தொலைவிலுள்ள வீட்டு மாடியிலோஅல்லது பெயர் தெரியாத ஒரு மலைக்குன்றின் மீதிலோ எரியும் தனித்த ஒற்றை விளக்கைப்போல செவ்வாய் கோள் மிக அண்மையில் சிவந்து தெரியும் நாட்களின் ஓரிரவில்தான் இம் மாதிரியான தனித்த நினைவுகள் எழுகின்றன.
வாழைப்பழத்தில் ஒருவன் வைத்துக் கொடுத்த போதை மாத்திரையின் கிறக்கத்தில் யாரோ ஒருவரின் வீட்டு செத்தையில் தன்னை ஆடு என நினைத்து தலையை புகுத்திக் கிடந்த டில்லியப்பா.
சிறிய வயதில் காடையராக பார்த்து பிற்றை நாட்களில் சாயம் போன பஞ்சு மிட்டாயாக காட்சியளித்த சாட்டை நாய் போன்ற மனிதன்.
யானைத்தந்தம் போல கண்ணாடி அணிந்து வலது காலை சரித்து நடந்தவாறே அறிந்தவர் அறியாதவர் என எல்லோரிடமும் இன் முகங்காட்டும் மனிதர்,
நேசித்த,வெறுத்த,பொறாமைப்பட்ட
பெயரும் தெருவும் தெரியாமல் வெறும் தோற்றங்களாகவே கண்டுணர்ந்த, கண்டு கொள்ளாமல் கடந்து
சென்ற மனிதர்கள்.
நிரந்தர உள்ளமை ஒன்றிலிருந்து புறப்பட்டு இடையில் மலர்ந்து வீழ்ந்து மீண்டும் அந்த என்றென்றைக்குமான உள்ளமை நோக்கிய மீளல் என்ற தீராத பெருஞ்சுழற்சியில்தான் அவர்களும் நாமும்.அந்த ஓட்டத்தில் ஒரு அரைக்காற்புள்ளியாகக்கூட நாமும் அவர்களும் இல்லை.சாசுவதத்தை முறுகப்பிடித்து ஒற்றைப்படுத்தலை அத்திரவத்தில் கரைத்தழிப்பதைத் தவிர பிறிதொரு வழியுண்டோ கண்ணே ரகுமானே?
No comments:
Post a Comment