Wednesday 1 January 2020

பசி நீக்கிய ஹஜ் பணம்





செருப்பு தைக்கும் தொழிலாளி அப்துல் கறீம் பக்தாத் நகரில் வாழ்ந்து வந்தார். புனித ஹஜ் பயணம் செல்ல வேண்டும் என்பது அவரின் நெடு நாளைய விருப்பம். அதற்காக ஒவ்வொரு நாளும் தன்னுடைய உழைப்பிலிருந்து ஒரு சிறு தொகையை மண் உண்டியலில் சேமித்து வந்தார். பல வருடங்களுக்குப்பிறகு  ஹஜ் செல்வதற்கான தொகை சேமிப்பின் வழியாக திரண்டு விட்டது.


அந்த வருடம் ஹஜ் பயணக்குழுவினருடன் தாமும் சேர்ந்து புறப்பட அப்துல் கறீம் ஆயத்தமாகி விட்டார். பயணம் புறப்படுவதற்கு ஒரு சில நாட்களே எஞ்சியிருந்த நிலையில் அவர் தனது தொழிலில் உற்சாகமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது ஏழு வயது நிரம்பிய அவரது  மகன் அழுது கொண்டே வந்தான். அழுகைக்கான காரணத்தைக் கேட்டார் அப்துல்கறீம். அவன் அதை சொன்னதும் அவருக்கு கோபம் கோபமாக வந்தது.
நடந்தது இதுதான்.

பக்தாதில் அப்துல் கறீமின் இளமைக்கால நண்பர் ஒருவர் இருந்தார்.
அப்துல்கறீமின் மகனும் நண்பரின் மகனும் நெருங்கிய கூட்டாளிகள்.
தனது கூட்டாளியை பார்க்க அப்துல்கறீமின் மகன் நண்பரின் வீட்டிற்கு சென்றிருக்கின்றான். அப்போது  நண்பரின் குடும்பத்தினர் கோழி இறைச்சியை உண்டு கொண்டிருந்தனர்.

அப்துல்கறீமின் மகனும் உணவு உண்ண ஆசைப்பட்டிருக்கின்றான். ஆனால் அவர் உணவு கொடுக்கவில்லை. அவன் உரிமையுடன் மீண்டும் மீண்டும் உணவைக்கேட்கவே நண்பர் சிறுவனை கோபத்துடன் திட்டி அனுப்பி விட்டார். அவமானம் தாங்காமல் சிறுவனும் தன் தந்தையிடம் அழுது கொண்டே நடந்ததை சொல்ல அப்துல் கறீமிற்கு தன்மானம் பொங்கியது.

பர பரவென தன் மகனின் கையை பிடித்துக்கொண்டு நேராக நண்பரின் வீட்டிற்கு மனக்கொந்தளிப்புடன் சென்றார். நண்பரைப் பார்த்து சூடாக இரண்டு சொல் கேட்டார் அப்துல் கறீம். அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்த நண்பர் தன் கண்களில் கண்ணீர் பொங்க உண்மை நடப்பை விளக்கினார்.

“ நண்பா ! நானும் குடும்பத்தினரும் பல நாட்கள் பட்டினியாக இருந்தோம். உண்பதற்கு எதுவும் இல்லை. மனைவியும் குழந்தைகளும் பசி தாங்கவியலாமல் அரை மயக்கமாகி விட்டனர் .யாரிடமும் கையேந்தவும் மனது இடம் கொடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் மனம் நொந்து நான் கடை வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தேன்.

அப்போது கோழிக்கடையிலிருந்து செத்த கோழி ஒன்றை வெளியே எறிந்தார்கள். யாரும் கவனிக்காத நிலையில் நான் அதை அப்படியே வீட்டிற்கு கொண்டு வந்து விட்டேன். அதை  சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதுதான் உன் மகன் வந்து உணவைக்கேட்டான்.

செத்த உயிரினங்களை உண்ணுவதற்கு மார்க்கத்தில் தடை உள்ளதை நீ அறிவாய் . உயிரைத்தக்க வைத்துக்கொள்ள வேறு வழியில்லாத நிலையில் தானாக செத்த கோழியை உண்பது எனக்கு கூடும். ஆனால் அதை எப்படி உன் மகனுக்கு நான் கொடுக்க முடியும் ?  அதனால்தான் அவன் தப்பித்தவறிக்கூட அதை உண்டுவிடக்கூடாது என்பதற்காகவே உன் மகனிடம் நான் கடுமையாக நடந்து கொண்டேன் “ என்றார்.

“ உற்ற நண்பனின் பசியைக்கூட அறிய முடியாத உணர்வற்றவனாக நான் ஆகிவிட்டேனே “  எனக்கதறிய அப்துல் கறீம் ஹஜ் பயணத்திற்காக தான் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் தனது நண்பனிடம் கொடுத்து விட்டார். அந்த பண உதவி நண்பரின் குடும்பத்தினரின் பசியையும் வறுமையையும் நிரந்தரமாக துடைத்தெறிந்து விட்டது.

இந்த செய்தி நகரம் முழுக்க பரவி விட்டது.

“ஆயுளில் ஒரு முறை செய்யக்கூடிய அரிய வாய்ப்பான ஹஜ் பயணத்தை இப்படி அப்துல்கறீம் தவற விட்டு விட்டாரே  “ என ஊர்மக்கள் அங்கலாய்த்தனர்.
 நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நகரின் தலைமை முல்லாவிற்கும் எட்டியது. அவர் அந்த வார வெள்ளிக்கிழமை தொழுகை உரையில்  மக்களைப்பார்த்து பின்வருமாறு கூறினார்.

  என் அருமை சகோதரர்களே !!

சுவனத்திற்கு நுழைவதற்கு ஒரே வழிதான் உண்டு என யார் சொன்னது ?

ஹஜ் பயணம் நமது பாவங்கள் அனைத்தையும் அழிக்கக் கூடியது என்பதில் எந்த அய்யமுமில்லை. நம்மோடு வாழும் சக மனிதனை பசியினால் அழிய விட்டு வேடிக்கை பார்ப்பதை அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்புவார்களா ?.
அப்துல் கறீம் தனது ஹஜ் பயண வாய்ப்பை இழந்திருக்கலாம். ஆனால் அவர் செய்த கொடையின் பயனாக அவருக்கு எண்ணற்ற ஹஜ் வழிபாட்டின் நன்மைகளை கொடுப்பதற்கு  இறைவனால் முடியும்தானே ? 

அறத்தின் வழியில் நம்மை செயல்படத்தூண்டுவதுதான் வணக்க வழிபாடுகளின் இறுதி இலக்காகும் “ எனக்கூறி பின்வரும் நபியவர்களின் பொன் மொழியையும் எடுத்துக்கூறினார் தலைமை முல்லா .

நான் நபியவர்களிடம் கேட்டேன்.

“ நரகிலிருந்து ஒரு அடியானை காப்பாற்றக்கூடியது எது?

நபியவர்கள்,  “இறைவனை நம்புதல்” என்றார்கள்.

“இறை நம்பிக்கையுடன் ஏதேனும் செயற்பாடுகளும் இருக்கின்றனவா? என்று நான் கேட்டேன்.

“இறைவன் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து பிறருக்கும் கொடுங்கள், என்றார்கள்.

“இறைவனின் தூதரே பிறருக்கு வழங்க எதுவுமில்லாத ஏழையாக இருந்தால் என்ன செய்யலாம்? “என்று கேட்டேன்.

“நன்மையை ஏவி தீமையை தடுக்கட்டும்”, என்றார்கள்.

“நன்மையை ஏவி தீமையைத் தடுக்க இயலாது என்றிருப்பின் என்ன செய்வது? “என்று கேட்டேன்.

“தொழில் தெரியாத ஒருவனுக்கு தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ள உதவுங்கள், “ என்றார்கள்.

“ தொழில் ஒன்றை சிறப்பாகக் கற்றுக் கொடுக்க இவனால் இயலாது என்றிருப்பின் என்ன செய்வது? “ என்றேன்.

“ அநீதமிழைக்கப்பட்ட ஒருவனுக்கு உதவட்டும்”  என்றார்கள்.

“அநீதமிழைக்கப்பட்ட ஒருவருக்கு உதவமுடியாத அளவுக்கு அவர் பலவீனராக இருந்தால் என்ன செய்வது?” என்று கேட்டேன்.

“ நீ உனது நண்பனுக்கு நன்மை செய்ய நினைக்கிறாயா? அவ்வாறெனில் அவனுக்கு எந்த தீங்கும் இழைக்காதிரு “ என்றார்கள்.

“ இறைவனின் தூதரே இவ்வாறு செய்தால் அவன் சுவனம் நுழைவான் என்று கருதுகிறீர்களா? என்று கேட்டேன்.

“ ஒரு இறை நம்பிக்கையாளன் இவற்றில் ஏதேனும் ஒரு பண்பை கைக்கொள்கின்றானோ, அந்த பண்பே அவனை கரங்களினால் பற்றி சுவனத்திற்கு அழைத்துச் செல்லும், என்றார்கள்.

(அறிவிப்பாளர் : அபூதர் அல்கிபாரி (றழி) , நூல்பைஹகீ)
``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
09/04/2015


No comments:

Post a Comment