கேரள மாநிலம் கொண்டோட்டி மாப்பிளா கலா அகாடமி மொக்ரால் கிளையின் சார்பாக மொக்ரால் பள்ளிக்கூடத்தில் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்வுகளும் பொது நிகழ்வுகளும் நிறைந்த நாள் என்ற போதிலும் தொலைவிலிருந்து வரும் எங்களுக்காக துரித ஏற்பாடொன்றைச் செய்திருந்தனர் மொக்ரால் வாசிகள்.
காசர்கோடு மாவட்டம் நதிகளும் கோட்டைகளும் மொழிகளும் நிறைந்த பகுதியாகும். சப்த பாஷா சங்கம பூமி என்றழைக்கப்படும் அழகிய மாவட்டம். ஏழு மொழிகள் கூடும் நிலப்பகுதி என்றழைக்கப்பட்டாலும் பத்திற்கும் மேற்பட்ட மொழிகள் இங்கு வழக்கத்திலுள்ளன. இப்பகுதியின் மலையாளப் பேச்சு வழக்கு முற்றிலும் வேறுபட்டது. உன்னிப்பாகக் கவனித்தால் கேரளத்தின் மற்ற பகுதிகளில் இல்லாதத் தமிழ்ச் சொற்கள் சிதைந்தும் மருவியும் பேசப்படுவதை உணர முடியும்.
கேரளத்தின் பெரும்பான்மை சாயல்,உடல் மொழியிலிருந்து வேறுபட்ட
அமைப்பை இப்பகுதி ஆட்களில் கவனிக்கவியலும்.
காசர்கோடு மாவட்டத்திலுள்ள மொக்ரால் கிராமம் மாப்பிள்ளை இலக்கியத்தின் விளைநிலம். திருமணம், பொழுது போக்கு போன்ற நிகழ்ச்சிகளின் தாளங்கள் இவ்வூர் மக்களின் உணர்வுகளில் ஒன்றியது. பாட்டுக் கூட்டம் இல்லாமல் மொக்ரால் இல்லை எனலாம். இவற்றினாலேயே மொக்ரால் "இஸல் கிராமம்" என்று அழைக்கபப்டுகிறது. தமிழின் 'இயல் ' என்பதே 'இஸல்' என்று மாறியதாக மாப்பிள்ளைப் பாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மாப்பிள்ளைப் பாடல்களில் பெரும்பாலானவை சமயம் சார்ந்ததாக இருக்க மொக்ராலின் பாடல்கள் திருமணம், விளையாட்டு போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும் உள்ளன.
பாட்டுக்கூட்ட நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்கள் பாடப்படும் வழமை இங்கு நெடுங்காலம் நடைமுறையில் இருந்தது. தமிழகத்திலிருந்து சென்ற சூஃபி ஃபக்கீர்கள் வழியாக முஸ்லிம் தமிழ்ப் பாடல்கள் செல்வாக்கு பெற்றன. இங்கு நடைபெற்றக் கவியரங்குகளில் தமிழகத்திலிருந்து சென்ற புலவர்கள் பலர் பாடல்களை அரங்கேற்றினர்.
கோட்டாற்றுப் புலவர்கள் மலைபாரில் பாட்டுப் பாடச் செல்வது வழக்கம். அதில் மொக்ரால் தலையாய இடத்தைப் பிடித்துள்ளது. மொக்ரால் திருமணப் பாடல்களில் கோட்டாறு செய்யிது அபூபக்கர் புலவர் அவர்களின் சீறாக்கீர்த்தனைப் பாடல்கள் இன்றும் பாடப்படுகின்றன.
மொக்ராலின் தலையாய கவிஞர்களாக ஸாவுக்கார் குஞ்ஞி ஃபகீஹ் என்பவரும் அவருடைய மகன் பாலாமுப்னு ஃபகீஹும் விளங்குகின்றனர். முஸ்லிம் தமிழ்ப் புலவர்களை நாட்கணக்கில் தங்க வைத்து போற்றிய பெருமை இவர்களுக்குண்டு.
மங்களூருவுக்குச் செல்லும் பாதையில் மொக்ரால் இருப்பதால் வணிகத்திற்காகச் செல்பவர்களுக்கும் ஃபக்கீர்களுக்கும் வழித்தங்கலாகவும் இவ்வூர் விளங்கிற்று. மாப்பிள்ளை இலக்கியத்தின் முடிசூடா மனனராகத் திகழ்ந்த மகாகவி மோயின் குட்டி வைத்தியர் பாடல்களை அரங்கேற்றுவதற்காக பல வட்டம் இங்கு வந்துள்ளார். இங்கு தங்கியக் காலங்களில் கிடைத்த தமிழ்ப் புலவர்களின் தொடர்பும் இவரின் பாடல்களின் தமிழ்ச் செல்வாக்கிற்குக் காரணமாக உள்ளது எனலாம்.
ஏராளமான கவிஞர்களை வாரி வழங்கிய மொக்ரால் இன்றும் பாடகர்கள் நிறைந்த பகுதியாகவே உள்ளது. கேரளத்தின் அறியப்பட்டசூஃபிக் கவிஞரான இச்ச மஸ்தான் என்றழைக்கப்படும் இச்ச அப்துல் காதர் மஸ்தான் மொக்ராலின் மறுகரையிலுள்ள மொக்ரால் புத்தூர் எனும் ஊரைச் சார்ந்தவர் என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கண்ணூர் வளப்பட்டினத்தில் பழம்பொருள் வணிகம் செய்துக் கொண்டிருந்த இச்ச மஸ்தான் அவர்களுக்கு காயல்பட்டினத்தின் உமர் அல் காஹிரி அவர்கள் இயற்றிய பிரபலமான அல்லஃபல் அலிஃப் பைத்தின் (https://www.youtube.com/shorts/bWoVeiAP1kU )ஓலைச்சுவடி கிடைத்திருக்கிறது. அந்த பாடலின் சிறப்புக்களை அன்று கண்ணூரில் வாழ்ந்திருந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிமவர்கள் இச்ச மஸ்தானுக்கு விளக்கியதன் தொடர்ச்சியாக இச்ச மஸ்தான் மேற் கல்விக்கு காயல்பட்டினம் ஸாஹிபு அப்பா தைக்காவில் வந்து தங்கிப் பயின்றதாகவும் கூறப்படுகிறது.
மொக்ரால் புலவர்களின் பாடல்கள் மற்ற மாப்பிள்ளைப் பாடல்களின் மொழிநடையிலிருந்து மாறுபட்டிருப்பது துளுநாட்டின் மாறுபட்ட மொழி வழக்கினாலும் தமிழ்ப் புலவர்களின் செல்வாக்கினாலும் ஏற்பட்டதாகும்.
மொக்ரால் மாப்பிளா கலா அகாடமியின் பொறுப்பாளர்களில் ஒருவரான இஸட்.ஏ என்றழைக்கப்படும் ஜூல்ஃபிகர் அலீயின் ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சி செவ்வனே நடந்தேறியது.
இன்றையத் தலைமுறைப் பாடகர்களுடன் தங்கள் முதுமையின் சிரமத்தையும் பொருட்படுத்தாமல் முந்திய தலைமுறைப்பாடகர்களும் நிகழ்விற்கு வந்திருந்தனர். ஒவ்வொருவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பாடினர்.இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வாழ்க்கைப் பின்னணியைச் சார்ந்தவர்கள்.
பாட்டுக் கேட்டல் என்பது முற்றிலும் எண்ணியல் கருவி சார்ந்ததொன்றாக மாற்றப்பட்டு கச்சேரிகள் பெருமளவில் மறக்கப்பட்டக் காலகட்டமிது. என் சிறு பருவத்தில் விடிய விடிய பாட்டுக்கச்சேரிகளை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டிருக்கிறேன். இன்று தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போலி செய்தல் அடிப்படையில் நாகூர் ஹனீஃபாவைப் பின்தொடரும் நிழல் பாடகர்களைத் தவிர புதிய குரல்கள் இல்லை. சொந்தத் திறனிலும் குரலிலும் வளர்ந்த பாடகர்களின் தொடர்ச்சியானது 2020இல் மண் மறைந்த பாடகர் குமரி அபூபக்கர் அவர்களோடு விடைபெற்று விட்டது.
இந்நிலையில் பழையதைப் பற்றிக் கொண்டே புதிய பாடல்களையும் புனைவதும் பாடுவதுமாக விரையும் இசையானது மொக்ராலில் ஊர்மயப்பட்டிருப்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. புதிய இலௌகீகத் தேவைகள்,சுவைகள்,விருப்பங்களுக்கேற்ப பாடல்கள் கட்டப்படுவதும் இசைக்கப்படுவதுமானது ஒரு நெடிய பாடல் மரபு வரும் தலைமுறைகளுக்குக் கையளிக்கப்படுவதையும் அதன் நீடித்தத் தன்மையையும் உறுதிப்படுத்துகிறது.
மொக்ராலின் அஹ்மது இஸ்மாயீல் சாஹிப் அவர்கள் புதிய நிக்காஹ் மாலையை இயற்றியதோடு பல நவீனப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.கால்பந்தாட்டத்தைக் குறித்து இவர் எழுதியப் பாடல்கள் பிரபலமானவை. தென் கர்நாடகத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் குறித்தும் பாடல்களை இயற்றியுள்ளார்.
அகீதா மாலை என்ற ஆன்மீகக் காவியத்தை ஸாவுக்கார் குஞ்ஞு ஃப்கீஹ் இயற்றியுள்ளார். இவருடைய மகன் பாலாமுப்னு ஃபகீஹும் கவிஞராவார். இவர் தந்தை இறப்பதற்கு முன்னரே இளம் வயதில் இறந்து விட்டார்.
"அங்கணத்தில் அஞ்சு தாளம் ஆறும் கூடி பாடடா!
அக்குலச்ச அச்சிதப்பூ அம்பலத்தில் உண்டடா!
அங்கணத்தில் தாளமிட்டு தானமானம் நேடடா!
தட்டகெட்டி பிட்டுறுட்டி தச்சிகார் பொலிக்கடா!"
பாலாமுப்னு ஃபகீஹின் இவ்வரிகள் கவித்திறனுடன்
தஸவ்வுஃபின் ஆழத்தையும் சுட்டுகிறது.இதன் பொருளை மிடாலம் அன்ஸாரிடம் கேட்டபோது“முட்டைப் பொரித்து முழுக் கோழியும் வைத்து தட்டைப்பீங்கானில் தருவேன் மனோன்மணியே...”என்ற
குணங்குடியாரின் வரிகளை எப்படி கோதுடைக்கவியலாதோ அது போலவே பாலாமுப்னு ஃபகீஹின்வரிகளும் சூஃபி சங்கேதங்கள்
கொண்டவை என்றார்.திறப்புள்ளவர்களுக்கே திறக்கும் கமுக்க வாயில்கள்.
திருமணங்களிலும் கலைநிகழ்ச்சிகளிலும் மன மகிழ்வுக்காக அன்றி பொருள தேடும் நோக்கில் தான் பாடுவதில்லை என்றார் ஏ.கே.அப்துர் ரஹ்மான் ஸாஹிபு. இப்படியாகவே மொக்ராலின் பாடல் மரபு இன்றும் தொடர்கிறது.
பல்லாண்டுகளுக்கு முன்பு எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டர் இயக்கிய ‘இசல் கிராமம் மொக்ரால்“ ஆவணப்படத்தில் ஏ.கே.அப்துர்ரஹ்மான் ஸாஹிபு வலிவும் பொலிவுமாகப் பாடுவதைக் காண முடிகிறது.
மொக்ரால் இசல் கிராமம் ஆவணப்படம்பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இசையில் திளைக்கும் இக்கிராமத்தை மீளக் கண்டுபிடித்து தமிழுலகிற்குச் சொல்லியவர் மறைந்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் காக்காதான்.மொக்ராலுக்கு வந்து விட்டுப் போன கடைசித் தமிழ்ப்படைப்பாளியினுடையக் கண்ணியைப்பற்றிக் கொண்டு
மங்க விடாமல் செய்தவர். இக்கிராமத்திற்கான எங்களது ரிஹ்லா குழுவின் வருகையே தோப்பில் காக்காவிலிருந்து எங்களுக்குக் கடத்தப்பட்டு சாத்தியமானதுதான்.

.jpeg)






No comments:
Post a Comment