்துல் ஹலீம் மஹ்மூத், கலாநிதி ஸகி முபாரக், ஷெய்க் அஹ்மத் ஹஸன் பாகூரி போன்றவர்களின் சிந்தனைகளிலும் பெரும் திறன் படைத்தவரான டாக்டர் சுக்ரியிடமிருந்து நாம் அதிகம் அதிகம் எதிர்பார்ப்பதில் எந்தந் தவறும் இல்லை. தஸவ்வுஃப் குறித்து ஆயிரம் வருடங்களுக்கும் அதிகமான உரையாடல்களையும், முக்கியமான போக்குகளையும் தமிழில் தருவது அவருடைய சக்திக்கு மீறிய அம்சமும் அல்ல. ஆனால் ஏனோ கடமைக்கு எழுதியது போல இந்த ஆக்கம் வெளி வந்து இருக்கிறது. தஸவ்வுஃப் குறித்த புதிய உரையாடல்கள், விவாதங்கள் என்று எதுவும் இதில் கிடையாது. தஸவ்வுஃப் கலையில் டாக்டர் சுக்ரியின் மேதைமை அறிந்தவர்களுக்கு நான் கூற வருவது புரியும்.
    பஷீர் காக்கா (சாளை பஷீர்) இந்த ஆக்கத்தில் உண்மையில் டாக்டர் சுக்ரியின் நூலுக்கு கொடுக்க வேண்டிய இடத்தை மிகைப்படுத்தியே கூறுகிறார். இதற்கு டாக்டர் சுக்ரி மீதான உணர்வெழுச்சி பொங்கும் தனிப்பட்ட அன்போ அல்லது இலக்கிய வாதிகளின் பொதுமான மிகையுணர்ச்சியோ காரணமாக இருக்கலாம். ஆனால் சமகால அரசியல் புலத்தில், தேச அரசுகளின் செயல்பாடுகளின் வெளிச்சத்தில் சூஃபித்துவம் பற்றிய பொது மன்ற விவாதங்கள் செயல்படும் பாங்கு குறித்து சாளை பஷீர் பேசி இருக்கும் விடயங்கள் எமது புலத்தில் சூஃபிகளோ, வஹ்ஹாபிகளோ அல்லது கல்வியியலாளர்களோ பேசத் தவறும் விடயங்கள். சூஃபித்துவம் சரியா, தவறா என்கிற எதிர் முரண் விவாதங்கள் தான் இங்குள்ள பிரச்சனை. டாக்டர் சுக்ரி போன்றவர்கள் இந்த சர்ச்சையை தாண்டி சூஃபித்துவத்தின் கோட்பாடுகளையும், நடைமுறைகளையும், வரலாற்றையும் பேசுபவர்கள். ஆனால் யாருமே சூஃபித்துவத்தை நிகழ்கால அரசியல் யதார்த்தத்தில் வைத்து பேசுவதே இல்லை. சாளை பஷீர் சில முக்கிய குறிப்புகளை கூறியிருக்கிறார்.

    ReplyDelete