Friday, 30 January 2026

மச்ச மாலை(புன்னக்காயல்)-கால் நாள் ரிஹ்லா #4

 


சாலையை மட்டுமே கவனிப்பதால் ஓட்டுதலையும் ஓர் ஊழ்கமாக மாற்றலாம் என வாசித்திருக்கிறேன்.ஆனால்  தூண்டில் போட்டு மீன் பிடிப்பது அதனளவிலேயே முழு ஊழ்கம்தான் என் ஜென்னியலாளர்கள் அடித்துக்கூறுகின்றனர்.

நானும் பள்ளிப்பருவத்தில் ஊர் கடற்கரையில் மீன் பிடித்தவன்தான் குட்டிப்பாறை,திருக்கை என முயற்சி திருவினையாகியிருக்கிறது..அவ்வப்போது நடந்த நண்டு வேட்டையைத்தவிர காலத்தின் ஓட்டம் தூண்டிலிலிருந்து என்னைத் தொலைவிலாக்கி விட்டது. தூண்டிலுக்கு மட்டுந்தான் தொலைவு.மற்றபடி கடல் பயணத்தின் வழியாகவும் ஆறுகளின் திட சாட்சியான மலைப்பிஞ்சுகளின் வீட்டுச் சேகரங்கள் வழியாகவும் நீரின் அண்மைக்கு குறைவேயில்லை.

மீன்களை அவர்களின் உலகத்திலிருந்து விடுவித்து நில உலகிற்கு அவ்வப்போது அழைத்து வரும் ‘தத்துவார்த்தப்” பணியிலுள்ள வலையொளியார் சாலிஹ் கொஞ்ச நாட்களாக அமலி நகருக்கும் கல்லாமொழிக்கும் அழைத்துக் கொண்டேயிருந்தார்.ஜென் முறையிலாவது ஊழ்கம் கைகூடுகிறதா? என்பதை சோதித்தறிய  நடந்தேறியது மீன்பிடி மாலை.

மதியம் ஒரு மணிவாக்கில் சாலிஹிடமிருந்து’ஒரு புதிய இடத்திற்குப் போகிறோம்’ என வட்சப்பில் தகவல் வந்தது, மூன்று மணியளவில் கிளம்பினோம். இடம்:காயல்பட்டினம் வடபாகம் கிராமம்.அதாவது தாரங்கதார வேதியியல் தொழிற்சாலையின்(DCW) பின்புறம் வரும் கடற்பகுதி.எங்களுக்கு முன்னரேயே சாலிஹின் நண்பர்கள் மூவர் அங்கு கிளம்பி விட்டிருந்தனர்.

காயல்பட்டினத்திலிருந்து ஆத்தூர்/குரும்பூர் செல்லும்புறவழிச்சாலையின் இடது புறத்தில் பிரியும் மண் பாதையில் சென்றோம்.இப்பகுதிகளுக்கு நான் இதுவரை சென்றதில்லை.ஏராளமான உப்பளங்கழிகள் தென்படத் தொடங்க வேதியியல் தொழிற்சாலையின் பின்னாம்புறத்தில் வந்து சேர்ந்தோம்.இவ்வளவு நெருக்கத்தில் இந்த ஆலையைஇப்போதுதான் பார்க்கிறேன்.

1958-59 ஆம் ஆண்டுகள்.காமராசரின் ஆட்சி..குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டம் தாரங்கதாராவில் சாஹு சிரியன்ஸ் ஜைன் என்பவர் நிறுவிய தாரங்கதாரா வேதியியல் தொழிற்சாலையின் கிளை காயல்பட்டினத்தில் நுழைந்தேறியக் காலகட்டம்.

கொல்லாமை,ஊனுண்ணாமையை மதமாகக் கொண்ட ஜைனர்கள் --‘பனியா’ எனப்படும் இந்திய தேசிய முதலாளி வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்.இந்தியாவெங்கும் சாலையோர வட்டிக்கடை தொடங்கி பென்னம் பெரும் தொழில்களுக்கு உடைமையாளர்கள்.

உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என விருப்பமூட்டி காயலர்களிடமும் சுற்று வட்டார கிராம மக்களிடமும் மாநில அரசிடமும்  பெற்ற நிலத்தில் ஆலையை அமைத்துள்ளனர்.

முதலில் குடிசை கொட்டகையில் ஞெகிழி உருளையுடன் தொடங்கிய கார சோடா உருவாக்கம் இன்று சி- பிவிசி,பிவிசி,செயற்கைஇரும்பு ஆக்ஸைடு நிறமிகள்,செயற்கை ருடில்,இடைநிலை வேதியியல் பொருட்கள்,அம்மோனியம் பை கார்பனேட்,சோடியம் பை கார்பனேட்,ஹைட்ரோகுளோரிக் அமிலம்,திரவ குளோரின்,ட்ரை குளோரோ எதிலீன்,ஊடாக்ஸ்,இரும்பு குளோரைடு,சோடியம் ஹைப்போ குளோரைட்டு,சோடா சாம்பல்,கார சோடா உள்ளிட்ட  இன்னும் சில வேதியியல் பொருட்களையும் உருவாக்குகிறார்கள்.இவற்றிற்கான ஆற்றல் தேவைகளுக்காக ஆலை வளாகத்திலேயே நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையமும் உள்ளது.

இத்தனைப் பொருட்களின் உருவாக்கக்கழிவுகள் எங்கு போகும்? என் சிறு வயதில் வைகறைப்பொழுதில் ஊர் முழுக்க குளோரின் வாடையை நுகர்ந்திருக்கிறேன்.பனிக்காலத்தில் அதன் தாக்கத்தில் காயல்பட்டினத்தின் வான் வெளியே மங்கி விடும்.கண்ணுக்கு முன் வெண் திரை விழுந்தது போலிருக்கும்.அவ்வப்போது ஊருக்குள் இராக்காலங்களில் அழுகிய முட்டையின் துர் நாற்றம் பரவியிருக்கிறது.பருவ மழைக்காலங்களிலும் மற்ற காலங்களிலும் மன்னார் வளைகுடா செந்நிறத்தில் மாறி விடும்.ஊரில் கடந்த இருபதாண்டுகளில் கண்,கால்,இடுப்பு என இதுவரை கேள்விப்பட்டிராத புற்று நோய்க்கட்டிகள்.புற்றினால் இறப்புகள் கூடுதலாகவே ஆலையின் மாசு குறித்த விழிப்புணர்வு உண்டாகியது.

ஊரின் வான்,கடல் பரப்புகளில் வேதியியல் கழிவுகளை புகையாகவும்,திரவமாகவும் வெளியேற்றியதன் விளைவு.கடல் நீரில் அளவுக்கு பன்மடங்கு கூடுதலாக பாதரசக் கழிவுகள்.பொது மக்களும் உப்பள உரிமையாளர்களும் பல போராட்டங்கள் நடத்தி முடித்தனர்.

மாவட்ட ஆட்சியர்,மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என முறையீடுகள் போய் இறுதியில் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் ‘கெபா’ சூழலியல் பொது நல அமைப்பு வழக்கு தொடர்ந்தது.வழக்கை தீவிரமாக விசாரித்த நடுவர் அவ்வப்போது விசாரணையில் கடுமையுங்காட்டினார்.இறுதியில் பழம் உண்டு கொட்டையை உமிழும் வௌவாலின் நீதிதான்.

அரசும் நீதியதிகாரம் பெற்ற அமைப்புகளும் ஒரு கீற்றைக்கூட கிள்ளவில்லை.நண்பர்கள் குழு நடத்தி வரும் காயல்பட்டினம் இணையதளத்தின் வாயிலாக கடலை அன்றாடம் கண்காணித்ததின் விளைவாக கடல் செந்நிறமாக மாற்றமடைவது நின்றது.ஆனாலும் திரவக்கழிவை நிற நீக்கம் செய்து கடலில் விடுவதாக ஊகமுண்டு.

தமிழ்நாட்டரசிற்கு சொந்தமான 700- 800  ஏக்கர்களை ஈன விகிதத்தில் குத்தகைக் கட்டணம் செலுத்தி தன் பிடியில் வைத்துள்ளது ஆலை.இது தொடர்பில் அரசிற்கும் இவர்களுக்கும் நீதி மன்றத்தில் வழக்கும் மேல் முறையீடும் நடைபெற்று வருகிறது.வடக்காத்தூரில் தனிக்குழாய் பாலம் அமைத்து தாமிரபரணியின் நீர் வளமும் இவர்களால் உறிஞ்சியெடுக்கப்படுகிறது.

பழைய நினைவுகள் மீண்டு வந்தன.உப்பளங்கழிகளுக்கிடையே பல்வேறு பாதைகள் புதிர் சதுரத்தைப் போல கிளை பரப்பி செல்கின்றன.அவற்றிற்குள் செல்லும்போது திசையழிகிறது.கதிரவன் நால் திசைகளிலும் சுழல்வது போன்ற தோற்ற மயக்கம்.

விளக்கு முதலான கருவிகளுடன் முதலாவது கண்காணிப்புக் கோபுரம் தென்பட அதன் கீழே ஊதா நிற உடையணிந்த காவலர் தென்பட்டார்.ஏதாவது சொல்வார் என எதிர்பார்த்தோம்.ஒன்றுஞ்சொல்லாமல் நின்றார்.

சாலிஹின் அணியினரையும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவியலவில்லை.கூகுள் வரைபடமும் சரிவரவில்லை.ஆங்காங்கே தென்பட்ட தொழிலாளர்களிடமும் காவலாளிகளிடமும் வழி கேட்டு தொடர்ந்தோம்.எனினும் கடற்கரையை அடைவது கடினமாக இருந்தது.

எனவே மீன் பிடிப்பதற்காக வந்தவ இன்னொரு அணியினரைப் பின் தொடர்ந்து புன்னக்காயல் செல்லும் வழியில் சாலிஹின் நண்பர்களுடன் இணைந்துக் கொண்டோம்.

சாலிஹின் ஆலைக்கு பின்புறத்தின் வழியாக கடலில் சென்று கலக்கும் உப்பாறு ஓடைப்பகுதியில் மீன் பிடிக்க முனையும்போது  அங்கு பணியிலிருந்த ஆலையின் காவலர் தடுத்துள்ளார்.அதில்தான் சூக்குமம்.மர்மத்தின் நாடிகழிவுகளைக் கடலில் கலக்கும் கமுக்கம் வெளியாகி விடும் என்ற அச்சம்தான்.

உப்பாற்றில் இவர்களின் ஆலைக்கழிவு ஒழுகிச் செல்லும் இடங்களின் அருகிலுள்ள நிலங்களில் கால் புதைந்து வெந்தவர்களின் செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டேயிருக்கிறது,இது மாதிரி காயப்படுபவர்களுக்கு மூச்சு முடையில்லாமல் பரிகாரம் செய்து வீட்டுக்கனுப்ப வடக்கு ஆத்தூரின் பிரபல தனியார் மருத்துவமனையொன்றிடம் புரிந்துணர்வு ஏற்பாட்டையும் செய்து வைத்துள்ளார்கள் ஆலை நிர்வாகத்தினர்.

பல வருடங்களுக்கு முன்பு இவர்களின் ஆலைக்கு முன்னால் அறிவிப்புப் பலகையொன்றை நிறுவினார்கள். “உயிரைக் கொன்று உண்ணாதே” என்ற சொல்லமைப்புடன்  குருதி சிந்தலுடன் அறுபட்டுக் கிடக்கும் மாட்டின் படமொன்றையும் அதில் வரைந்திருந்தனர்.

இந்த ஆலைக் குறித்த விழிப்புணர்வெல்லாம் வருவதற்கு முன்னர்  நடந்த நிகழ்வு.இது நடந்து கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளிருக்கும்.: தொடர் வண்டி துறையில் பயணச்சீட்டு பரிசோதகராகப் பணி புரிந்துக் கொண்டிருந்த ஏ.கபீர் ராஜா என்ற ஏ.கே.ராஜா என்பவர் ஆலைகளுக்கு வேதியியல் மூலப் பொருட்கள் வினியோகிக்கும் தொழிலையும் செய்து வந்தவர்.டிசிடபிள்யூ ஆலைக்கும் அவர் விநியோகஸ்தர்.அவர் தனது முகவரி அட்டை/அலுவலக கடிதத் தாள்களில் 'ஏ.கே.ராஜா' என்றுதான் குறிப்பிடுவார்.

ஒரு நாள் டிசிடபிள்யூ ஆலையில் கூட்டமொன்று நடந்திருக்கிறது.அதில் ஆலையின் அலுவலர்கள் உரிமையாளர்களுடன் வினியோகஸ்தர்களும் பங்கெடுத்த கூட்டமது. ஏ.கே.ராஜாவும் அதில் உண்டு. அங்கு வந்திருந்த ஏ.கே.ராஜாவின் நண்பரொருவர் "கபீர்! எப்படியிருக்கீங்க?" என நலம் கேட்டுள்ளார். இந்த நிகழ்விற்குப் பிறகு ஆலையிலிருந்து சரக்கிற்கான கோரல் எதுவும் ஏ.கே.ராஜாவிற்கு வரவேயில்லை.காரணத்தை ஆலை நிர்வாகிகளிடம் கேட்டபோது "ஒரு முஸ்லிமுக்கு ஆலையின் ஆதாயம் செல்லக் கூடாது என எங்கள் தாத்தா கட்டளையிட்டிருக்கிறார்"என்றனராம்.

வேதியியல் ஆலையின் அமைவிடத்திற்கு சாகுபுரம் என்ற வடமொழிப் பெயர் சூட்டி தனி பஞ்சாயத்தாக்க எடுத்த முயற்சி அன்றைய ஊர்ப் பெரியவர்களால் தோற்கடிக்கப்பட்டது.ஆனால் சாகுபுரத்திற்கென தனி அஞ்சல் நிலையமும் அஞ்சல் குறியீட்டெண்ணும் வாங்குவதில் வெற்றியடைந்துள்ளனர் ஆலை நிர்வாகத்தினர்.

எக்கட்சியின் தலைவர்கள் இப்பகுதிக்கு வருகை புரிந்தாலும் ஆலையின் விருந்தினர் மாளிகையில் தங்கிச் செல்லும் வழமையுடன் அரசியல் கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகளுக்கும் கனக்கும் ‘கொத்து’களும் பருவம் பொய்க்காமல் வழியறிந்து செல்கிறது.ஆலையின் சுற்று வட்டார ஊர்களில் ‘உதவி தெளிப்பு’ நடவடிக்கைகளையும் ஆலையினர் தவறாது செய்து வருகின்றனர்.

ஆலையினர் தங்களின் தேவைகளுக்காக நிறுவிய ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்ட கமலாவதி மேல்நிலைப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதை காயல்பட்டினத்துவாசிகள் பெருமையாகக் கருதி வருகின்றனர். விடிந்தும் விடியாமலும் ஊருக்குள் வரும் பள்ளிப்பேருந்திற்காக தங்கள் பிள்ளைகளை அழைத்து வரும் தாய்மார்கள் முடுக்கில் வைத்து பிள்ளைகளுக்கு பல் தேய்த்து விட்ட காலமும் உண்டு.இதற்காக அவர்கள் கையோடு குவளை நீரும் பற் தூரிகையையும்  கொண்டு வந்ததாக காயல் வரலாற்று ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளரான அமானுல்லாஹ் காக்கா பகிர்ந்துக் கொண்டார்.

புன்னக்காயலுக்குள் நுழைந்தவுடன் நீறிக் கனத்த மனம் சற்று கலைந்தது.புன்னக்காயல் –கொற்கை,மஞ்சள் நீர்க்காயல்,பழையகாயல்,காயல்பட்டினம்,வீரபாண்டியன்பட்டினம்,சோனகன்விளை எனப்படும் ஊர்களை உள்ளடக்கிய பண்டைய  கடல் வணிகக்காயல் நிலப்பரப்பின் ஒரு பகுதி.

காலனியாதிக்கக் காலத்தில் முதலில் போர்த்துக்கீசியர்களும் பின்னர் டச்சுக்காரர்களும் இங்கு தாவளமைத்திருந்தனர். தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் 1578ஆம் ஆண்டில் ஜான்-டி-பாரியா என்பவரால் புன்னைக் காயலில் நிறுவப்பட்டது. கத்தோலிக்க சமயத்தவரான பரதவர்களை பெரும்பான்மையினராகக் கொண்டுள்ள புன்னக்காயலில் தற்சமயம் மீன்பிடி மட்டுமே நடைபெறுகிறது.இளம் தலைமுறையினர் உலகம் முழுக்க கடலோடிகளாகவும் வணிகக் கப்பல்களில் பணியாற்றுவோராகவும் உள்ளனர்.

‘பின்னக்காயல்’ என உள்ளூர்க்காரர்களால் அழைக்கப்படும் புன்னக்காயலுக்கு வருவது இதொன்றும் முதன் முறையில்லை.பலமுறை வந்து போன இடம்தான்.இப்பயணம் ரிஹ்லா பதாகையின் கீழ் வருவதால் எழுத வேண்டிய தேவை.

”யன்னே(என்ன)….” என்ற சராசரி பின்னக்’காயலாரின் விளியில் ‘னே’க்குப்பின்னர் நீளும் ஒலி உயிர்,மெய் எழுத்துக்களுக்குள் அடங்க மறுப்பதால் அதை இசைக்குறியீடுகளில்தான் எழுத முடியும்.கடல் பரப்பின் மேல் நின்றாடும் காற்றையும் தாண்டி அவர்கள் இவ்வாறுதான் தங்களுக்குள் பேசிக் கொள்ளவே இயலும். படகின் ஒரு முனையில் உள்ளவர் தன் குரலை அடித்து நீட்டி சிற்றலையாக்கினால் மட்டுமே மறு முனையில் உள்ளவரின் செவிக்கு தான் சொல்வதைக் கொண்டு சேர்க்க முடியும். தரையில் பேசிக் கொள்வது பேசினால் தொண்டை வறண்டு தளர வேண்டியதுதான்.

‘பின்னக்’காயலின் மொழியின் இழுவைச் சுவையையும் மிஞ்சுவது அவர்களின் வசைச் சொற்கள்.தேயிலையில் இஞ்சிச்சாற்றைப் போல இறங்கும் வசவுகள் இல்லையென்றால் எங்கயோ ஏதோ கோளாறு என்று பொருள்.

தூண்டில் வளைவின் வழியாக கிட்டத்தட்ட அதன் முனை வரை சென்று தூண்டில் போட்டோம்.’போட்டோம்’ என்பதை விட ‘போட்டார்கள்’ என்பதுதான் சரி.நான் பார்வையாளன் மட்டுமே.மீன் பிடி சாதனங்களை பராமரிப்பதில் உள்ள சில தடைகளினால் தூண்டில் தொகுதி வாங்கவில்லை.மீன் பிடிக்கு வாழ்க்கைப்பட்டால் பிடித்தமான வேறு சிலவற்றை குறைக்க வேண்டி வரும்.எனவே ‘மீன்பிடித்தம்’ த்தை நாளைக்கும் ‘மீன் ஊழ்கத்தை இப்போதைக்குமாக அமைத்துகொண்டாகி விட்டது.

கரடு முரடான பாறைத்துண்டங்களுக்கும் ஊழ்க எத்தனத்திற்கும் அவ்வளவாக ஒத்து வராது போல. எப்படியோ நெல்லைச் சீமையின் வற்றா தாமிரபரணி ஆற்றின் பொழிமுகம் இதுதான் என்ற நினைப்பில் நேராகி விடுகிறது குறைக் கணக்கு.

நண்பர்களுடன் கடைசியாக வந்திருந்தபோது தூண்டில் வளைவிற்கும் ஊருக்குமான நில வழித் தொடர்பு 2024 இன் பெரு மழையால் துண்டிக்கப்பட்டிருந்தது.தற்சமயம் அதை சரி செய்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு இயற்கை பேரிடர்களும் ஏதாவதொரு தடத்தை விட்டுச்செல்லாமலிருப்பதில்லை. பெரு மழைக்கு முன்னர் தூண்டில் வளைவின் பக்கவாட்டிலுள்ள கடற்கரை தூய்மையாகவும் துல்லியமாகவும் இருந்தது இப்போது கோலப்பட்டுக் கிடக்கிறது.

அய்வரணியில் என்னைத் தவிர மற்ற நால்வரும் தாங்கள் கொண்டு வந்திருந்த தூண்டில்களில் இறால் துண்டங்களை கோர்த்து திசைக் கொன்றாய் எறிந்தனர்.

முதலில் இரு குட்டி கருந்திரளி மீன்கள் சிக்கின.அடுத்து கெழுத்தி மீன்கள் இரண்டு. கெழுத்தியை பொதுவாக ஆட்கள் விரும்பி உண்ணுவதில்லை.அவை கழிவையுண்ணும் என்ற பொது நினைப்பு. கடலில் எது கழிவு?எது உணவு? நான் வாங்கிக் கொண்டேன்.இருந்தாலும் எதிர் வந்த இரு உள்ளூர் மீனவர்களிடம் மீனைக்காட்டி கருத்துக் கேட்டோம்.மதிப்பெண்கள் 70:30 என்றிருந்ததால் அங்கேயே துப்புரவு பண்ணி வாங்கிக் கொண்டேன்.துண்டுகள் சீலா மீனின் பருப்பம்.வலிப்பம் பருமனின் சுவைக்காக அடுத்த நாள் மதியம் வரை காத்திருக்க வேண்டும்.

மற்றவர்கள் மீன் பிடித்தலைத் தொடர காற் புள்ளியளவும் நடந்தேறாத ஊழ்க எத்தனங்களைச் சுருட்டிக் கொண்டு  நானும் சாலிஹும் ஊர் திரும்பும் பாதையை ஆத்தூர் வழியாக அமைத்துக் கொண்டோம். மணி விலாஸ் உணவகத்தில் காரம் குறைவான பூண்டு ஊறுகாய் வாங்கிய பின் காஃபிக்கு சொல்லி விட்டுக் காத்திருந்தோம். நண்பர்களான இணையர் ஊரிலிருந்து அழைத்தனர். காஃபியும் வந்தது.நடப்பைச் சொன்னவுடன்”எங்களயும் கூப்பிடக்கூடாதா காக்கா? எப்டி உட்டுட்டு போவயோ ஏதாப்போவியோ”மாப்பிள்ளையும் பெண்ணும் மாறி மாறி பாட்டு.

இரண்டு நாட்கள் கழித்து நடந்த புறையூர் கடம்பா கால் நாள் ரிஹ்லாவிற்கு அழைத்தேன். மூச்சு பேச்சில்லை.இது மாதிரி கேட்டவர்களில் 90% பேர்கள் ஒரு போதும்இது போன்ற பயணங்களில் இணைந்ததேயில்லை.”ஓசாரப்பேச்சு ஒழவுக்காகாதுதானே.” இவர்களுடனான பேச்சின் முனைப்பில்  காஃபியின் இன்பத்தை இழந்ததுதான் மிச்சம்.

காத்திருந்த மறு நாள் மதியம் வந்தது. பொரித்ததில் முதல்  துண்டம் எனக்குத்தான்.நூல் கனத்திற்கு சேற்றின் மணம்.ஆனால் வீட்டாருக்கும் சாலிஹிற்கும் ஆவலாதியில்லை.கெழுத்தி நாட்டம் அதன் முடிவைக் கண்டாலும் கருந்திரளிக் கைவிடவில்லை.

 



 









26/01/2026 திங்கள்கிழமை




No comments:

Post a Comment