1
வீட்டுத்தோட்டத்திற்கான மீன் அமில செய்முறை கையேட்டிற்காக
உலோகப் பேழையில் தேடும்போதுதான் கமருத்தீனின் கண்ணில் அது தென்பட்டது.
வாப்பாவின் நூல் சேகரங்களுக்கு நடுவே கிடந்தது அக்குறிப்பேடு.முகப்பு
அட்டையின் வலது மூலை சிறியதாகவும் வள்ளிசாக பிறை வடிவிலும் அது கிழிபட்டுக் கிடந்த
விதம்தான் அவன் கவனத்தை ஈர்க்கக் காரணமாகியது.
வாப்பா வஃபாத்தாகி மூன்றாம்
கத்தம் முடிந்த பிறகு அவரின் வார்,சட்டை,தொப்பி, தஸ்பீஹ் மணி,காலணி,கைக்கடிகை
என ஆளுக்கொன்றாய் உடன்பிறப்புக்கள் கைக்குள்ளாக்கிட புத்தகப் பேழை மட்டும் போட்டியில்லாமல்
இவனுக்கு வந்து சேர்ந்து நான்கு வருடங்கள்.
‘மனாம் விளக்கம்’ -- ஊதா
நிற மசியால் அதன் முதல் பக்க எழுத்து. வாப்பாவின் கையெழுத்து.அவரின் எழுத்துக்கள் எப்போதும்
சிந்திய கார நொறுவையின் தோற்றங்கொண்டவை. அதிலும் அவர் இடும் ‘ம’ எழுத்தின் தலை எப்போதும் ஏதேனும் கனமான
பொருள் விழுந்து நசுங்கியது போல நெளிந்துதான் இருக்கும்.
பல்வேறு சமயங்களில் தான் கண்ட கனவுகளுக்கு வரிசை எண்ணுடன்
இடம்,நாள்,தேதி,மணி,நிமிடம் உட்பட இட்டு எழுதி வைத்திருந்தார். பறவைப்பார்வையில் தலை
முதல் கால் வரை பக்கங்களை புரட்டும்போது மனத்திற்குள் சிறு படபடப்பு எழுந்து தணிந்தது.
1.செங்கல் கட்டுகளின் மேல் படரும் பருத்த நத்தைகளில் ஒன்று
ஊரும் புழு ஒன்றின் உடல் கண்டமொன்றை பிய்த்துத் தின்கிறது.
2.‘வெள்ளை நிறத்திலான தொதலை சாடை விளங்காதவர்கள் உண்கின்றனர்.
3.வீட்டு மெத்தைக் கதவை மூவர் காலால் எத்துகின்றனர்.நானும்
திருப்பி சுவற்றிலும் கதவிலும் தட்டுகிறேன்.தட்டுபவர்கள்
கள்ளர்கள் எனத் தோன்றியதால் மூத்தவனிடம் வீச்சரிவாளை எடுக்கும்படிக் கத்துகிறேன்.
மூன்றாம் கனவின் திடப்பொருளாக தானும் அந்த வீச்சரிவாளுமிருந்தது
கமருத்தீனுக்கு பரவசமூட்டியது.வீட்டைத் துப்புரவு செய்யும்போது பரணிலிருந்து கிடைத்த
தோல் உறையிட்ட வீச்சரிவாளை கொத்தனார் கேட்ட பிறகும் தான் கொடுக்காததை நினைத்து ஆறுதலடைந்தான்.
“… அதை மீறான் அப்புவிடம் கொடுத்து துவைந்து வைத்துக் கொண்டால் நல்லதுதான்….”
சுவையான பல நெடு குறுங்கனவுகளுக்கிடையே மினா குளியலறையில்
வாசம் மிக்க இரண்டு சோப்புக்கட்டிகளின் மேல் தான் வழுக்கி விழுந்தது, முட்டு முடுக்கொன்றில்
அம்மணத்துடன் தலைகீழாக சிறுமியொன்று நின்றது… என பல வகையும் வண்ணமுமான கனவுகள்.
சில கனவுகளுக்கு தலைப்பிடப்பட்டிருந்தது. மற்ற சில கனவுகளுக்கு
அக்கனவுகளை வரவழைத்தற்குக் காரணமாக இருக்கும் என அவர் கருதியிருந்த சில நடப்புகளை முன்னொட்டாகவும் கனவு கண்டதற்குப்
பிறகு அது எவ்வாறு பலித்தது என்பதைப் பின்னொட்டாகவும் எழுதப்பட்டிருந்தது. பல இடங்களில்
அக்கனவிற்கான ஆலிம்களின் விளக்கங்களை அவர்களின் பெயர்களுடன் குறிப்பிட்டிருந்தார்.
சில குறிப்புகள் அவ்வாறான எந்த சீருமின்றி தோன்றிய மேனிக்கு தாளின் விளிம்புக் கோட்டிற்குள்ளும்
பக்கவாட்டாகவும் பாதியும் முழுமையுமான சொற்களில் வரையப்பட்டிருந்தன.
சில கனவுகளுக்கு மதிய வெய்யிலைப்போல நேரடிப்பொருளிருந்தது.சில
இரவின் முணுமுணுப்பைக் கொண்டவை. தர்க்கம், பொருளின் வெளிகளுக்குள் அடங்காதவை பல.பருந்தைப்போலிருக்கும்
வாப்பாவின் கனவுகளுக்குள்ள உயரத்தை அதன் விளக்கங்கள் எட்டவில்லைதான்.கனவுகளை மட்டும்
தேர்ந்தெடுத்து விரித்தால் அவை புதிரும் மாயமும் கொண்ட புதினமாக உருக் கொள்ளும்.
வாப்பாவின் அண்மையை அவரது சொற்களின் வழியாக மட்டுமே அரிதாக
அறிந்தவன் கமருத்தீன்.அவர் மய்யித்தாக கிடத்தப்பட்டிருக்கும்போது
நெற்றியில் அவன் கொடுத்த முத்தம் இறுதியானதுடன் முதலானதுமாகவும் இருந்தது.
‘மட்டையின் கொழும்பு’ என தலைப்பிட்டிருந்த அக்கனவுக் குறிப்பைக்
கண்டவுடன் அயல் நிலத்தின் பெயர் அவனை சுண்டியது.இரண்டாவது வரியிலிருந்து மூன்றாவது
வரிக்கு கண் செல்கையில் காதருகில் யாரோ அப்பெயரை கிசுகிசுப்பதைக் கேட்டு திடுக்கிட்டான்.
ஏடு கை தவறியது. அந்த ஓசையில் சுவர் கடிகைக்குப் பின்பக்கம் போய் கரு நீல பல்லியொன்று
துடித்துப் பதுங்கியது.பேழைக்கருகில் உள்ள சாளரத்தின் வழியாக தோட்டத்தை எட்டிப் பார்த்தான்.
மர உச்சிகளின் சலனத்தைத் தவிர அங்கு எதுவுமில்லை. காதில் ஒலித்த அக்குரல் வாப்பாவின்
வழமையான கொடி கட்டிய குரலாக இல்லை.
அக்கனவுக் குறிப்புகளின் மேல் தனக்கு ஏன் ஈடுபாடு வருகிறது
என்பதை யோசிக்கும் நிலையில் அவன் மனம் இல்லை. திறந்துக் கிடந்த பேழையை மூடி விட்டு
சாய்வு நாற்காலியை இழுத்துப் போட்டு மனம் நிலைப்படும் வரை அமர்ந்திருந்தான். செம்புக்
கலத்திலிருந்து நீரருந்திய பின் ஏட்டை வாசிக்கலானான்.
இப்படித் தொடங்கியது:’” மகுரிபுக்கும் இசாவுக்கும் இடைப்பட்ட
வக்து. ராமேசுரம் பஸ் ஸ்டேண்டில் அந்த ஒரு பஸ் மட்டுமே தென் வடலாக நின்றிருந்தது.
டிரைவரிடம் “இது திருச்சந்தூர் போற வண்டியா? எனக் கேட்டதற்கு அவர் சொன்ன ஜவாபு எனக்கு
சரியாக விளங்கவிலையென்றாலும் வண்டி அங்கு போகும் என்பதை யூகித்தபடி ஏறிக் கொண்டேன்.”
இந்த பத்திக்குப் பிறகு மூன்று வரிகள் இடைவெளி .அடுத்த
பத்தியின் தொடக்கம். “என்னோடு ராமானுஜம் போட்ல ஒன்னா வந்த சிலோங்காரனும் கோட்டாத்துக்காரனும் வண்டிக்குள்ள
ஏறி விட்டிருந்தனர்.
நா சீட்டுல உக்காரப்போகும்போது அங்க ஏற்கனவே ரண்டு எள வட்டப்
பெண் பிள்ளைகள் இருந்தனர். உடுப்பைப் பார்க்கும்போது இருவருமே கோசாப் பெண்கள். நான் தயங்கி நின்றபோது முன்னுக்கு இருந்தவள்
என்னைப் பார்த்து புன்னகைத்தாள். அவள் பல்லின் வெள்ளை நிறம் பஸ்ஸின் மஞ்சள் பல்பு வெளிச்சத்திலும்
தெளிவாக தெரிந்தது. நிலாவைப்போல இன்னும் அந்த ஒளிவு தலைக்குள்தான். தன்னருகில் சும்மாக்
கிடந்த சீட்டில் என்னை உட்காரச்சொல்லி கண் சைகை காட்டினாள்.”
“அதோடு முழிப்பு தட்டியது. மீதி கனவு புகையாகி கலைந்து
ஏமாத்துக்காட்டியது போல இருந்தது.நான் கட்டிலில் படுத்துக் கிடப்பது நினைவுக்கு வந்த
பின்னாலயும் பஸ்ஸுக்குள் இருப்பது போல இருக்கவே எழும்பி நின்றேன். அதுக்கு பொறவுதான் அது கனவு என்பது ருஜூவாயிற்று.”
இவ்வளவுதான். அதற்கான விளக்கம் என கால் பத்தி அளவிலான குறிப்பு
மட்டுமேயிருந்தது. குளிக்கும்போது மட்டுமே பனியனைக் கழற்றும் வாப்பா கமருத்தீனின் முன்
வந்து நின்றார். வளரிளம்பருவத்தில் வீட்டாங்கலை கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது
“வெக்கங் கெட்டவனே”என்ற கூச்சலில் தூக்கங்கலைந்த அவன் சுவர் உடைந்து விட்டது என நினைத்தான்.விஷயம்
புரிந்து எழுந்திரிக்கும் முன் தொடையில் மர அடிக்கோல் பட்டுத் தெறித்தது. அடிபட்ட இடத்தைத்
தடவினான். தொண்டையடைத்தது.
வாப்பா ஹயாத்தாக இருந்த
வரைக்கும் எளிதில் அணுக முடியாததொரு புதிர்க் கட்டம். அவரது காலுக்கு என்றாவதொரு நாள்
இரவில் அவன் விண்டோஜென் மருந்து தேய்த்து விடும்பொழுதோ அல்லது ஊரில் ஏதாவது நல்லதும்
அல்லதுமான பெரு நிகழ்வுகள் நடக்கும் நாளில் மட்டுமே அவரின் எஃகுக் கோட்டை மதில்கள்
சற்றே நெகிழும்.. அப்போது அவர் பகிரும் வாழ்வின் நினைவுச் சேகரங்கள் கூட பிற மனிதர்கள்
பற்றிய அல்லது தன் வாழ்வின் வெளி வட்டத்தில் நடந்த அபூர்வ நிகழ்வுகளாக மட்டுமே இருக்கும்.
கமருத்தீனுக்கு தங்கை பிறந்ததிலிருந்தே உம்மாவை விட்டு வாப்பா
விலகிக் கொண்டார்.அதை இப்படிச் சொன்னால் சரியாக இருக்கும்.புதிய குழந்தைக்கு
தேவைப்படும் அதீத கவனம் மிக்க ஆறு மாத காலம் கழிந்த பிறகும் கூட உம்மாவுடனான நெருக்கத்தை
வாப்பா மீட்டவில்லை. இடைவெளியை இறுகப் பற்றிக் கொண்டார்.
வீட்டின் எதிரியில் இருந்த சிப்பி இலச்சினை கொண்ட தகரக்
கூரை சாப்பில்தான் மழைக்கும் கோடைக்கும் தங்கல். நீரில் பழுத்து ஊறிய இலையின் வாசம்
வீசிக் கொண்டிருந்த சாப்பில் குருவிகளுக்கு அப்புறம் அணில்களும் காக்கைகளும் அவர் கையில்
உணவுண்டன. ஒரு டிசம்பர் காலையில் அவர் அணிந்திருந்த புதுச் சட்டை வியர்த்து தெப்பமாகியிருக்க
வீட்டிற்குள் வந்தவரை உம்மா பாயில் படுக்க வைத்தாள். அன்று லுஹர் பாங்கு சொல்லி அரை
மணி நேரத்தில் அவர் தன் கடைசி மூச்சிலிருந்து விடுபட்டார்.
தாடியும் மீசையும் வளர்ந்த பின்னர் வரும் கனவுகளுக்குப்
பிறகுதான் வாப்பாவின் அந்த விலகல் கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது. ஒரு கட்டத்திற்கு
மேல் அவ்வெண்ணத்தை வளர்த்தெடுக்க மனம் கூசியதால் நிறுத்திக் கொண்டான்.குறிப்பேட்டை
வாசித்த பிறகு ‘வாப்பாவை முழுமையாக அறிதல்’என்பதின் கீழாக இது வரும் என தன்னைத்தானே
ஆற்றுப்படுத்திக் கொண்டான்.
வாப்பாவின் வரிகளிலிருந்து தாவி அக்கனவிற்கான ஆலிமின் விளக்கமெதுவும்
இருக்கிறதா? எனத் துளாவியதில் சோனா சொக்கட்டை ஆலிமின் பெயரிட்டு அப்படியொருக் குறிப்பு
இருந்தது.அதற்காகவும் அவ்விளக்கத்தை சொன்ன சோனா சொக்கட்டை ஆலிம்சா இன்னமும் உயிரோடு
இருப்பதற்கும் இறைவனுக்கு நன்றியறிவித்தான்.
ஆலிம்சாவின் உண்மைப் பெயர் குலசேகரப்பட்டினத்துக்காரர்களுக்கே
மறந்து விடுமளவுக்கு சோனா சொக்கட்டை என்ற பட்டப் பெயரில் அவர் பிரபலமாகி விட்டிருந்தார்.சோனா
என்பது அவரின் குடும்பப் பெயர் என்பது அவனுக்குத் தெரியும். சொக்கட்டை என்பதற்கு என்ன
பொருள்?. வாப்பாவிடம் கேட்டதற்கு வாப்பா தன் வாய் பக்கம் கையை வைத்தவாறே மெது குரலில்
சொன்னார்”ஆலிம்சா பம்பாயில உருண்டு ஆடினவருங்கறதுனால அந்த பேரு.”
வயதின் முதிர்விலிருந்தார் சோனா சொக்கட்டை ஆலிம். மறதியினால்
வழி தவறி வேறு வீடுகளுக்குப் போய் தன் மனைவியின் பெயரைச் சொல்லி “இது அவள் ஊடா?” எனக்
கேட்கத் தொடங்கியது வீட்டார் கவனத்திற்கு வரவும் அறையின் நிறத்திற்கேற்ப வாசலின் மீது
திரையைத் தொங்க விட்டிருக்கின்றனர். அதன் பிறகே வெளியே செல்வதற்கான முரண்டை கைவிட்டிருக்கிறார்.
தனது வாப்பாவின் பெயரைச் சொன்ன பிறகே அவரைப் பார்க்க விட்டார்கள்
வீட்டார். தொட்டி மீனைப்போல ரோமன் எண் சுவர்க் கடிகையின் ஊசல் இங்குமங்கும் அலைந்து
கொண்டிருக்க முதிர்ந்த தோலின் வாசத்தில் அறை நிறைந்திருந்தது.
“வந்த விஷயத்த சுருக்காச் சொல்லுங்கோ” என்றவரிடம் வாப்பாவின்
கனவை விளக்கினான். தன் கண்கள் மேல் விழுந்து மூடியிருக்கும் இரப்பையை இரண்டு கைகளாலும்
விரித்துப் பிடித்தார். அவருக்கு தான் சொன்னது கேட்கவில்லையோ எனத் தோன்றியது.
கமருத்தீனைக் கூர்த்த பிறகு “அல்லாகு நன்மயத் தர! மனாம்
கண்ட ஆளுட வயசென்ன?.’’தடுமாறினான்.கொஞ்சம் நேரமெடுத்து குறிப்பேட்டிலுள்ள கனவின் தேதியையும்
வாப்பாவின் பிறந்த தேதியையும் கணக்குப் பார்த்து “அறுவது” என்றான்.
“பெரிய வாசல் படி
தட்டுப்படுது” நடுங்கும் குரலில் ஒற்றை வரி விளக்கம் சொல்லும்போது சளிக்கட்டிக் கொண்டு
இறுதி வரி கமறியது.அவ்வளவு குறைவாக அவர் சொல்லி
முடித்துக் கொண்டதில் கமருத்தீனுக்கு ஏமாற்றம்தான்.இருபது வருடங்கள் கழித்தும் அவ்விளக்கத்தில்
ஓர் எழுத்துக் கூட மாறவில்லை என்பது அவனின் ஏமாற்றத்தை பெரிதும் இளக்கியது.கூடுதல்
விளக்கத்தைக் கேட்கும் முன் தன் வாப்பாவை ஆலிம்சா நினைவில் வைத்திருக்கிறாரா? என்பதை அறிய நாடினான்.
“நான் கவுஸ் ஹாஜியார் மகன்”. அவர் கண்களைப் பார்த்து உரத்துக்கூறினான்.
கத்த வேண்டாம் என்பதாக கை சைக்கினை செய்தவர் “எந்த கவுஸ்?” என முணுமுணுத்தவாறே “பிள்ளய்க்கு
அசலூரா?” சாய்வு நாற்காலியின் வலது கை ஓரத்தில் ஒருக்களித்தார்.
ஊது அத்தர் குப்பியை அவரது வலது கை விரல்களைப் பிரித்து
அதற்குள் வைத்து மூடும்போது கை நடுங்கிக் கொண்டிருந்தது.சலாம் சொல்லி விட்டு படியிறங்கினான்.
உம்மாவிடம் கேட்டுப்பார்ப்பதைப் பற்றியும் அவன் பல கோணங்களில்
ஆலோசித்தான். கண்ணில் விழுந்த துரும்பை ஊசியால் துளாவியது போலாகி விட்டால்….?.பெரிய
வாசல் படியை இன்னும் துலக்க வேண்டுமென்றால் அதற்கான ஒரே வழி வாப்பாவெனும் கோட்டையின் புறவாசல்தான். அதன் வழியாகப் புறப்படும் தடங்களைத் தேடி மெனக்கெடுவதைத் தவிர
வேறு வழியில்லை.
தேடல் பட்டியலில் கோட்டாறு இராமேசுவரம், தலைமன்னாருடன்
அவர் தொழில் செய்த கண்டி மாவட்டத்தின் கேகாலை முதலான ஊர்களும் வரிசைப்படி பயண வரைபடத்தில் சேர்ந்துக் கொண்டன.
கோட்டாறிலும் இராமேசுவரத்திலும் பிடிமானம் கிடைக்காது என
அவனக்குப் புரியாமலில்லை.இருந்தாலும் இம்மறைவெண்களின் வழியேதான் வாப்பாவின் புறவாசல்
தடமென்ற பூட்டின் வாய் திறக்கும் என அவன் நம்பினான்.
நாட்களை சுணக்காமல் கோட்டாறுக்கு பயணப்பட்டான். அவன் எண்ணியிருந்தபடியே
நேரடித்தடங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆஃப்ரிக்கக் கண்டத்தை நோக்கி செல்லத் தொடங்கியிருந்த
அங்குள்ள பின் தலைமுறையினருக்கு சிலோன் என்பது வாப்பா,அப்பாக்களின் காலத்திரவத்துக்குள்
உப்பாகி கரைந்து விட்டிருந்தது.
அதில் அவனுக்கு சிறிய அசதி ஏற்பட்டாலும் திட்டமிட்டபடி
இராமேசுவர பயணம் மேற்கொள்வதற்கு முன்னால் ஹஜ்ஜுக்கு போன இடத்தில் நேர்ந்த அவனது உம்மாவின்
மவ்த்திலிருந்து மீள அரை வருடமெடுத்தது.அதன் பின்னரான
வாழ்க்கையின் சுழிப்பில் இராமேசுவரப் பயணத்தையே மறந்து விட்டிருந்தான்.
தூத்துக்குடிக்கும் கொழும்பிற்குமிடையே பயணிகளுக்கான சொகுசுக்
கப்பல் அறிவிப்பு பெரும் விளம்பரங்களுடன் தொடங்கப்பட்டது. கூட்டாளிகளுடன் சேர்ந்து
இலங்கைக்கு இரு வார பயணம் போய் திரும்பலாம்.அதன் பிறகு மிச்சமிருக்கும் இராமேசுவரக்
களாவை நிறைவேற்றலாம் என்ற திட்டத்தின்படி இலங்கைப்
பயணம் முதலில் நடந்தேறியது.இனி இராமேசுவரம்தான் மிச்சம்.
தனுஷ்கோடி அழிவு பற்றிய உள்ளதும் இல்லாததுமான கதைகளின்
நுனிகளை நவ சுவைகளில் கொஞ்சம் முக்கியெடுத்து கூட்டாளிகளிடம் கணக்காக இளக்கி விட்டதோடு
இராமநாதபுர நிலத்தின் மீன் சமையலின் சேர்மானக் கூட்டு பற்றியும் சொல்லி நாக்கில் தீப்பற்ற
வைத்தான்.
ஏழு பேர் பயணத் திட்டத்தில் சேர்ந்தனர். ஒரு தொலைபேசி உரையாடலில்
இப்பயண ஏற்பாட்டின் தாரதம்மியம் பெருகி கமருத்தீனின் வெளியூர் நண்பர்களுக்கும் கசிய
எல்லாமுமாக சேர்ந்து பதினைந்து பேர் கொண்ட குழுவாக விரிவடைந்தது.
2
இராமேசுவர தேசிய நெடுஞ்சாலையில் அப்படியொன்றும் நெரிசலில்லை.
ஓட்டுநர் தனது டூரிஸ்டர் வண்டியை மெதுவாகத்தான்
ஓட்டி வந்தார். பெரியபட்டினத்தில் உள்ளே தள்ளிய பொரித்ததும் ஆக்கியதுமான பாறை மீன்
சாப்பாட்டின் கிறக்கத்திலிருந்து அவர் இன்னும் விடுபட்டிருக்கவில்லை. பழகிய இடங்களின்
மீதான அலட்சியத்துடன் கொப்பளிக்கும் வெப்பமும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். வெய்யிலின் ஆதிக்கத்திற்கு கடல் காற்று மட்டுமே
விதி விலக்காகியிருந்தது.
கமருத்தீன் தலைமையில் இராமநாதபுரச் சீமையைப் பார்க்கக்
கிளம்பிய பதினைந்து பேர்களடங்கிய பயணக்குழுவில் ஆய்வாளர்,வணிகர்,மாணவர்,எழுத்தாளர்,
மருத்துவர்,பதிப்பாளர்,உயர் தரத்துக்கும் நடுத்தரத்துக்கும் இடைப்பட்ட வாழ்க்கை வாய்க்கப்பெற்ற
மனிதர்கள் என எல்லாக் கலவையும்.
வைப்பாறு செய்யது ஷம்சுத்தீன் தர்கா தொடங்கி வேதாளை கடலோரத்திலுள்ள
போர்த்துக்கீசியரின் போர்த் தடங்கள் வரை பார்த்து விட்டு இறுதிக்கட்டமாக இராமேசுவரத்தையும்
தனுஷ்கோடியையும் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.
“ பெயிண்ட் டப்பா அப்டியே முழுசா உடம்புல கவுந்த மாதிரி
இல்லாட்டி வெல்டிங் பத்த வைச்ச மாதிரி இங்க உள்ள முக்கால்வாசிப்பேர் ஏன் இவ்ளோ கறுப்பாயிருக்கிறாங்க?”.
தன் கேள்விக்குள் தோயும் நச்சை டாக்டர் ரபீக் அறியாமலில்லை. பெரும்பாலும் மூளையின்
மேல் நெளியும் புழுவிற்குத்தான் வெற்றி.
“இங்கே முப்போகமும் விளயுறது வெயிலுங்கறதுனால அதத் தாங்குற
அமைப்புக்கு ஆட்களயும் ஆண்டவன் கறுப்பாவே படச்சிட்டான். வெள்ளயா உள்ளவங்களுக்குத்தான்
வெயிலும் வேர்வயும் பெரச்சன. ஒழிச்சுக்கட்டுறதுக்கு வெள்ளயா ஒன்னும் மிச்சமல்லேங்கறதுனால
கருப்பா உள்ளவங்கள வெயிலு ஒன்னும் பண்ணாது.“
அலெக்ஸின் மறுமொழிக்குப் பிறகு அவன் முகத்தையே உற்று நோக்கிக்
கொண்டிருந்தான் டாக்டர் ரபீக். அவனோ பாம்பன் பாலத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கியிருந்தான்.
புதிய இரயில் பாலத்திற்காகக் கட்டப்பட்ட தூண்களுக்கிடையே
கடல் இளம் பச்சை நிறங்கொண்டு கிடந்தது. சரிகை பிணைந்த தீ நிறக்கொடி கட்டப்பட்ட இராஜஸ்தான் பதிவெண்ணுள்ள வண்டியை பாலத்தின் நடுவில் ஒதுக்கி நிறுத்தியிருந்தனர்.
நான்கு மணிக்கு பிறகு தனுஷ்கோடிக்குள் ஊர்திகளை காவல்துறை
உள்ளே விடாது என்பதால் வண்டிக்குள்ளிருந்த யாருக்குமே இராமேசுவரம் தீவின் நிலப் புதினங்களைக் கவனிக்கத்
தோன்றவில்லை.இலக்கை சென்றடையும் அவசரம் எல்லோரையும் கவ்வியிருந்தது. நகரின்
பரபரப்பு அடங்கி தனுஷ்கோடிக்கான தார்ச்சாலையின் இரு பக்கவாட்டுகளில் குவிந்து கிடக்கும்
வெண் மணல் குன்றுகளிலிலிருந்து இசையூற்றாக பீறிடும் மௌனம்.
ஏகாந்த வானமும், பூச்சி முள் காடுகளும் உப்பு வனத்தை படைத்திருந்தன.
எவ்வளவு பேர்கள் சூழ்ந்திருந்தாலும் சரி அதையெல்லாம்
கணக்கிலெடுக்காமல் பாய்வதற்கான தருணங்களுக்காக மட்டுமே காத்திருக்கும் வேட்டை விலங்கின்
முன் தனித்து விடப்பட்ட ஒற்றை மனிதனின் நிராதரவை மட்டுமே தரும் ஈரமற்ற வனம்.
துருவின் மணம், கறுப்பு வெள்ளை திரைப்படக்கால பாடல்களின்
ஏக்கம் தகிக்கும் தாளம், வெளிச்சத்திலிருந்து வேறுபட்டு நிற்கும் இரவின் தனிக்கண்டம்,
திணிக்கப்பட்ட பல பத்தாண்டுகளின் தனிமை என அனைத்தின் கீழுமாக மொத்த மணல் வனம்.
வட்சப்பில் அனுப்பப்பட்டிருந்த தனுஷ்கோடி கடற்கோள் அழிவு
வரலாற்றை வண்டியிலிருந்த எல்லோருமே வாசித்திருந்தனர். அறுபது வருடங்களுக்கு முன்னர்
எண்களின் கூட்டுத் தொகையாகக் கடக்கப்பட்ட இறப்புகளின் துயரம் அனைவருக்குள்ளும் ஏதோ
ஒரு விகிதத்தில் பற்றிக்கொண்டிருந்தது.
கடல் பேரலைகளில் அடித்து செல்லப்பட்ட பாசஞ்சர் இரயிலுக்கு கடைசியாக சமிக்ஞை அளித்த நிலைய அலுவரின்
நேர்காணல், இரவும் பகலும் நீடித்த மழை புயல் கடல் சீற்றத்தில் மாட்டிய ஆயிரக்கணக்கானோரில்
சில பத்து பேர்களை மட்டுமே காப்பாற்ற முடிந்த நீச்சல் காளியின் கதை, கண்டி மகராசன்
என்ற பாசத்தினாலேயே எம் ஜி ஆரின் புதுப்படம் வெளியானவுடன் அதைப்பார்ப்பதற்காக கழுத்தில்
அதே பளீரிடும் சிவப்பு நிற துண்டைக்கட்டிக் கொண்டு தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு
நீந்தியே வந்த கல்லாறு தோட்டக்காட்டான்…. என பெருந்துயரத்திலிருந்து கிளைத்த விதம் விதமான கதைகளிலிருந்து 1995இல் நடந்த கூரியூர் ஜின்னா கொலைப்படலம் வரை
யாருக்குமே பேசித்தீரவில்லை.
அந்திக் கதிரவனின் மஞ்சள் ஒளியினாலும் கூட மணல் திட்டுக்களின்
வெண்மையைக் குன்ற வைக்க இயலவில்லை. வழியில் இரண்டு கட்டணச்சாவடிகளைக் கடந்த பிறகே ஓட்டுனர் வாய் திறந்தார். சிகரெட்டைப் பற்றியவாறு “ பொரிச்ச மீனுக்கும் தேங்காப்பால்
ரசத்துக்கும் ஒர்த்தன் சொக்கலேன்னா அவனோட ஒடம்புல
ஏதோ ஒன்னு சரியில்லேன்னுதான் அர்த்தம்”.
தனுஷ்கோடியின் விளிம்பை எட்டி விட்டதற்கு அடையாளமாக நிறைய
சாலையோர சர்பத் கடைகள். வண்டியை ஓரங்கட்டப்படுவதற்குள் வாசலுக்கு விரைந்த கமருத்தீன்
இரு கைகளாலும் வண்டிக்கூரையின் விளிம்பைப்பிடித்து வெளியில் தொங்கியவாறே தன் இரு கால்களையும் வெண் மணல் பரப்பில் பூவாகப் பதித்தான்.
“ தொங்கறதுலாம் சர்த்தான் சக்கரத்துக்குள்ள போய்ராதீங்க
தம்பி. அப்றம் பழய துணிய பிச்சி எடுக்கற மாதிரிதான் எடுக்கணும்.” ஓட்டுநர் மீதி சொற்களை
முணுமுணுத்தார்.
மணலில் தன் இரு பாதங்களையும் சேர்த்து வைத்ததின் தடங்களை செல்பேசியில் தற்படம் பிடித்தவாறே ‘ இராமர் பாதம்
சீதை பாதம் மரைக்காயர்பாதம் சேவியர் பாதம் வரிசயில இதோ இங்கே இந்த நாடு காண் சஞ்சாரி
கமருத்தீன் பாதம்.” வண்டியிலுள்ளோரைப் பார்த்து சிரித்தான் கமருத்தீன். தன் சொற்களுக்குள்
உறையும் பைத்திய நெடியளவின் கச்சிதத்தில் அவனுக்கு நிறைவு.
உள்ளிலிருந்து காறலுடன் பாய்ந்த எச்சில் அந்த பாத தடங்களின் தலையில் விழுந்தது.
“ பாத காணிக்க சரியாத்தான் உழுந்திருக்கு.” ஓட்டுநரின் உற்சாகக் குரலை ஒட்டு மொத்த பயணக்குழுவே வண்டியதிர
வழிமொழிந்தது.
அரிச்சல் முனை வரை போய் கடலில் கால் நனைக்கும் முன்னர்
புனித ஆண்டனி தேவாலயத்தின் இடிபாடுகளுக்கருகில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசி விட்டு
செல்லலாம் எனத் தீர்மானமாகியது.
டாக்டர் ரபீக் அருகிலுள்ள கடைக்கு போய் சர்பத்துக்கு சொல்லி
விட்டு வர தனுஷ்கோடியுடனான தனது பழைய நினைவுகளை பகிரத் தொடங்கினான் அலெக்ஸ்.
தனுஷ்கோடியின் மீது விழுந்து இறுகியிருக்கும் உப்பும் மணலுமேறிய முடிச்சுக்களை முழுதாக அவிழ்த்தவர் என
எவருமில்லை. தனுஷ்கோடியை தின்று தீர்த்த கடற்கோளின் செய்தியே அரசின் தலைக்கு மூன்று
நாட்கள் கழித்துதான் எட்டியிருக்கிறது.
முழு நிலவு நாளாகப்பார்த்துதான் தனுஷ்கோடிக்கு வர வேண்டும்.
அப்படியான ஒரு நாளில்தான் கடலுக்கும் கரைக்கும் வித்தியாசமில்லை. அழிவும் அழிவினால்
தின்னப்பட்டவனும், மானும் புலியும் அருகருகே
அமர்ந்து சொன்னக் கதைகள் எதுவும் அச்சிலும் செவியிலும் உள்ள கதைகளுக்கு நிகரில்லை.
ஒரு முழு நிலவு நாளில் தான் இங்கு வந்திருந்தபோது
கட்டிட மிச்சங்களும் கடலின் தீரா முழக்கமும் ஒரு வகை நனவு மயக்கத்தை தனக்கு உண்டுபண்ணியதாக
கூறிய அலெக்ஸ் “வெள்ள முடிக்கு கறுப்பு சாயமடிச்சதப்போல
அரசாங்கம் தார் ரோட்டப்போட்டு எல்லாத்தயும் இல்லாம ஆக்கிடுச்சி”. சுரத்தில்லாமல் சொன்னான்.
ஏழு வருடங்களுக்கு முன்பு முகுந்தராயர் சத்திரம் வரை மட்டுமே
சாலை உண்டு. அங்கிருந்து தனுஷ்கோடிக்கு மரப்பலகை இருக்கைகளும் பிடிமான கயிறும் கட்டிய
டிரக்குகளில்தான் போக வேண்டும். பள்ளமும் மேடுமான கெட்டிப்பட்ட மணல் தடங்களில் ஒட்டகத்தைப்போலவே
அசைந்து செல்லும் அந்த டிரக்குகளுக்கும் தனுஷ்கோடியிலிருந்த கடற்படை கண்காணிப்புக் கோபுரம் வரைதான் போகவியலும்.
அதன் பிறகு முந்நீருக்காக தன்னை சுருட்டியளிக்கும்
நிலத்தின் ஒடுக்கம்.
பகல் பொழுதுகளில் மண்ணும் நிலமுமாக காட்சியளிக்கும் பகுதிகளில்
பகல் மீது கவிழும் இருள் திரையின் அதே கால அளவிலும் துல்லியத்திலும் கடல் நீர் படர்ந்து
விலகும் அர்த்த அத்வைதம்.
காலங்காலமாக தன் மீது ஊர்ந்த மனிதர்களை வெண்ணெய்யில் இழுபடும்
மயில் பீலியாக உணர்ந்திருந்த கடலின் நெருப்பு முகம் அந்த ஓரிரவில் என்றுமில்லாதபடிக்கு வெளிப்பட்டது. அதொன்றும் சட்டென கோபம் காட்டிடவில்லை.
இரண்டு நாட்களாகவே கடலுக்கு குணக்கம். வந்த
வேகத்திலேயே நீங்கி விடக்கூடிய குழந்தையின் சள்ளமை என இலேசாக அதை எடுத்துக் கொண்ட தனுஷ்கோடிக்காரர்களின்
நினைப்பிலேயே இரண்டு காலைகளும் இரவுகளுமாக பொழுதுகள் கடந்திருக்கின்றன.
பேரழிவின் இரவில் கடலின் குரல் பெருத்த மாற்றங் கண்டிருந்தது.
ஆயிரம் வேட்டை விலங்குகளின் தகிக்கும் மூச்சையும் கூர் வளை நகங்களையும் கொண்ட ஆங்காரம். மதம் சொரிந்த புனல் துளைகள். மக்களின்
இராத்தூக்க உன்மத்தம் தெளிவதற்குள் நீர் மேலாகவும் நிலம் கீழாகவும் புரண்டிருந்தன.
இரை முழுவதுமாக வீழ்ந்திருந்தது. அந்த இறுதி
இரவில் கூனி மாரியம்மன் கோயில் மணல் குன்றில் ஏறியவர்கள் மட்டுமே மிஞ்சினர்.
ஒவ்வொருவரிடமிருந்தும் அலை வட்டம் போல பழைய கதைகளை தொட்டுத்
தொட்டு பேச்சு விரிந்து கொண்டிருந்தது. தோசியின் புளிப்பும் இனிப்புமான நினைவுகள். சிதிலமடைந்த தேவாலயத்தின்
முன் மண்டியிட்டு பிரார்த்தித்துக் கொண்டிருந்த நடுத்தர வயதுக்காரரிடமிருந்து விசும்பலொன்று
எழுந்து அடங்கியது.
வானம் பார்த்துக்கொண்டிருந்த தேவாலய மாடத்தின் அழகிய கண்ணாடி
குடுவைக்குள் காற்றையும் வெளிச்சத்தையும் சமன்படுத்திக் கொண்டிருந்த மெழுகுத்திரிச்சுடர்.
தேவாலயத்தின் அருகிலிருந்த வீசா அலுவலகத்தில் முத்திரை குத்துவதற்கு முன்னர் அலுவலரின் வாயிலிருந்து
ஊறிய செந்நிற எச்சிலுடன் வெற்றிலை சக்கையும்
துளி நேர இடைவெளியில் கடவுச்சீட்டின் மேல்
ஒன்றன் பின் ஒன்றாக விழ கப்பல் பயணி சிங்க வெறியுடன் அலுவலர் மீது பாய்ந்து
இருவரும் கட்டிப்பிடித்து உருண்டிருக்கின்றனர்.
இதனாலேயே தலை மன்னாருக்கான ஆர்எம்எஸ் இராமானுஜம் படகு புறப்படுவதில் அரை நாள் தாமதம்.
“ போலோ ராமச்சந்திர மூர்த்தி ஜீ க்கீ…” துல்லிய இராகத்துடன்
இழைந்த ஒற்றைக்குரலை “ஜய்“ என பின் தொடர்ந்தன கொத்துக்குரல்கள். வேட்டியை இழுத்து பின்புறம்
செருகியிருந்த இந்திக்காரர்களின் பக்தி முழக்கத்தில் உரையாடல் தடைப்பட, பயணக்குழுவின்
மொத்தக் கவனமும் அக்கும்பலின் பக்கம் திரும்பியது.
பயணக்குழுவின் தலைவன் என்பதால் பேச்சின் சுவாரசியங் கலைந்ததின்
எரிச்சலைத் தொண்டைக்குள் இருத்திக் கொண்டான் கமருத்தீன்.
கடலை நமஸ்கரித்து அதன் சொட்டுகளை தலையிலும் நாவிலும் தெளித்த
பின் கையிலிருந்த செப்புக் கலயத்தில் அலையின் நுரையை முகர்ந்த இந்திக்கார ஆண்களில் சிலர் கடலில் இறங்கி தீர்த்தமாட முனைந்தனர். தங்கள்
கைகளாலும் விரல்களாலும் பிணத்திற்கான சைகையைப் பலமுறை காற்றில் வரைந்துக் காட்டி பணியிலிருந்த காவலர்கள் அவர்களைத் தடுத்தனர்.
இவை எல்லாவற்றையும் சற்று தொலைவில் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்த இந்திக்கார இளைஞர் ஒருவரைக்கூப்பிட்டு அலெக்ஸ் உரையாடத்தொடங்கினான். இந்திப்
பெண்களோ குழுமி நின்று கடலைக் கும்பிட்டவாறே முரண்பட்ட இராக இலயங்களுடன் பஜனைகளை பாடத்தொடங்கினர்.
“பாய் சாஹிப் நமஸ்கார்!
“ஹா ஜீ நமஸ்கார்”
“எந்த ஊரு?”
“ரோஹ்தக்”
“மாநிலம்?”
“ஹரியானா”
“ஒங்க ஊர்ல கடல் உண்டா?”
“இல்ல”
“ஏன் இல்ல?”
“ஏன் இல்லேன்னா கேட்டா என்னத்த சொல்ல?”
“ஏதாவது ஏற்பாடு பண்ணக்கூடாதா?”
“நாம்போ ஒண்டியா என்னா பண்ட முடியும்? சர்க்கார்தான் ஏற்பாடு பண்டனும்’
“கடல ஒங்க வாழ்நாள்ல
எத்தன வாட்டி பாத்திருப்பீங்க?”
“அஞ்சு தபா”
“அஞ்சு தடவயும்
இங்க வந்தா பார்த்தீங்க?”
“இல்லல்ல. கேரேளாவுலயும் பாத்தோம்”
“ இப்படி ஒவ்வொரு தடவயும் இவ்ளோ தொலைவு வந்து கடல் பாக்குறதுக்கு
ஒங்க ஊர்லயே ஒரு கடல வெட்ட ஜீயிடம் சொல்லலாமே”?
தீவிரம் குன்றா
செவலை ஏறிய முகத்துடனிருந்த அந்த இந்திக்காரர் “ நாங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ஜீ கட்டாயம் அத
செய்வார்.”
அடுத்த அரை மணி நேரமும் இதைச்சுற்றியே கிண்டலும் சிரிப்புமாக வளர்ந்த பேச்சுக்களின் முத்தாய்ப்பாக
டாக்டர் ரபீக் சொன்னான்” விறகு நன்கு காய்ந்திருப்பதினால்தான் நெருப்பு நின்று எரிகிறது”.
கூட்டம் ஆர்ப்பரித்து வழிமொழிந்தது.
கமருத்தீனுக்கு இந்த வலுக்கட்டாய பகடி பிடிக்கவில்லை. தற்கணத்தின்
அம்பை எய்பவன் அவன்.பயணத்தின் நோக்கம் திசை திரும்புவதாகத் தோன்றியது. யாரையும் ஓரளவிற்கு
மேல் கட்டுப்படுத்தவியலாது. முடிவில் பயணத்தின் மகிழ்ச்சி குலைந்து விலகல் மட்டுமே
மிச்சமென்றாகி விடலாகாது என்பதில் கவனமாக இருந்தான். இக்கூட்டத்திலிருந்து அவன் சற்று
தள்ளி நின்றவனாகக் கடலலைகளின் முட்டுதலை புதியதாகப் பார்ப்பது போல் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தான்.
லிங்க வடிவில் அமைக்கப்பட்டிருந்தது சாலையின் தொங்கல்.
அதன் பீட இதழின் கீழ் பக்கமுள்ள சிறு இடைவெளி வழியே ஆட்கள் கடல் பக்கம் இறங்கிக் கொண்டிருந்தனர்.
அரிச்சல் முனையின் கடைசிப் புள்ளி. நிலமும் கடலும் தொடங்கும் முட்டுச் சந்தி. முத்திசையின்
வட பக்கம் மட்டுமே அமைதி கொள்ள கிழக்கும் தெற்கும்
தலையை சிலிர்த்துக் கொண்டு காளைகளின் மூர்க்கத்தோடு பொருதிக் கொண்டிருந்தன அலைகள்.
ஒரு பார்வைக்கு ஒன்றையொன்று துரத்தி களி கொள்ளும் வெறிநாய்க் குட்டிகளின் முகச்சாயலுங்
கூடத்தான்.
கடற்கரை மணலை அள்ளி தன் கை முட்டிகளுக்குள் குலுக்கினான்.
கதிரவன் தன் ஒளிக் கடிகைகளில் இறுதிச் சொல்லை நழுவ விட்டுக் கொண்டிருக்க உறக்கம் கெட்ட
நள்ளிரவில் வாசித்த ஒரு கவிதை மணல் வெளியில் படர்ந்தது.
‘’தனிமையில்
விரியும்
சொற்களுக்கு
மூச்சே
எழுத்து
கடல்
மடிப்புகளே
ஏடுகள்
அடுக்கி
அடுக்கி
கடல்
அளைகிறது
நுழைவுக்குப் பின்
சந்தம்
இரு
மருங்கிலும்
மணல்
வளர்க்கிறது
குடுமிகளாய்
மரங்கள்
காற்றின்
வேகத்தோடு
மூச்சை
மறக்கிறது
தனிமையின்
நிழல் மெல்லும்
ஒளி
ஒரு
சூரியப்பருவதமாய்
என்
குறுக்கே
சரிகிறது’’
அய்ந்து மூலகங்களை
அவிழ்த்து பார்த்தாலும் சொற்கள் மட்டுமே
எஞ்சும். ஆனால் மனிதர்கள் நிற்கும் நிலத்திற்குள்
மட்டும்தான் அத்தனை வாழ்க்கைகள் செறிந்திருக்கின்றன. மரமானது காற்றை வருடி வெய்யிலை
உண்டு நீரருந்தினாலும் அதன் வேர் நிலத்தில் மட்டுமே ஊன்றியிருக்கிறது. தன் ஆதிக்க எல்லைக்குள்
கடல் ஆர்ப்பரிப்பதைப்போல நிலம் கூத்தாடுவதில்லைதான். தனுஷ்கோடி ஒரு அழிவின் மணல் புத்தகம்.
அதன் உள்ளே முடிவில்லாத கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன
என்ற ஓர் எழுத்தாளனின் சொல் சத்திய வாக்காக அல்லவா பலித்திருக்கிறது?
சுனாமியின் போது தனுஷ்கோடியில் கடல் பின் வாங்கியிருக்கிறது. அது முன்னர் உண்டு செரித்ததின் தடங்களில் அறுபது
வருடங்களுக்குப்பிறகு கதிரவனின் வெளிச்சம்
விழவும் “ அய்யோ! ஏன் ராசா குளிச்ச கெணறு.” என தலையிலும் முகத்திலும் மார்பிலும் மணலையும்
நீரையும் வாரியிறைத்த எழுபத்தைந்து வயது கிழவிக்கு அதன் பிறகு சித்தம் தெளியவேயில்லை.
இராமனுடைய வில்லால் கீறப்பட்ட நிலம், ஆதம் பாவா மலையை நோக்கி நீளும் ஆதம் பாலம்,
ஒன்றரைத் தலைமுறையை சாட்சியாக்கிய இலங்கைப்போர், கரை ஒதுக்கப்பட்ட ஏதிலிகள், மாசி தொடங்கி
மாணிக்கம் வரை அக்கரையில் விற்று இக்கரைப்படகை நகர்த்திய தமிழ் நாட்டு வாப்பாமார்கள்.
இக்கரையில் ஒருத்தி வருடங்களை நாட்களாக்கிக் காத்திருக்க
அக்கரை ஒருத்தியின் கை வளைவிலிருந்து ஒரு போதும் விடுவிக்கப்படாத மாப்பிள்ளைகள்/வாப்பாக்கள்.தேயிலைத்தூளின்
மணமேறிய ராணி சோப்பு, பட்டை கருவா பழுப்பு காகித சுருளுக்குள் ஒளித்துக் கிடக்கும்
கண்டோஸ் சாக்லேட் வில்லைகளிலான உலகங்களுக்கு சென்னை இன்னொரு நாடுதான். இலங்கை வானொலியையேக்
கேட்டு வளர்ந்தவர்களுக்கு அகில இந்திய வானொலி ஓர் அந்நிய ஒலி மாசு…..
எத்தனைக் கதைகள் எத்தனை வாழ்க்கைகள். அக்கரை வாழ்க்கையின்
ஒரே இக்கரை சாட்சியான தனுஷ்கோடிக்கு எத்தனை முகங்கள்?இன்றிருக்கும் கடலுக்கு இந்த செய்திகளும்
கதைகளும் தெரிந்திருக்குமா?எல்லாவற்றையும் தின்று செரித்து விட்டு ஒன்றும் அறியாதவனின்
கோலம்.
கடற் கோளிலிருந்து நான்கு ஆண்டுகள் கழித்து பிறந்த கமருத்தீனின் சிறு வயது கூட்டாளி அனசின் வாழ்க்கை கடற்கோளைப் போலவே துயர்
மிகுந்தது. அந்தக் கதைகளிலானாலேயே அவன் வாழ்க்கை கடலிலும் கரையிலும் இல்லாத ஒரு தொங்கு
வாழ்க்கையாகியிருந்தது.அந்தக் கதைகளைக் கேட்டு கேட்டு அனசில் பாதி கமருத்தீனுக்குள்ளும்
ஏறிக் கொண்டது.
தனுஷ்கோடி என்பது
அனசுடைய ஒளி சிறுத்திருந்த இளம் வயது
வாழ்வின் மறையா சாட்சி. உம்மாவின் இருபத்தைந்தாம்
வயதில் பயணம் சொல்லி விட்டு தனுஷ்கோடி வழியாக இலங்கை சென்ற வாப்பாவை கம்பு ஊன்றிய காலத்தில் காங்கேயனோடையில்
பார்த்ததாக ஒருவர் வந்து சொல்லவும் வெள்ளைப்புடவை உடுத்தி இத்தா இருந்தவள். அவனுக்கு வயது எட்டு. உம்மாவின் விழி நீர் துஆக்களிலும் தாய் மாமன்களின் ஆதரவிலும் செடி ஆலாகியது.
காற்றின் வேகம் பெருகி எங்கும் மண் சொரியஅலைகள் நுரைத்தும் ததும்பியும்
கொண்டிருந்தன.மேகத்திலிருந்து பாய்ந்திறங்கும் நீர்ப்பறவை கடலின் அலை மடிப்புக்குள்ளிருக்கும்
தங்களின் பளபளப்பேறிய மஞ்சள் சொண்டால் மீனைக் கொத்துவது போல எல்லாக்கதைகளிலிருந்தும்
கமருத்தீனின் மனம் நல்லதும் அல்லதுமான வாப்பாமார்களின் கதையைத்தான் தேர்வு கொள்ளும். தட்டளவுள்ள
இடியாப்பத்திற்கு கூனி மாசி வைத்து உம்மா கட்டிய பொட்டலத்துடன் புறப்படும் வாப்பா தோணியேறிப்
போன காலங்களின் மங்கிய நினைவு,சென்னை எழும்பூரிலிருந்து கொழும்பு கோட்டை வரை போட் மெயிலின்
ஒற்றை பயணச்சீட்டில் தொடர்ந்த பயணங்கள், அப்பயணங்கள் ஊட்டிய எத்தனையோ வாயும் வயிறுகளும்.
தன் சொந்தக் கசப்பு திரவத்திற்குள் மனத்தை ஊற விடாமல் இருளும்
ஒளியும் ஒரே வில்லையின் இரு பக்கம் என்ற தத்துவார்த்த உண்மையைக் கொண்டு அதை மீட்கும்
அளவிற்கு கமருத்தீனை வாழ்க்கை முதிர வைத்திருந்தது.
என்றாவதொரு நாள் இங்குள்ள தரை,மண்,நீர் இவையனைத்தையும்
எழுத வேண்டும் என அருகிலிருக்கும் ஒருவரிடம் சொல்வது போல் சொன்னான்.நினைப்பிற்கு சொல்
சாட்சி.சொல்லிற்கு அருவம் சாட்சி. எழுதப்படாமலிருக்கும் எழுதப்படவிருக்கும் கதைகள்
அவ்வளவுமே அருவங்கள்தான். மனிதனுக்கு மனிதன் சாட்சி அருவமானாலும் உருவமானாலும் கதைகளுக்கு
கதைகள்தான் சாட்சி.
கடல் கோளுக்குப்பிறகு எஞ்சிய வாழ்வு,சாவு கதைகளை சாலை போட்டு அரசு கொன்ற விதம்
அவனின் நெஞ்சுக்குழி வரை கசந்தது. இதற்குப்பிறகு
இங்கு வருவதற்கில்லை என்ற திடத்துடன் தாரின் மினுமினுப்பின்மீது எச்சில் கூட்டி உமிழ்ந்தான்.
3
இருள் ஏற ஏற அலைகள் மூர்க்கங்கொள்ளவும் அலைவாய்க்கரையில்
நின்றவர்களை காவலர்கள் ஊதல் ஒலித்து கரையேறுமாறு அழைத்தனர். அமாவாசை இரவுகளில் தலைமன்னாரின் கலங்கரை வெளிச்சம் தனுஷ்கோடிக்கு
தெரியுமாம். “ இப்ப வெளிச்சம் தெரியுதோ இல்லியோ, இந்தாப் பாரு செல் போன. சிலோன்ட டயலாக்,
மொபிடெல் டவர் காட்டுது. டெக்னாலஜிக்கு கடலாவது மணலாவது” டாக்டர் ரபீக் தன் ஒளிரும் செல்பேசி திரையை குதூகலித்தபடி எல்லோருக்கும்
காட்டினான்.
இராமநாதபுரத்தில் இரவுணவோடு பயணம் நிறைவதற்குள் கைவசமிருக்கும் மீதி இலங்கைக் கதைகளுக்குள் வாப்பாவின் தடம் தேடி அறிந்து
வந்த கமுக்கங்களையும் உருட்டி பிசைந்து புதிய பண்டமாக வினியோகிக்கத் தீர்மானித்தான்
கமருத்தீன்.
எப்படியும் உரையாடலின் இழுப்பில் நினைவுகள் தன்னிலைக்குத்தான் மீளும்போது தன்னையும்
மீறி உண்மை கசிந்து விடும் என்பது நினைவிற்கு வரவே அதை நினைத்துஅஞ்சினான். தன் பெயரை
‘ஹசன்’ என்றும் வாப்பா பெயரை ‘முபாரக்’ என்றும் ஊர்ப்பெயரையும் குலசேகரப்பட்டினம் எனவும்
வசதிக்கேற்ப மாற்றி அதையே அகமும் புறமுமாக கவனத்துடன் பதித்துக் கொண்டான்.
வண்டியின் நடுவே நின்றவனாக “ஒயா முபாரக் நானாகே புதானே?” மூன்று முறை
திரும்பத் திரும்ப ஒலித்தான் கமருத்தீன். வித்தைக்காரரின் இலாகவக் குரலில் எல்லோரின்
கவனமும் அவன் பக்கம் திரும்பியவுடன் கதை அதன்
போக்கில் ஒழுகத்தொடங்கியது.
தொப்புள் வரை நீண்டிருந்த தன் தாடியின் நிறத்திற்கேற்ப
தலைப்பாகையும் அணிந்திருந்த ஹசனுக்கு சிங்களத்தில் காற்புள்ளி கூடத் தெரியாது.தனது
வாப்பாவைத்தான் ஏதோ அவள் கேட்கிறாள் என்பதை ஊகித்தவனாக மொத்த சதுரமும் குலுங்க “ ஹாங்
ஹாங் “ என்றான்.
தேங்காய் நெற்றுக்களை உரித்துக் கொண்டிருந்த சிங்கள மாதுக்கு
வயது எழுபதைத் தாண்டியிருக்கும். அவள் கைப்புஜ நாண்களின் புடைப்பையும் தணிதலையும் இரக்கத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தவனை ஓலைத்தட்டிக்குள் கிடந்த புட்டுவத்தை இழுத்து போட்டு ‘இந்த கன்ன
மொதலாளி” என்றவள் தலை தணித்து வியப்புடன்
புன்னகைத்தவாறே கையிலிருந்த தேங்காய் நெற்றைத் தரையில் எறிந்தாள்.
ஹசன் புட்டுவத்தில் அமர்ந்தான். கழுத்தில் கிடந்த துவாலையால்
தலை முகம் கழுத்தின் வியர்வையை துடைத்தவாறே கருவிழியின் வளையம் விரித்து தெளிந்த தமிழில் சொன்னாள்
“ஒங்கட வாப்பாவ மிச்ச காலமா தெரியும். அவர் எங்கட சொந்த ஆள்” அடுத்த சொல்லைத் தொடங்குவதற்கு
முன் மாங்காய் படம் போட்ட மூட்டாத தன் சாரத்தை விரிய அவிழ்த்து இரு முறை உதறிக் கட்டினாள்.
தலை புரண்ட ஹசன் அப்படியே முழு வட்டமடித்து சூரியனைப்பார்த்து
திரும்பி நின்றான். அச்சமயத்தில் தனக்கு அடித்த நாறப் பாக்கின் வாசம் இன்னும் தன் மூக்குக்குள்
ஒட்டிக்கொண்டிருப்பதை பின்னாட்களில் பல முறை நினைவு கூர்ந்தான்.
கொழும்பிற்கும் கண்டிக்கும் போகும் வழியிலுள்ள கேகாலையில்தான்
முபாரக் நானாவின் பலசரக்கு கடை. யாளி கூரை வேயப்பட்ட இரண்டு கடைகள். இரண்டாவது கடை கிட்டங்கி பயன்பாட்டிற்கு.தேங்காய்,
பாக்கு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து கொழும்பில் விற்ற கையோடு மளிகைப் பொருட்களை வாங்கி உள்ளூரில்
விற்பார்.
வேலைக்கு வரும் பெண்களிடம் முபாரக் நானா மிகவும் இரக்கமானவர்.
கைமாற்று கொடுத்தால் கூட அதை சம்பளத்தில் கழிக்க மாட்டாரென்றும் அவர் பற்றிய செய்திகளை
சரம் சரமாக இறக்கி விட்ட சிங்கள மாது, “ அவர் அந்த வயசுல எவ்ளோ அழகா ஈப்பார் தெரியுமோ?”.
வாள் வீச்சு போல உயரம், பிடரியில் விழும் சிங்க முடி, தமிழ்ச்சுவையோடு சிங்களம் பேசும்
அழகு,அவர் எங்கட ஊட்டுல செய்யுற பால் மீன் ஆணத்ததான் ரொம்ப ஆசயா சாப்பிடுவாரு” அரை
நொடிவெட்டில் நாணி மீண்டாள். ‘க்வாக் க்வாக்’
ஒலியுடன் சொண்டினால் நெற்றுக் குட்டையை வாத்துகள் அலசின.
ஹசனுக்கு வரும் திருமண பேச்சுக்கள் தட்டிப்போகும்போதெல்லாம்
அவன் உம்மா தன் கணவரிடம் “நீங்க சிலோன்ல செஞ்சுட்டு வந்த அக்குருமத்தினால ஏம்புள்ள
கண் கிருஸாயிட்டு” என நாள் முழுக்க சண்டையிட்டு ஓய்வாள்.
“அவங்க செஞ்ச மீதி பாவம் என்னம்மா?” வாப்பா மீது உம்மா
கடுங் கோபமாயிருந்த ஒரு நாளில் கேட்டான் ஹசன். கொழும்பிற்கு அனுப்பி வைத்த தேங்காய்களுக்கான கணக்கைக் கூட்டும்போது கணக்கு
எழுதிய தாளில் உள்ள தேதியையும் சேர்த்தே கூட்டிக் கூட்டிதான் வாப்பா குலசை வீட்டைக்
கட்டினதாக அவிழ்க்கக்கூடாத கதையொன்றின் முடிச்சை உம்மா அவிழ்த்தாள்.
நல்ல மன நிலையில் இருக்கும்போது வாப்பா பற்றி உம்மா விவரித்தவைகளில்
அவன் நினைவில் வைத்துக் கொண்ட பெயர் ‘ஆறாம்பண்ணை கோக்கி.’ இந்தியர்கள் கூடுதல் வசிக்கும்
சம்மாங்கோட்டு பள்ளிவாசல் சுற்றுப்புறத்திலுள்ள ஹோட்டல்களில் விசாரித்துக் கண்டுபிடிப்பதில்
ஹசனுக்கு சிரமமொன்றும் இருக்கவில்லை.
உள்ளும் புறமும் துப்புரவாக வெந்த முட்டைக்கோழி றோஸ்ட்,
காடை புரியாணி,கொத்து ரொட்டி, இறைச்சி சமூசா, ஃபாலுதா உள்ளிட்ட நாக்குக்கு உருசியான தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையோர உணவு வகைகளை கொழும்பில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது
ஆறாம்பண்ணைக்கார கோக்கிதான். டிக்கட் சல்லி கூட வாங்காமல் முபாரக் நானா கூட்டிக் கொண்டு
போன சமயம் விடலைப்பருவ பையன் அவர்.
பங்சல் வீதியிலுள்ள ஹோட்டலில்தான் அவருக்கு வேலை. வாப்பாவின்
பெயரைச் சொன்னதும் கதம்ப நிறக் கறைகள் படிந்த மேலாடையுடன் வெளியே வந்தவர் உத்தரத்தின் வலுவுள்ளக் கரங்களால் அவனைத் தழுவி திருநெல்வேலித்
தமிழில் வரவேற்றார்.
”வாப்பாவே எழும்பி வந்த மாதிரி இருக்குமா” நா தழுதழுத்தார்.அவனும்
என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றான்.கடையில் கூட்ட நேரம். அவருக்கும் அடுத்து என்ன
செய்வது? என்பது ஓடாமல் கண்ணாடிப் பேழையில் இருந்த பழ கேக் அடுக்கை பொதிந்து அவன் கையில்
வைத்தார்.சம்மாங்கோட்டு பள்ளிவாயிலுக்கு எதிர்ப்புறமுள்ள மாடியின் இரண்டாம் தளத்தில்
தான் தங்கியிருப்பதாகவும் இஷாவிற்குப் பிறகு தனக்கு
ஓய்வு நேரமென்பதால் அந்நேரத்தில் வந்து சந்திக்கச்சொன்னார். தேயிலை குடித்து விட்டு
போகும்படி வற்புறுத்தியவரிடம் மறுத்தான். “அப்போ ராவய்க்கு நாம ஒன்னா சாப்பிடலாம்.”
கோக்கியை சந்தித்த பிறகு சம்மாங்கோட்டு பள்ளிவாயிலிலும்
புறக்கோட்டை தெருக்களிலும் தென்பட்ட ஊர் முகங்களை சந்திப்பதை கூடிய மட்டுக்கும் தவிர்க்கும்
விதத்தில் தனது நடமாட்டத்தை வைத்துக் கொண்டான்.தேவையற்ற
கேள்விகளினால் தன் சமநிலை குலைவதை அவன் விரும்பவில்லை.
வாப்பாவின் குண நடத்தைகள்,நகைச்சுவை,கோபம்,கொடை உள்ளிட்ட
நற்செயல்கள் என நினைவின் அடுக்குகளிலிருந்து ஒவ்வொன்றாக உருவியெடுத்துக் கொண்டிருந்தார்
கோக்கி.வாப்பா பற்றி அவர் பேசும் சிறிய பெரிய தகவல்கள் அனைத்தையும் கூர்ந்து கவனித்துக்
கொண்டிருந்தான்.
தான் எதிர்பார்த்து
வந்த சங்கதி பற்றி ஒரு வால் முனையாவது கிடைக்காமல் போகாது என திடங்கொண்டிருந்தான்.அங்கிருந்து
கிளம்பும் வரைக்கும் எந்தத் துப்புமில்லை.அவரின் அடுத்த நாளைய ஒய்வு நேரத்தை கேட்டு
விட்டு மீண்டும் வருவதாக சொல்லி இருவரும் பிரிந்தனர்.
மெயின் வீதியிலும் குறுக்குத்தெருக்களிலுமுள்ள தள்ளுவண்டிக்காரர்கள்,
மின்னணு பொருட்கள்,துணிமணிகள்,பழங்கள் விற்கும் தட்டுக்கடைக்காரர்களின் இரைச்சலில்
தலையும் இரைந்தது. “வாங்குங்கோ ஹாஜி. வில மலிவுதான்”என்றவாறு முகத்துக்கு நேரே கம்பி
போல நீண்ட தட்டுக்கடை ஜிப்பாக்காரரின் கையிலிருந்து
பாங்காக விலகினான்.
ஜமாஅத் தொழுகை நடக்காத வேலைகளில் போய் சம்மாங்கோட்டுப்பள்ளிவாயிலின்
பழைய பகுதிகளைச் சுற்றிப்பார்த்தான்.உள் பள்ளியிலிருந்து முதல் மாடிக்கு செல்லும் ஏணிப்படிகளில்
சிறிது நின்று விட்டுஅதன் தூணில் சாய்ந்துக்
கொண்டான். மிம்பரின் மூன்று பக்கமும் அமர்ந்து எழும்பினான்.ஓல்ட்
மூர் தெருவிலுள்ள ஹென்றிக் பிராண்ட் தேயிலை விற்கும் ஆகப்பழைய கடை எது எனப்பார்த்து
அங்கு ரொம்ப நேரம் விலை கேட்ட பிறகு தேயிலை வாங்கினான்.கிராண்ட் மாஸ்க் போய் அப்படியே
கொழும்பு துறைமுகத்தின் தலைவாயிலில் வட்டமடித்தான்.அந்த வருடங்களுக்கு மட்டும் தன்னால்
போகவியலாது என்பதை நினைக்கும்போது அவனுக்கு வருத்தம் மேலிட்டது.
இரண்டாம் நாளில் ஆறாம்பண்ணை கோக்கி இன்னும் இலகுவாகியிருந்தார்.
இன்றைய தின பேச்சில் வாப்பாவிற்கு நெருக்கமான
நண்பர்களைப் பற்றி சொல்லும்படி அவன் கேட்டதற்கு “அத சொல்லத் தொடங்குனா நாளுகள் பத்தாது”
என பெருங்குரலில் உறுதியான வெண் பற்கள் தெரிய சிரித்தார்.நாக்கினால் தன் பல் வரிசையை
துளாவிப்பார்த்தான்.
வாப்பாவின் பல நண்பர்கள் தொடர்புகளின் கதைகளைகோக்கியார்
சொன்னாலும் ஓட்டமாவடிக்காரரின் கதைக்குள்தான் வாப்பாவின் தடம் இறங்கியிருக்க வாய்ப்புண்டு
என அவன் நினைக்கும்படியானதாக அது இருந்தது.
முபாரக் நானாவின் மவ்த்திற்கு தன் வீட்டில் நாற்பதாம் கத்தம் ஓதியிருக்கிறார்
ஓட்டமாவடி ஈட்டிங்க் ஹவுஸின் உரிமையாளர், துரியான் பழச்சாற்றுடன் வந்திருந்த ஓரோர்
ஆளுக்கும் கைமடக்காக சல்லியை உறையிலிட்டுக் கொடுத்திருக்கிறார்.அந்த
உறை ஒவ்வொன்றும் மாலு பன் கனம்.திசையை மாற்றிக் கொண்டு
ஓடிய ஆற்றின் தடமாழ்ந்தது.
பருவ நிலையையும் கருக் குழந்தையின் பாலினத்தையும் இன்னும்
பல அண்ட வெளி கமுக்கங்களையும் கண்டறிய முடிந்த மனிதர்களுக்கு “சொந்த மனசுட ஆழத்த அளக்க
ஏலய்லங்குறத என்ன சொல்ல…….”
அறியப்படாத மை கொண்டு வாப்பா வரைந்த ஓவியங்களின் எந்தவொரு
புள்ளியின் அரைக்கால்வாசி கூட கலையக்கூடாது. மையிருளில் மண் பற்றி ஊரும் புழு போல நகர்வதுதான்
இருவருக்குமிடையேயான தடுப்பை மீறாமலிருக்க ஒரே வழி என ஒன்றுக்கு இரு முறை சொல்லி உறுதிப்படுத்திக்
கொண்டான்.
மேற்கொண்டு கதையைக் கவனத்துடன் முன்னெடுப்பதற்கான சிறிய
மனத் திட்டமிடல் தேவைப்படுவதால்”பாம்பன்ல றால் அட திம்போம்” என ஓட்டுநரிடம் கமருத்தீன்
கூறியதை வண்டிக்குள்ளிருந்த யாரும் மறுக்கவில்லை.
பாம்பன் பள்ளிவாசல் அருகிலுள்ள இறால் அடை கடையில் வண்டி
நின்றது. அலெக்சும் டாகடர் ரஃபீக்கும் இலங்கைக்குப் போவது பற்றி விவாதிக்கத் தொடங்கினர்.
கணவாய் கருவாட்டின் விலை குறித்து அருகிலுள்ள கடைகளில் கொஞ்சம் பேர் கேட்கத் தொடங்க தனுஷ்கோடியில் இரவு தங்கி வரும்
அமைப்பில் அடுத்த முறை வர வேண்டும் என ஒருவர் சொன்ன ஆலோசனைக்கு சுற்றி நின்ற மூவர்
தலையசைத்தனர். மீதமுள்ளவர்கள் வாணலியிலிருந்து
எழுந்த இறால் அடை வேகும் புகையுடன் இறைச்சியும்
மாவும் கலந்த மணத்தில் கிறங்கத் தொடங்கியிருந்தனர்.
கூட்டத்திலிருந்து விலகி பள்ளிவாயிலுக்குள் போய் வருவதற்குள்
தன்னைத் தழுவி நீளும் கண்ணியைக் கண்டு கொண்டது கதை. பாதை துலங்கியதற்காக இறைவனுக்கு
நன்றி சொல்லிக் கொண்டான் கமருத்தீன். கதை புதிய உற்சாகத்துடன் தொடர்ந்தது.
கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள ஓட்டமாவடி ஈட்டிங்
ஹவுஸுக்குச் சென்று அதன் உரிமையாளரைப் பற்றிக் கேட்டபோது அவர் உம்ராவுக்கு சென்றிருப்பதாக
விளம்பிக் கொண்டிருந்த பணியாளர்கள் தகவல் சொல்லினர். வெளியில் வந்தவன் மீண்டும் உள்ளே
சென்று கடை உரிமையாளரின் பெயர் சுபைர் என்பதைக் கேட்டுத் தெரிந்துக் கொண்டான். இனியும்
தாமதிப்பதற்கு வீசா நாட்களும் மிச்சமில்லை என்பது நினைவில் வர நடந்தேறியது அவனின் ஓட்டமாவடிப் பயணம்.
கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையம் சென்று வாழைச்சேனைக்கு
பயணச்சீட்டு எடுத்தான். வருவோர் போவோரினால் மாபெரும் தெரு நாடகம் நிகழ்வது போலிருந்தது.அழகான
ஆடைகளும் அதற்குள்ளிருக்கும் மனிதர்களும்தான் இந்த நாளையும் நகரத்தையும் ஒரு தேரைப்போல நகர்த்துகின்றனர். திரும்பி நின்று நிலையத்திற்கு
வெளியே உள்ள வீதியைப் பார்த்தான். மக்கள் எறும்புகளைப்போல ஊர்ந்துக் கொண்டிருந்தனர்.
இந்திய இரயில்களைப்போல இல்லாமல் தண்டவாளத்திற்கும் கோச்சுக்கும்
இடையே பெரிய இடைவெளி. ஓட்டமும் சீரில்லை. கோச் வலமும் இடமும் அலைந்தாடியது. பளபளக்கும்
சங்கிலி இலச்சினையுடன் கறுநீல தொப்பியணிந்து பரிசோதகர் வந்து சென்றார். ஒரு சாடைக்கு
பட்டாளத்து உயர் அலுவலர் போல சீருடை.
இரவு நேர வண்டியென்பதால் அவ்வளவாக ஆட்களில்லை. அங்கொன்றும்
இங்கொன்றுமாக இணைந்து பிணைந்திருந்த நடுத்தர
வயது இணையர்கள் கண் கிறங்கியிருந்தனர்.
கோர்த்திருந்த இணையின் விரல்களை ஒவ்வொன்றாக விலக்கி மேல்
தாங்கியில் இருந்த குடையையும் பதமாக எடுத்து கக்கத்தில் இடுக்கியபடி ஏதோ ஒரு நிலையத்தில்
அவர்களில் ஓர் ஆண் இறங்கிச் சென்றார். தனித்து
விடப்பட்டஅப்பெண்ணையே அவ்வப்போது உறக்கத்திலிருந்து விழித்தபடி கவனித்துக் கொண்டிருந்தான்.
இரண்டு நிலையங்கள் கழிந்த பிறகு கண் விழித்த அவள் தன் தலைமுடியைக் கோதியவாறு சாளரம்
வழியாக கண்களை செலுத்தி விட்டு உறக்கத்தைத் தொடர்ந்தாள்.
வைகறைக்கு முந்திய முழு இருள் கூம்பாரத்துக்குள் இரயில்
தன்னை இழுத்துக் கொண்டு விரைய ஓட்டமாவடி நெருங்கும் பரவசத்தில் நிலையங்களின் பெயர்ப்
பலகைகளைக் கவனிக்கத் தொடங்கினான்.வெலிகந்த,ரிடிதென்ன,புனானை.
வெள்ளை மணல் வெளிகளுக்கு மேல் கவிழ்ந்துக் கிடந்த பழுத்த
பனை ஓலைகளிலிருந்து கிளம்பிய மணம் புலரிக்காற்றின் ஈரத்துக்குள் இன்னும் அடர்ந்தது.
உடன்குடியிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் பனை அடர்ந்து நிற்கும் குளத்து
மொகுதூம் பள்ளியின் சுற்றுப் புறத்திலிருந்து கிளம்பும் அதே மணம். ஆனால் அதில் சாலையின்
தார் வாசனையுடன் சீமை உடையின் நீராவியும் விரவி
பாகின் மணமெடுத்திருக்கும்.
ஹஸனை நிகழ் வயதிற்கும் பால்யத்திற்கும் இடையிலுள்ள மூன்றாம் வெளியில் எறிந்தது விடியற்காட்சி.
அது புதியதாக இருந்தது. அருவ காலங்கள் சந்தனத் திரட்டாக்கப்பட்டு வேலைப்பாடுடைய வெள்ளித் தட்டில் அலங்கரித்து
வைக்கப்பட்டிருக்க அதைச் சுற்றி குந்திரிக்கத்தின் நறுமணப்புகை இளம் வண்ணங்களுடன்
கிளம்பியது.
தண்டவாள ஓர மின் கம்பத்தில் நின்ற காக்கையின் கரைதல் எறியப்பட்ட
கல்லைப் போல கோச்சுக்குள் சுழல அக் காட்சியிலிருந்து விடுபட்டான். சந்தனத் திரட்டின்
நிறம் மணத்தை வைத்து அதை பொன்னாக பொருள்படுத்திக் கொண்டு காட்சியை பின் வருமாறுக் கோதுடைத்தான்.எண்ணி
அளிக்கப்பட்ட பொன் மாவில் அட்டிகை செய்து அதை அதற்குரிய இடத்தில்தான் அணிவிக்க வேண்டும்
என்பதாக.
ஓட்டமாவடிக்கு அவனையும் அவனுக்கு ஓட்டமாவடியையும் அறிமுகமேயில்லாத
நிலையில் அவனது பயணம் நிகழ்ந்தது.ஓட்டமாவடி என்ற ஊர் அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலாவினால்
படைக்கப்பட்டப் பிறகு இப்போதுதான் தனது கால் அங்கு பதிந்ததை நினைத்துக் கசிந்தான்.அதிலிருப்பது
மகிழ்ச்சியா?துயரமா?என்ற குழப்பத்துடன்.
“இது நாடு காண் கமருத்தீனின் பாதமல்லாமல் பிறிதொன்றா?”
வண்டிக்குள்ளிருந்து எழுந்த குரல் தொடர்ந்தது.
”பாதம் விட்டு பாதம் பாயும் இரசவாதம் என்னவென்று சொல்லு
சிங்கா?” இராகமும் கூடியிருந்தது.
தன்னைக் கதைக்குள் கண்டு பிடித்து விட்டார்களே எனஉள்ளுக்குள்
சிறு பதற்றம் தொற்றினாலும் மனத்தையும் உடலையும் ஒரு சேர வார் போல இறுக்கிக் கொண்டான்.
“இப்படி இடய்க்கிடை கொழப்பினா கத ரசிக்காது…”.
குரலெழுப்பியவர்களை வண்டியிலுள்ள ஏனையோர் எரிச்சலுடன் பார்க்க
இறுக்கமான மௌனம் நிலவியது.
வண்டியிலுள்ளவர்களின் அனைத்து செவிகளும் தன் சொல்லுக்காக
மடல் தாழ்த்தியதை தனது கிருஸ் கண்ணால் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டதில் அச்சம்
நீங்கியது. கிசுகிசுப்புக்கே உரித்தான தாழ் தொனியில் பூனையின் மென்மையுடன் கதையை இழுத்துப்
பிடித்துத் தொடர்ந்தான்.
தனது கண்ணீரில் வாப்பா பாசம் மிகைத்திருந்ததாக கமருத்தீன்
கணக்குக் கூட்டினாலும் அதற்குள் இழையளவிற்கு கிளர்வும் ஒளிந்துக் கிடந்ததை பிரித்தறிந்து
மேலும் கிளர்ச்சியடைந்தான்.வேனுக்குள் பரவிய நறுமணத் திவலைகளை எல்லோரும் உணர்ந்தனர்.
வாழைச்சேனை இரயில் நிலையத்தில் இறங்கினான் ஹஸன். அவனுடன்
ஒரு குடும்பமும் இறங்கிற்று.அவர்களைப் பின்தொடர்ந்து நிலையத்திலிருந்து வெளியே வரும்போது
“அல்லாஹூ அக்குபர்” என ‘க்’ கில் தங்கி நீளும் மலையாளக்கரையின் இராகத்தை ஒத்திருந்த
விளி.அங்கிருந்து தென்பட்டது குலசை ஆனைக்கார வீட்டின் முற்றம்தான்.
மாவட்ட நீதவான் நீதி மன்றத்தின் பின்புறத்தில் பள்ளிவாசல்.
ரொம்ப தொலைவு நடக்க வேண்டியதில்லை.ஆசுவாசத்தில் பயணப்பொதியைக் கீழிறக்கினான்.சுபஹ்
பாங்கின் ஓசை தொடங்கியதும் நீதி மன்ற வளாகத்திலிருந்து புறப்பட்ட நாயின் ஊளை.பாங்கில்
வெருண்டோடும் செய்த்தான்களை அதனதன் ஊர்களில் கொண்டு விடும் வரைக்கும் விடாத ஊளை என
சலித்தவாறே பையை மீண்டும் கையிலெடுத்தான்.
ஓட்டமாவடியில் தனக்குத் தெரிந்தவர்கள் என யாருமில்லை.”எந்த
துணிவில் இங்கு வந்தோம்?”. பள்ளிவாயிலுக்கு போவதற்கு யாரைத் தெரிய வேண்டும்? சிரிப்பு
வந்தது. திரும்பி விடலாமா….? அருகமை வீட்டின் வேலிப்படலுக்குள்ளிருந்து கேட்ட கோழியின்
குறுகுறுப்பில் த அதை கைவிட்டான்.
சுபஹ் தொழுகைக்காக ஒழூச்செய்யும்போது
முஅத்தின் இவனைக் கண்டுப் புன்னகைத்தார்.நடுத்தர வயதைக்
கடந்த மனிதர்.விசாரிப்பின் நாட்டமும் நட்பும் கலந்த புன்னகை.
தொழுகை சுஜூதில் கேட்கும்
துஆக்கள் நிராகரிக்கப்படுவதில்லை. தனக்கான வேண்டுதலைக்
கேட்கும் முன் பள்ளிவாயிலின் இணக்க சமிக்ஞைகளுக்காக முதலில் இறைவனிடம் நன்றி செலுத்தினான்.
எதைக்கேட்க எப்படிக் கேட்க என்ற சிறு தடுமாற்றத்திற்குப் பிறகு “ அறியா வழிகளைத்
திறப்பவனே! எனது தேடலை வெளிச்சத்தில் நிறையச் செய்வாயாக”.அதற்குள் இமாமும் தலை உயர்த்தி அத்தஹிய்யாத்துக்கு
வந்தார். நன்றியறிவித்தலுக்குப் பிறகு கேட்கும் வேண்டுதல்களுக்கு இன்னும் வலு கூடுதல்
என்பதில் மனத்தின் சலனம் தணிந்தது. துஆ சலவாத்துக்குப்
பிறகு இவனே முந்திக் கொண்டு முஅத்தினை நெருங்கி விவரங்களைச்
சொன்னான்.
அவன் சொன்ன இலக்கை நிதானமாகக் கேட்டுக் கொண்டவர்“எனக்கு ஓட்டமாவடியில பெரிசா யாரயும் பெரிசா தெரியா.எண்ட ஊரு டிரிண்கோ
பக்கம் கிண்ணியா.” என சொல்லி விட்டுத் தாமதித்தார்.
“எப்பிடியும் நீங்க ஓட்டமாவடிக்கு திரீ வீல்லதான்
போகோணும்.இங்க ஒரு ஓட்டமாவடிக்காரரு ஹையருக்கு திரீ வீல் ஓட்றார்.”
பள்ளியிலிருந்த சிறுவனை அனுப்பி ஆட்டோக்காரரை வரவழைத்தார்.ஆட்டோ வரும் வரைக்கும் அவரது
அறைஅடுப்பில் ஏலம் மணக்கும் வெறுந்தேயிலையை போட்டு நீட்டியவாறே.”ஒங்கட ஊர்லயும் பிளய்ன்
டீ இரிக்குமா இரிக்கும்”.
“வெறுந்தேயில இல்லாம எங்கட ஊரு இல்ல. விஷயம் என்னடான்னா
யாருட டீ முந்துனதுங்குறதுதான்.”
“ எது எப்படியின்டாலும் ரண்டு ஊருக்குமான தேயிலப்பாலம்”.
“பாலம்டு சொன்னா அதுல ஒரு தொலய்வு இரிக்குது. குறிலுக்கும்
நெடிலுக்கும் உள்ள வித்தியாசம்”
”பள்ளிவாசல்லேந்து கிழக்கில முங்கிக் கீழ எறங்கினா ஊர் வராமஎன்ன?. தொலய்வுங்கறது ஒரு கணக்கு
மட்டுந்தான்.”இருவரும் சிரித்தனர்.
ஆட்டோ வந்தது. ஓட்டுநரிடம் விவரம் சொல்லி ஹஸனை ஏற்றி விடும்போது “திரும்ப போகும்போது டைம் கெடச்சா பள்ளிக்கு வந்துட்டு
போங்கோ” கையசைத்து வழியனுப்பினார்.
கிளம்பிய ஆட்டோவை சற்று நிறுத்தி பயணப் பொதியிலிருந்து
காகிதச் சிப்பமொன்றை எடுத்து முஅத்தினை அழைத்து அவர் கையில் வைத்தான்.புரியாமல் நின்றவரிடம்”புள்ளய்லுவுக்குக்
கொடுங்கோ மாம்பழப்பனாட்டு.அதான் மாங்கா மஸ்கோத்.’’
கல் வேலியும் தகர வேலியும் கொண்ட வீடுகள் மாறி மாறி வந்தன.
அரஃபாத் தெருவின் நடுவில் அவ்வீடு இருந்தது.இறக்கி விடும் சமயம் ஆட்டோக்காரர்”இவங்க
ஒங்களுக்கு சொந்தமா?” எனக் கேட்டார். அவர் முகத்தைப்பார்க்காமல் “ஆம்” என்றான்.
ஓடு போட்ட வீடு.வீட்டுப் படியின் கீழில் சுவற்றோடு ஒட்டி
வளர்ந்த நித்தியக் கல்யாணிச் செடியும் அதிலிருந்து சில அடிகள் விலகி சரக் கொன்றை மரமும்
நின்றன. பூக்களின் மஞ்சள் பளிச்சிடலில் அதிகாலையின் சாம்பல் தன் நிறமிழந்திருந்தது.
பாதி திறந்திருந்த சன்னலிலிருந்து பல்பின் மஞ்சளொளி பரவியது.ஆட்கள்
எழும்பவில்லையோ என்னவோ? எதுவானாலும் விடியப்போகிறதுதானே.கேட்டாலும் கேட்காவிட்டாலும்
சரி என்ற மாதிரிக்கு“சுபைர் காக்கா…” கணக்காகக் குரலெழுப்பினான்.
அந்தப் பக்கத்திலிருந்து அசைவொன்றுமில்லை.மறுபடியும் கூப்பிடவா?இல்லை
கொஞ்சம் சுணங்கலாமா?...... தெருவிலும் ஆட்களின் நடமாட்டமில்லை.
வீட்டருகிலுள்ள புதர் அசைந்தது.நாய்.செவிகளை விடைத்து ஹஸனைக்
கூர்த்தது. செங்கருப்பு நிறம். “உர்ர்ர்…” நீண்ட உறுமல். வயிற்றிலுள்ளவைகள் வெளியே
வந்து விடும்படியான முழுக் குரைப்பாக மாறியது. காற்றிலும் பாயும்படியான நீளமும் உயரமும்
கால்களில் தசைத் திரட்சியும் கொண்ட சாட்டை நாய். “கையில் எதுவும் பண்டமீந்தா அதுக்கு
வீசலாம்.காசக்கூட போட்டுரலாம்.பிள்ளைக் காய்ச்சி மரம் உம்மாடீ.”ஒரு கையால் கவட்டைப்
பொத்திக் கொண்டு இன்னொரு கையால் கல்லைத் தேடினான். அகப்படும் தொலைவில் ஒன்றுமில்லை.
நாய்க்கு சற்று அருகில் சென்றான்.அது இவனைக்
கண்டதும் கொஞ்சம் இடம் விலகியது.குரைப்பில்லை. ஆனால் தொடர்ச்சியாக உறுமியது.
இப்போது அவன் இன்னும் அதை நெருங்கினான். நேருக்கு நேர்
அதைப் பார்த்து “டாய்! சொன்னாக் கேளு.போயிரு”.அதுஉறுமலை நிறுத்தியிருந்தது. பார்வையில்
இணக்கமில்லை.”போடா “என இவன் அழுத்தமான ஓசையுடன் மூன்று முறை கத்தினான்.கல் மீதான அச்சத்தில்
பாதியாவது சொல்லுக்கு இருக்க வேண்டுமே. நாயோ
எவ்வித அசைவும் காட்டாமல் நின்றது.
“திரும்பப் போயிரு”.
முதுகில் அடிபட்டதைப் போலத் திடுக்கிட்டுத் தலை தாழ்த்திய பின் நேர்க்கோடு
இழுத்தாற் போல ஒரே சீராக மெல்ல தெரு முனை நோக்கி நடக்கத் தொடங்கியது.
தனது இரு கூச்சல்களுடன் நாயின் குடலதிரும் குரைப்புக்குப்
பிறகும் கூட சுபைர் காக்கா வீட்டின் சாளரத்திலோ கதவிலோ எவ்வித அசைவாட்டமுமில்லை.
”கறுத்த நாய் வருதுன்டா
அது செய்த்தாண்ட வடிவம். நான் கதவத் தட்ட வாணாங்குறதுக்குள்ள சாடயா?. திரும்பப் போய்ருவோமா?
அப்பிடிப் போனா டிக்கட் காசுதான் போவும். அது கூட நஷ்டமில்ல. புது ஊரப் பாத்திருக்கோந்தானே?.
பாத்தது கேட்டது வரைக்கும் நயம்”.
நள்ளிரவில் மம்த்துக்கார் ஆலிம்சாவை துரத்திய நாய்க்கு
கண்களின் இடத்தில் மூன்று நெருப்புக்கங்குகள் இருந்தனவாம்.ஊரில் வாப்பா சொல்லிக் கேட்ட
கதை.அரை நூற்றாண்டுக்கு முன் நடந்தது.இன்னும் எத்தனை நூறாண்டுகள் சென்றாலும் நாய்களுக்கு
இரவில் நெருப்புக்கண்கள்தான். “நல்ல வேள நம்ம நாய் பகல்ல வந்துது”.நெஞ்சை நீவிக்கொண்டான்.
“அட முட்டாள்! பூனயும் நாயும் ஒலகத்துல இல்லாத எடம் இக்குதா?.அதப்பாத்தா
நாம இக்கிற எடத்துல கூட வாழ ஏலாது. இவ்ளோ தொலய்வு வந்தாச்சி. ஒனக்கும் நீ தேடி வந்ததுக்கும்
ஒரு அடிதான் வித்தியாசம். ஒன்னும் இல்லன்டா என்னக் கெட்டுப் போச்சு? அடுத்த வண்டியப்
பாத்துக் கெளம்பப் போறோம்”.
4
பிச்சலாட்டத்தை
சுண்டி எறிந்துவிட்டு மனத்தைத் திரட்டியவாறு கதவைத் தட்டினான்.கொட்டும் ஓசை திரும்ப
அவனிடமே வந்தது.
அடுத்த தட்டுதலுக்கு முன் கதவு திறக்க சிறுவனொருவன் நின்றிருந்தான்.
வெள்ளைக் கூம்பாரத் தொப்பியும் சாரமும் அணிந்து
கையில் குர்ஆன் காயிதா கிதாபு . கண்களை சுருக்கியவனின் நாசித்துளைகள் விரிந்தன.ஹஸனைக்
கண்டதும் “ உம்மா யாரோ வாசல்ல நிக்கிறாங்க.” வீட்டுக்குள் குரல் கொடுத்தான்.ஹஸன் படியிறங்கித்
தெருவில் நின்றான்.
கையை தன் கீழாடையில் துடைத்தபடி இளம் பெண்ணொருத்தி வீட்டிலிருந்து
எட்டிப் பார்த்தாள். சிறுவன் அவளுக்குப் பின்னால் போய் மறைந்துக் கொண்டான். வீட்டு
முகட்டுக்கு மேலே செம்மஞ்சள் கிரணம் எழுந்தது.வௌவால்கள் இரண்டு எதிரெதிர் திசைகளில்
சேர்ந்தும் விலகியும் பறக்க அதற்கு சற்று மேலே தவிட்டு நிறப் புறாவொன்று வளையப் பறத்தலில்
வடக்கேகியது.
ஆள் யாரென்று பிடிபடாத கேள்விப்பார்வையில் கழுத்தில் கிடந்த
துணியை முகத்திற்கும் தலைக்குமாக இழுத்தபடி சற்று உள்வாங்கினாள்.
“சுபைர் காக்காவ தேடி வந்தன்”. சிறுவனை பிடித்திழுத்து முன்னுக்கு நிறுத்தியவள்
“காக்கா உம்ராக்கு
பெயிருக்காங்க”
என்றாள்.
மூன்றாவது தலை உள்ளிருந்து தென்பட்டது. நடுத்தர வயது பெண்.
இளம் பெண்ணின் சாயல். கண்களில் தேங்கி நின்றவை சொல்லாகும் முன்னரே “நா இந்தியாவுலேந்து வாரேன். எம் பேரு ஹஸன்.
ஊரு குலசேகரப்பட்டினம். முபாரக் அவங்கட மகன். சுபைர் காக்காவ தேடி வந்தன்.” ஒரு சொல்லும்
தெற்றாததில் ஏற்பட்ட நிறைவில் முகம் பூத்து நின்றான்.
“அல்லாஹூ! இங்க யாரு வந்திருக்கானு பாருங்களேன்.
மொதல்ல உள்ள வாங்க”. இருவரில் யாரிடமிருந்து இக்குரல் வெளிப்பட்டது?
சொற்களாலான போராட்டம் இப்படியொரு இனிய கூக்குரலில் விரைந்து முடியும் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
சற்று முந்திய கணம் நெப்டியூனுக்கும் அப்பால் நின்று கண் சிமிட்டியது. அது காயந்த அப்பளத்தைப்போலிருந்தது.
“கொலசேகரப்பட்டணத்துலேந்து
எப்ப வந்தீங்க? எப்படி வந்தீங்க?”
மலையும் முகிலும் கல் படியாகியிருந்தன. அல்ஹம்துலில்லாஹ் சொன்னவாறு அதில் ஏறி உள்ளே சென்றான்.
ஒன்றிலிருந்து ஒன்றுக்கு ஒப்பான சாடைகள்.வைகறையில் நிலம்
தெளிவது போல சங்கதிகள் சுருக்கென அவனுக்குப் பிடிபட்டன.
அவர்கள் சொல்லாமலேயே இவன் பழுப்பு நிற மெத்திருக்கையில்
போய் அமர்ந்தான். மனாம் குறிப்பேட்டைப் பார்த்ததிலிருந்து இங்கு வந்து சேர்ந்தது வரை
உள்ள நடப்புகளை சொல்லி முடித்தான்.
“எப்படியோ கதை
இப்போ முழுசாயிடுச்சி” என்ற தனது சொல் கதையின் முடிவுக்கு மேல் விழுந்த அழகிய முத்திரையாகவும்
புதிய திறப்பாகவும் ஆகியிருப்பதை அறிந்தான்.
“அல்லாஹூ! வானத்துல உள்ள நச்சத்திரம் ஊட்டுக்குள்ளல்ல
வந்திருக்குது.மொத மொதலா அவங்க இங்க வர்றப்போ பாத்த மாதிரில இருக்குது”.
“அப்போ ஒங்கட வீட்லயும் ஒரு ஹஸன் இக்கிதா?”
இறகாகி இறங்க வேண்டிய ஒரு சொல்லை விஷயம் தொடங்கியும் தொடங்காமலும்
எதிர்க்கேள்விக் கேட்டு கலைத்ததை வீட்டார்
எப்படி எடுத்துக் கொள்வார்களோ? மேற்கொண்டு சொல் வளராதோ? வருந்தினான். முந்திரிக் கொட்டைத்
தனத்திற்காக தன் மீதே எரிச்சல் மூண்டது.
நடுத்தர வயதுப் பெண்ணோ தன் முகத்தின் மலர்வை இன்னும் அகலமாக்கி
இளம் பெண்ணின் பக்கம் தலையைத் திருப்பினாள். “இவளுக்கு நேர் கீழத்தான் அவன்” என்றாள்.
வீட்டை அப்படியே தூக்கிக் கொண்டு ஊருக்குப் போய் விட வேண்டும் போலிருந்தது ஹஸனுக்கு.
அவனின் கண்கள் துழாவுவதைக் கவனித்து விட்டு “ இளைய ஹஸன
தேடுறீங்கப் போல. அவரு பேராதனிய யூனிவசிட்டியில முதுமானி கோர்சுக்காக தங்கிப் படிக்கிறாரு.”
“எல்லா மரங்களும் ஒரே சமயத்துல பூத்துக் குலுங்குற மாதிரி
இக்கிது சாச்சி”.
ஹஸனின் கைகளைப் பற்றி அவன் நெற்றியில் முத்தமிட்டு “சாச்சிங்கற அந்த ஒரு சொல்லு போதும் மகன்” நடுத்தர வயதுப்
பெண் கலங்கினாள்.
தேநீருடன் தட்டு
நிறைய இறைச்சி சமோசாக்களையும் மரப்பலகையில் வைத்தபடியே “ உம்மாட பேரு சுபீனா முபாரக்”என்ற
இளம் பெண்ணின் குரலில் சாச்சி கட்டுக்குள் வந்தாள்.
ஹசனை உபசரிக்க மறந்தது நினைவுக்கு வர “மன்னிச்சுக்கோங்க
மகன்! வாப்பாட நெனவு வந்தா துன்யாவே மறந்துடுது” என்றவளைப் பார்த்து “உம்மா! ஒங்க கதய
மறுபடியும் தொடங்கினா காக்கா எப்பதான் சாயா
குடிக்கிறது?”
தேயிலைக் குவளையையும் சமோசாவையும் எடுத்து நீட்டிய சிறுவனை
உற்றுப் பார்த்தான்.கண்கள் மலேயன் சாடையை ஒத்திருந்தன.பூட்டிய வாயிலிருந்து முகம் முழுவதும்
பரவிய புன்னகையில் தங்கச் செப்புத் துலங்கியது. நெஞ்சோடு சேர்த்துக் கொண்டான்.வாப்பாவின்
புகைப்படக் கோவையிலிருந்த வாப்பிச்சா வீட்டு அப்பாவின் விளிம்பு சிறுத்து விழி கூர்த்த அதே கண்கள்.
“வாப்பா,உம்மா,சாச்சி,தங்கச்சி,காக்கா,தம்பி,மச்சான்,மருமகன்”
என மீண்டும் மீண்டும் ராத்திபைப் போல சொன்னவனைச் சுற்றி வானமும் நிலமும் நிறைந்திருந்தன.
தங்கச்சி ஹஸீனாவின் திருமணம், அவளது கணவன்,வேலை பற்றி விவரித்துக்
கொண்டிருந்த சாச்சியை இடைமறித்து “வாப்பா இங்க எப்படி வந்தாங்கங்கற கதயல மொத சொல்லணும்”
என்றவனை வெட்கத்துடன் பார்த்தாள் அவள்.
ஹஸனின் தலை முடியை தன் இரண்டு கை விரல்களாலும் அளைந்துப்பிடித்து
உலுப்பியவாறே “எஞ் செல்ல காக்காக்கு எல்லாம் அவிசரம் தான், இப்ப தூங்கி எழுப்புங்க.ஆறுதலா எல்லா கதயயும் இராவய்க்கு
பேசலாம்”என்றாள் தங்கை ஹஸீனா.
மாடி அறையை அவனுக்கு ஒதுக்கினார்கள். முழுக்க அலுப்பிருந்தாலும்
அவனுக்கிருந்த மனக்கிளர்ச்சியில் தூக்கம் வரவில்லை. இளம் வெந்நீரில் குளித்த பிறகும்
தூக்கம் வருவதாகயில்லை. கையோடு கொண்டு வந்திருந்த மனாம் விளக்கக் குறிப்பேட்டை திரும்ப
எடுத்து வாசித்தான். எழுத்திலுள்ள கனவுக்கே இத்தனை பரவசம்….
வாப்பாவின் மனாமிற்குள் வருவதற்கு சாச்சி தாண்டிய தொலைவை
கடல் காற்று கங்குலிலான கல் கொண்டல்லவா அளக்க வேண்டும்…? இந்தத் தொலைவை சாச்சி தாண்டிய
பிறகுதான் வாப்பா நிசத்தில் தாண்டியிருக்கிறார்.தொலைவையும் நெருக்கத்தையும் அருகருகில்
வைத்துப் பார்த்து அதில் ஆழ்ந்தான்.எல்லாம் மங்கத் தொடங்கின.
அறைக் கூரைக்கும் ஹஸனது முகத்திற்கும் இடைப்பட்ட வெளியில்
நிறமற்ற சாய் சதுரமொன்று தோன்றியது.அதற்குள் சாம்பல் நிற வெந்நீர் ஊற்றுக்கள் ஒன்றையொன்று
தழுவியும் விலகியும் பீறிட்டுக் கொண்டிருந்தன.அதன் கொந்தளிப்பில் மனம் களைத்து கண்
முழுமையாகக் கிறங்கியது.
கடல் வெக்கையேறிய உப்புக்காற்றில் சூடேறிய அறையை உடல் அறிந்ததில்
விழிப்புத் தட்ட கைக்கடிகையில் மணி மூன்று.
படியிறங்கி வந்தவனுக்கு மரப்பலகையில் மதிய உணவு பரத்தி
வைக்கப்படிருந்ததைப் பார்த்து மனத்தில் இக்கட்டு தோன்றியது.
மெத்திருக்கையில் காலாட்டிக் கொண்டு படுத்துக் கிடந்த மருமகச்சிறுவன்
“மாமா வந்துட்டாங்க”என குரலெழுப்பினான். சாச்சியும்
தங்கச்சியும் கூடத்திற்கு வந்தனர்.
அவிழ்ந்த தலை முடியை வளைந்துக் கொண்டை முடிந்தவாறே “வாப்பா வாமா! மருமகன அனுப்பி ஒன்ன எழுப்பலாம்னு பாத்தா நீ நல்ல
அசந்து தூக்கம்”
“ஏன் சாச்சி அதுக்காக இவ்ளோ நேரம் நீங்கல்லாம் சாப்பிடாமயா
இந்தீங்க?”
“ காலம் முழுசா நேரத்துக்குத்தானே சாப்புடுறோம். நாம ஒன்னா உக்காந்து சாப்புடுற மொதல் சாப்பாட்ட
உட்டுறக்கூடாதே.”
ஏணிப் படியிலேயே
உட்கார்ந்துக் கரைந்தான்.கண்டங்களைப் பிணைக்கும் வாப்பாவெனும் கடலில் குதித்த
பின் இனி கரை சேர வேண்டாம் என அவனுக்குத் தோன்றியது.
“ஒரு காலமும் நடக்காதுனு நெனச்சிக்கிட்டிருந்ததுலாம் இப்ப
நடக்குது யா அல்லாஹ்!”. மழை பெய்து கழுவி விடப்பட்ட தெருவாய்யிற்று மனம். இன்பமேற்கும்
மனத்தின் கொள்ளளவு இன்னும் கூடியிருந்தது. சாச்சியின் உருவம் இப்பொழுதுதான் அவன் கண்களைத்
தாண்டி மூளைக்குள் தெளிந்து வந்தது. தடத்தைக் கண்ட கொந்தளிப்பில் காலையில் எதுவுமே
அவனுக்கு புலப்படவில்லை.
என் டி டிவி செய்தி வாசிப்பாளராக இருந்த நிதி ரஸ்தானின்
சாயல்தான் என உறுதி கொண்டான். தெளிவுக்காக செல்பேசி திரையில் ரஸ்தானின் பெயரை தட்டச்சிப்
பார்த்தான். ஆனால் சாச்சிக்கு சற்று கூரேறிய காதின் மேல் நுனிகள்.அந்த பேருந்தில் இருந்த
பெண்ணின் சாயலும் சாச்சியின் சாயலும் ஒன்றா? வாப்பாதான் வந்து சொல்ல வேண்டும்.
காதின் நுனிகள்தான் வாப்பாவை கட்டாயம் பிடித்து வைத்திருக்கும்.
மேலே செல்லஆர்வம் உந்தினாலும் வாப்பாவின் அறைக்குள் போகக் கூடாது…..
“கனவையும் வாசித்து கனவில் வந்த மனுசியையும் பார்த்த பிறகும்
எனக்கு ஏன் இப்படித் தோன்றுகிறது…?”
சாச்சியையும் ஹசனையும் தங்கையின் குரல்தான் சாப்பாட்டு
பலகைக்கு கொண்டு வந்தது. முந்திரிப் பருப்பை பொறித்து இட்ட நெய்ச்சோறு,வறுத்த கோழியிறைச்சி,கித்ல்
பாணி வட்டிலாப்பம்,இனிப்பும் புளிப்புமான திரவங்கொண்ட மா ஊறுகாய்,சம்பல்,சலாது,அன்னாசித்
துண்டங்கள் பரத்தப்பட்டிருந்தன.
“காலயிலயும் ஒன்டும் திங்கல்ல, டீயும் சம்சாவும்தான் திண்ட”
புதினமாகத் தென்பட்ட
மா ஊறுகாய் செப்பை தன் பக்கம் இழுத்தவாறே “ஆமா எனக்கும் ஒங்களயெல்லாம் பாத்த
சந்தோஷத்துல பசி மறந்துட்டுது” என்றான் ஹஸன்.
பிஸ்மி சொல்லி தன் தட்டில் முதல் அகப்பைச் சோற்றை இட்ட
சாச்சியிடம் “ இனி மிச்சத்த நான் பாத்துக்குவேன்.இது என் வயிறு என் வீடு”. மருமகச்
சிறுவன் கண்களைச் சுருக்கி இரசித்தான்.சாப்பாட்டுச் சுற்றின் நிறைவில் வாழைப்பழச்சீப்பும்
தோடம்பழச் சாறும் வந்து சேர்ந்தன.
“வாய் நம நமங்குது. வெத்தலப் பாக்கு கிடய்க்குமா?”.அவன்
கேட்டவுடன் சாப்பாட்டுக் கலன்களை அப்புறப்படுத்திக்
கொண்டிருந்த சாச்சி திரும்பிப் பார்த்தவாறே “பாக்கு வழியாத்தான்
ஒங்க வாப்பாவ நானும் என்ன ஒங்க வாப்பாவும் பிடிச்சிக்கிட்டோம்” முகத்தில் வெற்றித் திலங்கச் சொன்னாள்.
தங்கச்சி ஹஸீனாவின் கண்களில் வெட்கம் படர தன் உம்மா சொன்னது
காதில் படாததைப்போல அடுக்களைக்குள் நுழைந்தாள்.
“வாப்பாங்கற மேகம் இங்க வந்து நின்ட கதயக் கேக்காம இங்கேருந்து
கிளம்ப மாட்டேன்”.
“அந்தக்கதய சொல்றப்போ வாப்பா ஹயாத்தா இருந்து
கேட்டுக்கிட்டிருந்தா எப்பிடி இருக்கும்?”.
“வாப்பா ஹயாத்தா இருந்திருந்தா எனக்கும் இங்க வரக் கெடச்சிருக்காதுதானே
சாச்சி.”
“அவரு இங்க வரல்லேன்னா நீங்களும் இங்க வந்திருக்க மாட்டீங்க.
கோழியிலேந்துதான் முட்ட”.
தன் பேச்சின் அபத்தம் அவனுக்குக் கொடுக்கென்றது.
கடைக்கு போயிருந்த மருமகன் ஓட்டமும் நடையுமாக வந்து வெற்றிலைச்
சுருளை தன் உம்மும்மாவிடம் கொடுத்தான். காம்பைக் கிள்ளி சுண்ணாம்பை ஒற்றை தீற்றலில்
நெளி கோடாய் தேய்த்து அதற்குள் நறுக்கிய பாக்கின் துண்டத்தை சேர்த்து மடித்து ஹஸனிடம்
சாச்சி நீட்டினாள்.
வெற்றிலையை அதக்கி சவைத்தவன் அதன் கார மணத்தில் சொக்கினான்.வயிற்றையும்
மனத்தையும் ஒரே நேரத்தில் கழுவியெடுக்கும் வலு உள்ள தாம்பூலத்திற்கு கூடுதலாக சௌந்தரிய
விசையும்.
கிழக்கிற்கு வந்த பிறகு முகத்தைக் கண்ணாடியில் இன்னும்
பார்க்கவில்லை. அலைச்சலுக்கும் வியர்வைக்கும் பிறகான தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க
நேரிடும்போதெல்லாம் இரு கன்னங்களையும் கைகளால் பிடித்திழுத்தவாறே சொல்லிக் கொள்வான்
“இந்த தொஞ்ச மாவுல நாலு புரோட்டா சுடலாம்.”
வீட்டின் மேற்கு மூலையிலிருந்த ஜெர்மன் கண்ணாடி முன் நின்று
சீப்பைத் தேடும்போதுதான் தன் உதடு அவ்வளவு சிவப்பு பூண்டிருப்பதைக் கவனித்தான். செங்குழம்பில் ஊறிய
நற் பவளத்தில் உருட்டிச்செய்யப்பட்டவைகள். “ரசவாதத்தின் நெறம் செவப்பு.ரூமியின் மொழியில்
அவுரியைப்போல ஊதா படிந்த இதழ்கள் இதையே சிறு வயதில் சொல்லியிருந்தால் தனக்கு ‘தன்ன
மெச்சான் ‘ பட்டத்தை மொச்சை காஜா சூட்டியிருப்பான்.
அவன் தனக்குள் பேசி சிரித்துக் கொண்டதைக்கவனித்தவளாக “
என்ன காக்கா?” என்ற ஹசீனாவிடம் “இங்க உள்ள வெத்திலப் பாக்குக்கு நல்ல நெறம் வருது இல்லியா”என்றான்.
“நான் வெத்தில போர் ரல்ல காக்கா
“
வெத்தலயப் போட்டுத்தான் தெரியணும்னு இல்லமா.அதபோடறவங்கல
பாத்தாலும் போதுந்தானே.”
ஏதோ சொல்ல வந்தவள் அமைதியாகி விட்டாள்.
மெத்திருக்கையில் அமர்ந்துக் கொண்டு சாச்சி பின்னல் பாய்
போன்ற அட்டையிட்ட ஏடு ஒன்றை வைத்து தீவிரமாகப் புரட்டத் தொடங்கியிருந்தாள். ஹஸனை சைகையால்
அழைத்தாள். குடும்பப் புகைப்படக் கோவை.
கொடுவாள் மீசைகளுடன் முழங்கை வரை நீளும் கை வைத்த சட்டையும்
தோளில் துண்டும் அணிந்த மனிதர்கள். வண்டின் முன்னழகு பின்னழகைக் கொண்ட மோரிஸ் மைனர்
கார். அதன் மூக்குத்தண்டுப்பகுதியில் அமர்ந்திருந்த எண்ணையோ அசடோ வழிந்த முகங்கொண்ட
சிறார்கள்.ஏதோ சுன்னத் கலியாணத்தில் எடுக்கப்பட்ட படம். அப்படத்தின் கால கட்டத்தையும்
தருணத்தையும் நினைவு கூற சாச்சிக்கு இயலவில்லை.
கறுப்பு வெள்ளையுடன் வண்ணப் புகைப்படங்களும் இருந்தன. நூறு
பேர்கள் நின்றாலும் எளிதில் கண்டுபிடிக்கத் தகுந்த உயரமும் வலப்பக்க சாய்வுமுள்ள துருக்கித் தொப்பியில்
வாப்பா. நாட்டு சுல்தானின் நிமிர்வு.மீலாதுந்நபி விழாக்கூட்ட த்தின் வருடமற்ற புகைப்படம்.
பெரிய புகைப்படங்களுக்கு நடுவே கடவுச்சீட்டுப் பட அளவில்
ஒரு வண்ணப் புகைப்படம். தலையை சரித்தாவறு குறுக்குப் பட்டைக் காதுகளுடைய காற்சட்டையணிந்திருந்த
சிறுவனின் படம்.சிரிப்பை கண்களுக்குள் வைத்திருந்தான்.
”வாப்பாட இவ்ளோ சின்ன வயசுப் படம் இங்க வர சான்சில்லியே
சாச்சி”
“அட என் செல்ல
மூக்கே இது நீங்கதான் ஒங்க வாப்பாவுந்தான்”
“முழிக்கிற முழியப் பாருங்ளேன். இது ஒங்கட
இன்னொரு பிராஞ்ச்”
சில நொடிகள் குழம்பிய பிறகு “இது சுபைர் காக்கா இல்லியா”.
“சுபைர்ட பேரச் சொல்லி எங்களத் தேடி வந்தவர்
நீங்க. இப்ப அவரயே மறந்துட்டீங்க”.
“ஆத்தத்தேடித்தான் வந்தேன்.ஆனால் ஆறு பொறப்புடற எடத்துக்கே
வந்துட்டேனே”.
அனைவரதும் திடீர் சிரிப்பின் வெடிப்பில் திகைத்த மருமகன்
புரிந்தும் புரியாமலும் அதில் இணைந்து கொண்டான்.
“வாப்பாட பேச்சு சாதுரியம் வராம போவுமா?”
புகைப்படக் கோவையை மூடி வைத்து விட்டு சுபைர் காக்காவின் கதையை சொல்லத் தொடங்கினாள்.அவர்
தன்னை விட மூன்று வயது மூத்தவர் என்பதை அறிந்தான்.
சுபைர் காக்காவிடமும் இளையவன் ஹசனிடமும் வட்சப் வீடியோ
அழைப்பில் ஹசனைப் பேச வைத்தாள் தங்கை ஹசீனா.அலைகளின் நுனியில் வீடு உயர்ந்தும் தணிந்தும்
கொண்டிருந்தது.
“வவுத்துல
புள்ளய தந்து போட்டு இந்தியாக்காரன் நாட்டுக்கு ஓடிறுவான்னு முத்துக்கெட்டி தாஹீரும்
அவங்கட ஆக்களும் பேசிக்கிட்டுத் திரிஞ்சாங்க. அவங்க பேச்சிலயும் கல்புலயும் மண் உழுவுற
மாதிரி வாப்பாதான் சுபைருக்கும் ஹசனுக்கும்
ஹஸீனாவுக்கும் எல்லா விஷயத்துக்கும் செலவழிச்சதோடு மட்டுமில்லாம அவங்களே நின்டு
செஞ்சாங்க. கொழும்புல இருக்கிற அவன்ட ஹோட்டேலயும் வாப்பாதான் வச்சிக் குடுத்தாங்க.அப்போ
அவங்கட கேகாலக் கடய மூடுற நேரம்”. கண்ணீருடன் சாச்சி நிறுத்தினாள்.தங்கை
ஹசீனா அவளை தன் பக்கம் இழுத்து சாய்த்துக் கொண்டாள்.
“அந்த பஸாது பேச்சய்லாம் பொய்யாக்கினதுக்காகவே
ஏம் மாப்பிள்ளக்கு சொர்க்கத்தக் குடு அல்லாஹ்னு சொல்லி ஏங் கடைசி மூச்சு வர துஆ செஞ்சுக்கிட்டே
இருப்பன்”.
கொந்தளிப்பைத் திசைமாற்றுவதற்காக “கேகாலய்ல இரிந்த இந்தியா
ஆள் ஒங்களக் கண்டு பிடிச்சதெப்படி இல்லாட்டி நீங்க அவரக் கண்டு பிடிச்சக் கதய சொல்லுங்களேன்
சாச்சி”.
“மகன்…” ஹசீனாவிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள் “அந்தக்
கதய இன்னொரு நல்ல சாப்பாட்டோடத்தான் பேசோணும். நேரப்பட சொன்ன மாதிரிக்கி இன்டக்கி ராவய்க்கே
வச்சிருவோம்.” என்ற சாச்சியின் முகம் இப்போது தெளிந்திருந்தது. பெருஞ்சுழலிருந்து மீண்ட
உணர்வில் பெருகினாள்.
அவர்கள் மூவரையும் ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு சாய்வு நாற்காலியில் போய் அமர்ந்தான். அது இரு நிலங்களுக்கு
இடையேயான பெரும் படகு.எந்த ஊருக்குச் சென்றாலும் அவனை துரத்தும் பின் மதியத்தின் நாய்
தன் உருவிழந்து முந்நீரில் தலை குப்புற நீந்தும் ஆமையாகியிருந்தது.
சாய்வு நாற்காலியில் இன்னும் வசதியாக சாய்ந்துக் கொண்டவனின்
முகத்துக்கு நேரே முழு நீள்சதுர வடிவில் சுவர்க்கடிகை.ஊதாவும் பச்சையும் கலந்த நிறத்துடன்
பெரும் பெரும் அலைகள் ஓசையறுந்து உயர உயர எழுந்து வெண் நுரையாகி தணிந்து கொண்டிருந்தன.கடிகையின்
ஒலி கடலின் ஆழத்திலிருந்து புறப்பட்டு வந்து அலைகளுக்கும் மேலே எழுந்து பெருத்து விண்ணிற்குள்
ஏகியது.
அஸரில் எல்லோரும் கடற்கரைக்கு சென்றார்கள்.கண்ணில் தட்டுப்பட்ட
உறவினர்கள், அறிந்தவர்கள் என எல்லோரிடமும் ஹசனை”இது என்ட மகன்” என சாச்சி அறிமுகப்படுத்தினாள். வியப்பிலும் கேள்வியிலும்
கண் மலர்த்தியவர்களின் உள்ளக் கிடக்கையை எதிர்பார்த்திருந்தவள் “இது என்ட மாப்பிளய்ட இந்தியாக்கார மகன்” என இரண்டு மூச்சுகளெடுத்து
விளக்கினாள். அவ்வழியே கடந்து சென்றவர்கள் இவர்களை புதினமாகப் பார்த்தனர். இனி சொல்லிப்
பரத்த ஆளில்லை என்பது உறுதியானவுடன் ஆர்ப்பின் அலையடங்கி அமர்ந்தாள். கடற்கரையின் பால்
மஞ்சள் மணலில் கதிரவனின் கிரணம் அடர்ந்தது.
ஹசீனாவின் மகன் குச்சி குல்ஃபியில் திளைத்திருந்தான். சாச்சி மணலை அளைந்துக் கொண்டிருந்தாள்.சற்று
தொலைவில் புதைந்துக் கிடந்த பழுப்பு நிற சங்கொன்றை
எடுத்து மணல் துகளை உதறினாள். குதிரை முள்ளி சங்கு.
“ஒன்டு ரண்டு மூண்டு நாலு அஞ்சு…. ”
அதன் கொம்புகளை எண்ணி வந்தவள் மேலும் கீழுமாக புரட்டினாள்.அது வளைந்து வளைந்து ஒன்றுக்குள்
ஒன்றாகி சங்கின் தலையில் முடிவதைக் கண்டு குழம்பி எண்ணுவதை நிறுத்தினாலும் அவளின் விரல்கள்
சங்கை வருடிக் கொண்டிருந்தன.
“ஒங்க வாப்பா தந்த மோதிரமும் இந்த சங்குட நெறந்தான்”
.விரலை நீட்டினவளின் மோதிர வளைய பட்டையில் ஆகாயமிருந்தது,
“நாறப்பாக்கு கொட்ட ஒன்ன எடுத்து அளவா நறுக்கி சாயம் பூசி மோதிரங்கட்டி எங்கய்ல தரும்போது
வாப்பா அழப்பாத்தாரு.என்னப்பாக்கனும்டு நெனப்பு வந்தா இதப் பாத்துக்குங்கோன்டு அவர்
சொன்னதாவே நான் நினச்சுக்கிட்டேன்.”
வாப்பா இரு நிலக் கண்டங்களை நெய்யும் பட்டு நூல்.பெரு ஓட்டத்தின்
இரு கரைகளிலும் இளைப்பாற அரண்மனைகள் கட்டியிருக்கும் பேரரசன். தவறிட முடியாதபடிக்கு
இரு திசைகளிலும் ஓடும் வற்றாத நதியின் ஒழுக்கில் தான் ஒரு துளி. அத்துளிக்கு கடலிடம்
நாம் தொலைந்து விடுவோம் என்ற அச்சம் அகன்றிருந்தது.
என்னதான் பேரலைகள் கடலிலிருந்து எழுந்தாலும் கரையை ஆவேசமாக
முட்டி உதைத்து தள்ளினாலும் அவை கடலுக்கு தான்
பிறந்த இடத்துக்கு மீண்டு விடத்தான் செய்கிறது.
வேட்டை வெறியுடன் பாய்ந்த சுனாமி அலைகள் எதுவும் கரையில்
ஒரு துளி கூட எஞ்சியிருக்கவில்லையாமே.நாகப்பட்டினத்திலும் மருதமுனையிலும் ஒரே மாதிரியாகத்தானே
சொன்னார்கள்.அதனால்தான் வாப்பாவின் ஹால் குலசையிலேயே
கரை ஒதுங்கி முடிந்தது.
நல்ல தாளிப்பின் மணம் பரவியது. நிறங்களிலான குவியலொன்றை
பாக்கு தட்டங்களில் இட்டு எல்லோரிடமும் நீட்டினாள்
ஹஸீனா. மரவள்ளிச் சீவல், கறிவேப்பிலை, இறால் கூனி இட்டு தாளித்து கதம்பமாக்கி அதை அவித்த
கடலைக்குள் போட்டு வெங்காயமும் சேர்த்திருந்த சிற்றுண்டி.சாச்சி உணர்வுகளின் கூம்பாரமென்றால்
ஹசீனா உணவால் பேசுகிறவள்.வாப்பாவின் இக்கரைக் கூடாரம் எவ்வளவு அழகானது.
கடலின் ஊதா நிறம் கறுமை கொள்ளத் தொடங்கியிருந்தது.அந்தக்
கரிய திரவத்திலிருந்துதான் இரவுகள் புறப்படுகின்றன. புடைப்புள்ள மத்தகத்துடன் எது வேண்டுமானாலும்
நிகழும் சாத்தியங்களைக் கொண்ட அடுத்த கணத்திற்காக காத்திருக்கும் நெடிய யானையின் மௌனம்
அச்சமூட்டியது
“வெரசா ஊட்டுக்கு போவோம்” என்றவனை ஏறிட்ட சாச்சியும் ஹசீனாவும்
அவனிடம் எதையும் கேட்க முயலாமல் எழுந்தனர்.
கடற்கரையிலிருந்து வீடு சில நூறு மீட்டர்கள் தொலைவுதான்.
மஃரிபு பாங்கு ஒலிக்கத் தொடங்கியது.மூவகை உச்சரிப்புகளிலும் முக்காலத்திலும் ஒரே நேரத்தில்….
இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இடைப்பட்ட அந்நேரத்துக்குள் காலம் சில பத்தாண்டுகளுக்குப்
பின் நகர்ந்தது.
அரையிருட்டில் பள்ளிவாயிலின் மாடி சுவற்றிலிருந்து எழுந்து
பறந்த காக்கையின் சிறகொலி. காக்கை அமர்ந்திருந்த இடத்திற்கு நேரே கள்ள நாணமேறிய செங்கண்ணுடன்
ஒளிர்ந்தது செவ்வாய் கோள்.
“வாப்பா இந்த தெருவுலய்லாம் நடந்திருக்காங்களா?” ஹசனின்
குரலைக் கேட்டு யாரோ பின்னாலிலிருந்து தன்னைக் கூப்பிடுகிறார்கள் என திடுக்கிட்ட சாச்சி
அது அவன்தான் எனக் கண்டதும்” ஏன் மகன் கடக்கறய்யில எழும்புனிங்க.. ஒங்களுக்கு ஏதோ வருத்தம்…”
“ஒன்னுமில்ல சாச்சி.ஒங்க கையால பிளய்ன் டீ ஒன்டு போட்டுத்தாங்க”.சாச்சி,
தங்கை ஹசீனாவுடன் அவள் மகனும் எட்டுக்களை விரைந்து வைத்தனர்.
மதிய உணவுடன் கடற்கரையில் வைத்து சாப்பிட்டதுமாக வயிறு
கனமாக இருப்பதால் இரவுணவு வேண்டாமென்று சொன்னதை சாச்சியும் தங்கையும் ஒத்துக் கொள்ளவில்லை.
“இடியப்பமும் சொதியும் செய்வம், ராவயில சுடு தண்ணி குடிச்சா சரி”
இந்த சொல்லுக்கும் பல மூலகங்களால் ஆன அதன் கனத்திற்கும்
முன்னால் யானைக்கும் மண்டியிடுவதைத் தவிர வேறு வழியிருக்காது. மலரும் நிலவும் ஒருங்கே
தொழிற்படும் சாச்சியின் முகம்.அழகில் உண்மை வந்திணைந்துக் கொள்ளும்போது அதன் எல்லை
காலாதீதமானது.இந்த வரிகள் மனதிலிருந்து மாயும் முன் எதிலாவது எழுதிக் கொள்ள வேண்டும்
என நினைத்தான்.
இஷாத் தொழுத பிறகு மொட்டை மெத்தைக்குச் சென்றனர்.தெரு விளக்குகளின்
ஒளி மாடிச்சுவற்றைக் கடந்து வரவியலாமல் நின்றன.மாடி விளக்கை போடப்போன ஹசீனாவிடம் மெழுகுத்திரியை
எடுத்து வரச் சொன்னான்.
“வாப்பாட காலத்த திருப்ப நெனய்க்குற”.
சாச்சியின் கூர்மையைக் கண்டு ஹசீனா வியந்தாள்.
நாற்காலிகள் போடப்பட்டு மூன்று மெழுகுத்திரிகள் ஏற்றப்பட்டன.
அவற்றின் ஒளி நால்வரின் முகங்களிலும் தொட்டுத் தொட்டு விலகியது. வெளிச்சத்தின் அலைவில்
முகங்களில் செவ்வொளியும் இருளும் மாறி மாறிப் படர்ந்து பாதியாய் தென்பட்டன. மரப் புடைப்பு
ஓவியங்கள் போலவும் உறைவு நிலையிலிருந்து உயிர் பெற்றெழும் ஆன்மாக்கள் போலவும் இருந்தன.
அடுத்த பாதி இருளின் கமுக்கங்களுக்குள் முடிவில்லாமல் விரிந்தது.
வாப்பாவின் ஓட்டமாவடி வருகையைப் பற்றி சற்றும் தாமதியாமல்
சாச்சி சொல்லத் தொடங்கினாள்.ஹசன் குறுக்கிட்டு “சாச்சி! வாப்பா இங்க வந்த கதய வரிசயா
சொல்றதுக்கு முன்னால அத மூணு கட்டமா பிரிச்சு அவங்க இங்க எப்படி வந்தாங்க? நீங்க ரண்டு
பேரும் குடும்ப வாழ்க்கய்க்குள்ள வந்த பொறவு எப்படி இந்தாங்க? உங்களோட கடய்சீயா வாழ்ந்த
கால கட்டம்னு சொல்லுங்க.”
“அதுவும் சரிதான். நீங்க இங்க தங்கப்போற மீதி
நாள் ராவுல மூணு பந்தியா சொல்லலாம்”.
தீவிரங்கொள்ளத் தொடங்கியிருந்த முகத்தில் வழமையான அமைதிக்கும் குறைவில்லை. இரண்டு பாவனைகளையும்
எப்படி ஒரே நேரத்தில் சாச்சியால் தக்க வைக்க முடிகிறது?
இருக்கையிலிருந்து எழுந்த மருமகன் ஹசீனாவின் மடியில் போய்
அமர்ந்துக் கொண்டான். ஹசீனா தன் உம்மாவையும் ஹசனையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.பூமி இரண்டாக பிளந்து இரு உருண்டைகளாகி இரண்டிற்குள்ளும்
தான் இருப்பது போலவும் மிதப்பது போலவும் உணர்ந்தாள்.
தலைக்கு மேலே கேட்ட சிறகொலியில் மேற்கு கிழக்காக பறந்து
சென்ற இராக் கொக்கொன்றை கவனிக்கத் தொடங்கிய மருமகன் விண்மீன்களையும் தனக்கும் அவற்றிற்கும்
இடையே கடந்து செல்லும் முகில் கூட்டத்தையும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தான்.
இலங்கையரசின் காட்டுப்பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரிந்து
வந்த சாச்சியின் வாப்பா பணி நிமித்தம் சிங்கராஜா
காட்டுக்கு சென்றவர் அடுத்த நாளாகியும் திரும்பவில்லை. முந்நூறு வருடங்களுக்கு மேல்
வயதுள்ள ஹொர மரத்தினடியில் அமர்ந்தவாறே இறந்து கிடந்திருக்கிறார்.
அவரின் ஒரே மகளான சாச்சிக்கு அப்போது பத்தொன்பது வயது. சாச்சியின் உம்மா மறுமணம் செய்ய
மறுத்திருக்கிறார். அதன் பிறகு அவரின் உம்மா வழி மூத்தப்பாதான்
அவர்களுக்கு எல்லாமுமாக இருந்திருக்கிறார்.
மௌத்தாகிப் போன சாச்சியின் வாப்பாவுக்கு மாத
சம்பளத்தைத் தவிர வேறெந்த சொத்தும் வருமானமுமில்லை. தனது சிறு கடை வணிகம் மூலம் கிடைக்கும்
வருவாயில் மகளின் குடும்பத்தையும் சேர்த்து சுமந்து வந்திருக்கிறார் மூத்தப்பா.
வணிகம் தொடர்பாக காத்தான்குடிக்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தவர்
இரயிலில் தனது பணப்பையை தொலைத்திருக்கிறார். பெரிய தொகை. அப்பதட்டத்தில் ஊரைக் கவனிக்காமல்
வாழைச்சேனையில் இறங்கி ஓட்டமாவடி பள்ளிவாயிலுக்கு நடந்தே வந்து சேர்ந்திருக்கிறார்
ஹசனின் வாப்பா முபாரக் நானா.
சுபஹ் தொழுகைக்குப் பிறகு மந்தைக்குள் புதிய ஆட்டினைக்
கண்ட சாச்சியின் மூத்தப்பா அதன் வாட்டத்தையும் சேர்த்தே அறிந்தார்.
ஹசன் கதைக்குள்ளிருந்து விழித்தான்.அதே பள்ளிதான்.கிளர்ச்சியாக
இருந்தது. போன காலமும் எதிர்காலமும் ஒரே புள்ளியில் உறைந்தன.பட்டகத்தில் புகுந்து நிறத்திலும் திசையிலும் வெவ்வேறாக விலகும் ஒரே ஒளிப்பட்டை.படுவானிற்கப்பால்
புகுந்து கொள்ளும் சிவப்பின் முடிவிலிருந்துதான் எழுவான் தொடங்குகிறது.அழல் தொடங்குமிடம்.எது
முடிவு? எது தொடக்கம்?
ஹஸனின் கண்களக் கவனித்த சாச்சி கதையை நிறுத்தினாள். தங்கையின்
மடியில் மருமகன் உறங்கிப் போயிருந்தான்.
“பள்ளிவாசல்லேருந்து வந்தாச்சா?”
என்றவாறே சாச்சி அவன் முகத்துக்கு நேரே கையசைத்தாள்.”பள்ளிவாசலுங்கறது
வானத்துக்கும் மண்ணுக்குமான வாசல போல எல்லா
கரய்க்குமான பாலமுந்தான்”
எளியவர் துயரர்களின் மொழியை அதன் மௌனத்திலிருந்தே ஊகித்துக்
கொள்ளும் சாச்சியின் மூத்தப்பா தன்னாலியன்ற வரைக்கும் அவர்களின் நிழலாக இருந்தார்.வீட்டிற்கு
அழைத்து வந்து அவருக்கு தேநீருடன் கிழங்கு பாபத் பொரியல் கொடுத்து ஆறுதல்படுத்தியிருக்கிறார்.
“அப்ப கிழங்கும் பாபத்துதான் பொறி” என்றான் ஹசன். சாச்சிக்கும்
தங்கைக்கும் ஒரே நேரத்தில் உடலில் சிறு அசைவு.
“அதுவுமிருக்கலாம்.ஆனா ஆது அப்படி சாப்பாட்டோடு
சுருக்குற விஷயமல்ல”.
ஹசன் கூசினான். இரயில் புழு போல தன் உடல் சுருங்குவதை அறிந்தவனாக
வானத்தைப் பார்த்தான். வாப்பாவின் இரவுகளைத் தேடி வந்திருப்பதனால் உண்டான நிந்தனைகள்தான்
இம்மாதிரி குறை சொற்களாக தன் வாயில் புகுத்தப்படுகிறதோ? என தோன்றிய எண்ணம் அவனைப் பதட்டமடைய
வைத்தது.
‘’ஆலமுல் அர்வாஹுல சந்திக்கிற ருஹுகள் துன்யாவுலயும் சந்திக்காம போறல்ல. மத்தபடி மனுன்ட மூள கண்டு புடிக்கிற
சின்ன சின்ன காரணங்கள்தான். நம்ம மூளய்க்கு மூணு ராத்தல் கனமிருக்குமா?”
“அந்த மூணு ராத்தல் கண்டு புடிக்கிறதுகளுக்கு
பின்னால இழுபடுற துதான் நம்ம நெனப்பும் பேச்சும்….” மெழுகுத்திரியின்
ஒளியில் சாச்சியின் முகம் மேலும் கீழுமாக நீண்டு பழைய நிலைக்கு மீண்டது.
சொற்கள் தன்னை கைவிட்டு விட்டதையறிந்து ஹசன் ஓசை வரும்படி
அழுதான்.தங்கையும் திரும்பி நின்று அழுதாள்.சாச்சி இருவரையும் ஆழ்ந்த மௌனத்துடன் பார்த்துக்
கொண்டிருந்தாள்.
“ஆகிறத்திலும் இந்த சொந்தம்
நில நிக்கணும் யா அல்லாஹ்” என்றவனின் இரு கரங்களையும் சாச்சியும் தங்கையும் பற்றிக்
கொண்டனர்.
மெழுகுத்திரியின் செவ்வொளி அவர்களின் மீது பட்டு விலகும்
போதெல்லாம் அவர்கள் மீது விழுந்து கவிழ்ந்திருந்த வான விதானத்தின் பெரும் போர்வை தென்படலாயிற்று.
ஒளியின் ஊறுகளும் பொத்தல்களும் இல்லாத பெருந்துணி.
“பூச்சி பறக்குறமா” தூக்கத்தில் மருமகன் முனகியவாறு தன்
எச்சில் தடம் படிந்த வாயைத் தேய்த்தான்.அவனைத் தோளில் தூக்கிக் கொண்டு கீழே வீட்டிற்குள்
படுக்க வைத்து விட்டு வந்தாள் தங்கை ஹசீனா.
காற்றின் வேகத்தில் ஒரு மெழுகுத்திரி நூர்ந்து போக இரண்டாவது
போராடிக் கொண்டிருந்தது.மூன்றாவது கிட்டத்தட்ட அணைந்து மீண்டது.அவையிரண்டையும் ஹசீனா
ஊதியணைத்தவள் “நச்சத்திரங்கள இப்பதான் சரியா பாக்க கிடங்க்கும்”
தன் வீட்டுக்கு மேலே உள்ள வானம் அவளுக்கு இன்னும் பொருளுடையதாகத்
தோன்றியது. வானத்தை விட விடுதலையானதும் உண்மையானதும் ஒன்றுமில்லை. இரு கைகளையும் குவித்து
விண்மீன்களின் கிரணங்களை அள்ளியெடுத்து அதை
மூவருக்கும் முன்னிலும் கொட்டினாள்.அதை பலமுறை செய்தாள். உம்மாவும் காக்காவும் அதைப்பார்த்துப்
புன்னகைத்தனர்.
காற்றுக்குள் மெலிதாக குளிர் ஏறத் தொடங்கியிருந்தது”காத்துல உப்பு வீச்சம் இரிக்கிர இடத்துல எடத்துல பெரிசா
கூதல் வருகுதில்ல” தன் இரு கைகளையும் தேய்த்து
சூடாக்கி முகத்தில் தடவியவாறு தொடர்ந்தாள் சாச்சி.
வந்த வேலைகளை கிழக்கில் முடித்து விட்டு கேகாலை திரும்பும்
வரைக்குமான கைச்செலவுகளுக்கு தேவைப்படும் தொகையை வாப்பாவிடம் மூத்தப்பா கையளித்திருக்கிறார்.
அதை திரும்பக் கொடுப்பதற்காக ஓட்டமாவடி வந்தவர் வாய்ப்புக் கிடைக்கும் நோன்மதி தின விடுமுறைகளில்
வந்து போகத் தொடங்கினார். அந்த வருகை மாதத்திலொன்றாகி எல்லா வார விடுமுறைகளிலும் கேகாலையிலிருந்து ஓட்டமாவடி வந்து தங்கி போவதில் முடிந்தது.
“தஹஜ்ஜூத்துல கேக்குற துவா இருக்குதே அது எந்த பஹருக்கும் சமாவுக்கும் அங்கால இருந்தாலும்
நம்மளுக்கு வேண்டியத இழுத்துக் கொண்டு வந்துரும்” என்ற சாச்சியின் மூத்தப்பா”முபாரக்குட
காது நுனில ஈந்த சுடர கண்டப்போவே அது இங்க ஓட்டமாவடியிலதான் அணயனும்டு நான் முடிவெடுத்துட்டன்.”
அவர் தன் குடையை வலக்கையில் சுழற்றிக் கொண்டு சொல்வதை போலவே
இன்றைக்கும் மூத்தப்பாவின் சொல் பளிச்சிடுவதாக சாச்சி நினைவு கூர்ந்தாள்.
பாபத் கிழங்கு பொரியலை அதன் குண நிற மணங்களுடன் நினைத்தான்
ஹசன்.அதன் பெயரை ஒலித்து விடக்கூடாது என்ற ஓர்மையும் கூடவே வந்தது.“தங்கச்சி! அந்த
இடியாப்பத்தயும் சொதியயும் எடுங்க”. கையை நீட்டி அவன் கேட்ட விதம் ஹசீனாவிற்கு புதினமாகப்பட்டது.
வாய்களின் சவைப்பொலியுடன் தொலைவில் கேட்ட கடலின் சன்னமான
அலை முழக்கத்தின் தொலைவிற்கும் ஆழத்துக்குமான அழைப்பு. கதையைத் தொடர்ந்து சொல்லி மௌனத்தின்
இறுக்கத்தை கலைத்தாள் சாச்சி.
நாலடி சீரும் தூக்கிப் பார்த்த பின்னரான ஒரு வெள்ளிக்கிழமை
அசர் வேளையில் மூத்தப்பா நிகாஹை நடத்தி வைத்தார். ஆதி வாப்பா ஆதமின் நாள் நேரமது.
ஒன்று இரண்டு மூன்று….. சாச்சி கை மடக்கி எண்ணினாள். மூன்று குழந்தைகள் ஆயிற்று. எங்களுக்கும்
அண்டை வீட்டாருக்கும் ஜமாஅத்தினருக்கும் நல்லவராக பெயரெடுத்தார் வாப்பா.மேற்குக்கரையிலிருந்து
வந்த மழை எல்லோருக்குமாக பெய்தது.
“எங்க கிட்ட ஒங்களப் பத்தி மறச்ச மாதிரி ஒங்க கிட்ட வாப்பா எங்களப் பத்தி எதுவும் சொல்லியிக்கிறாரா
சாச்சி?”
“வாப்பா சொல்றதுக்கு முன்னாடியே மூத்தாப்பாக்கும்
அது வெளங்கும்.”
“எப்பிடி?”
“வாப்பாவோட தோள் அசய்வ வச்சு கண்டு பிடிச்சதா
சென்னாரு.அத வாப்பாட்ட கேட்டும் வெளங்கியிருக்கிறாரு”
“அத தெளிவா சொல்லி என்னய நல்லா யோசிக்கச் சொன்ன
பொறவுதான் சம்மதம் கேட்டாப்புல மூத்தாப்பா”
“எத்தன மயிலுக தோக விரிச்சு ஆடுனாலும் அதெல்லாம்
ஒரே ஒரு மழய்க்குதானே ஆடுற. ஓம்னு சொல்லிட்டன்.”
“சாச்சி! ஒங்கட நிகாஹு போட்டோ இக்கிதா?”
“இருந்தா இதுவரய்க்கும் காட்டாம இருந்திருப்பேனா”
“நிகாஹு முடியிற வரய்க்கும் மூத்தாப்பா பகட்டா
இருந்த. முஹ்யித்தீன் ஆண்டவருக்கு சேவலும் கோழியும் நேந்துக்கிட்டிருந்த மனுசனுக்கு
பொட்டோ ஞாபகம் வராதுதானே.”
“நா
ஒங்களுக்கு காட்டுன பொட்டோவுலாம் ஒங்க வாப்பாட ஏற்பாட்டுல எடுத்ததுதான்.எல்ல ஆத்துக்குப்
போனப்ப ஓரு பாறய்ல வட்டம் சதுரமா செவப்பு நிறத்துல கீறியிருந்துது.”
“அதப் பாத்துப் போட்டு வாப்பா சொன்னதுதான்
மறக்க ஏலா”
“இங்க பெருசும் சிறுசுமா எத்தனயோ கல் பாற இரிக்குது.
ஆனா தன்னய பாக்க சொல்றது இந்த பாறய்க்கு மேல இருக்கிற வரய்ப்புதான்.அதே மாதிரிதான்
நாம எடுக்கற பொட்டோவும். நம்ம ஆயுசுங்கறது நொடி மணி நாளு ராவு பகலு வாரம் வருசங்கள்னுலா
நெறஞ்சது. அதுல நாம எடுக்குற பொட்டோங்கறது இந்தப் பாறய்ல கீறுன வட்டம் போல. வாழ்க்கங்கற
குமியல்லேந்து நகத்தால நாம நுள்ளி எடுக்கற மண்ணளவு.”
வாப்பாவின் இந்த முகம் ஹசனுக்கு புதியது.இலக்கிய ஆர்வமும்
புத்தக வாசிப்புமில்லாத அவருக்கு ஏதேனும் வேர் வாசிப்பு இருந்திருக்கலாம். வாப்பா என்ற நிலவின்
ஒரு பக்கக் காட்சியைத்தான் தன்னால் பார்க்க முடிந்திருக்கிறது.அவசர நினைப்புகளுக்குள்
எவ்வளவு அபத்தங்கள்….
“இந்த சம்பத்துக்குப் பொறவுதான் மட்டக்களப்பு
சிவலிங்கம் அண்ணன் நம்ம குடும்ப பொட்டோக்காரராவுனாரு.”
புகைப்படங்கள் அனைத்திலும் ஒரு படியெடுத்துக் கொண்டு போக
வேண்டும் என ஹசன் விரும்பினான்.உணவிற்குப் பிறகு சாச்சி கொஞ்ச நேரந்தான் பேசினாள்.கைப்பிடிச்
சுவற்றின் முதுகு பனியால் நன்கு நனைந்திருந்தது.
கேகாலை கடையை மூடிய பிறகு வாப்பாவின் உடலிலும் மனத்திலும்
மெல்ல மெல்ல ஏறிக் கொண்ட தளர்வு ஒரு கட்டத்தில் இலங்கைக்கு விடை சொல்ல வைத்தது.அதற்குள்
சாச்சியின் மக்கள் நிமிரத் தொடங்கி விட்டதால் வாப்பா இல்லாத அந்த இடைவெளி சாச்சியின்
குடும்பத்துக்கு பாரமாக மாறவில்லை.
சாச்சியின் வீட்டில் ஹஸன் இன்னும் இரண்டு நாட்கள் தங்கினான்.
கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கிடைத்த மீதிக் கதைகளால் தன்னை நிரப்பிக் கொண்டான்.
புறப்படும் நாள். விடை பெறும் போது சாச்சியின் மூக்கு நுனி
சிவந்திருந்தது.தன் முகத்தை யாரும் கவனித்து விடக்கூடாதென்பதற்காக ஏதாவதொரு வேலையை
சாக்கிட்டு தங்கை ஹசீனா அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தாள்.
பயணச்செலவுக்கு போக மீதமிருந்த இலங்கை பணத்தையும் டாலர்களையும்
கேம் விளையாடிக் கொண்டிருந்த மருமகனின் கையில் திணித்தவன் நிற்க இயலாமல் அருகிலிருந்த
மெத்திருக்கையில் போய் அமர்ந்தான். காற்றாடியை முழு வேகத்தில் சுழல விட்டாள் ஹசீனா.
ஹசனின் முகத்தை விரைந்து ஏறிட்ட சாச்சி “ ரண்டு பக்கத்தாலயும்
இருக்கிற கடல்ல அல எப்பவும் ஓயறல்ல.”அவனின் தலையை இரு கரங்களாலும் பற்றியிழுத்து உச்சி
முகர்ந்தாள். மருமகனின் குட்டி டிரவுசரை தருமாறு ஹசீனாவிடம் கேட்டு வாங்கிக் கொண்டான்.
“நேரே ஊருக்குத்தானே போறீங்க. போன கையோடு இத
தின்டுறுங்க.தேங்காப்பால் சேத்திருக்கிறதுனால வெரசா கெட்டுப் போயிரும்”.
தொதல் சிப்பத்தை வாங்கி தன் பொதியில் வைத்தான்.
“கொஞ்சம் நில்லுங்க
மகன்.” உள்ளறைக்கு சென்று தோல் வாரிட்ட கைக்கடிகை ஒன்றுடன் திரும்பி வந்தவள் அதை அவனிடம்
நீட்டினாள்.செந்நண்டு போலிருந்தது.
“வாப்பாவ நான் பாத்தா நாள்லேந்து கடசி வரைக்கும்
அவங்க கட்டியிருந்தது. இத இங்கவுள்ள கடய்ல ரிப்பேயருக்கு கொடுத்துட்டு ஊருக்கு போனவுகதான்.”
வாங்கினான். சுருள் விசைக் கடிகை. இங்கிலாந்து உருவாக்கம்.ஆறு
மணி இருபத்தோராவது நிமிடத்தில் நின்றிருக்கிறது. முட்களின் சந்தியில் குட்டியாக பச்சைக்
களிம்புத் திட்டு. விசையை முடுக்கினான். கால உறைவிலிருந்து ’ட்ரிக்’ என அது தன்னை விடுவித்துக்
கொண்டது.
“காக்கா!தாராட கழுத்த புடிக்கிறதப்
போல புடிக்க வேணாம். பயப்புடாதிங்க”
தங்கச்சி ஹசீனா அப்படி சொல்லும்போது அதை தன் விரலின் அழகிய அசைவுகளால் செய்துக் காட்டினாள்.
கைக்கடிகையை ஹசன் சாச்சியிடம் திரும்ப நீட்டினான்.
மறுக்கும் விதத்தில் தலையசைத்த சாச்சி ” நான் இப்ப இத
வாப்பா கைய்லதான் கொடுத்திருக்கிறன்.’’
5
வாழைச்சேனையில் இரயில் ஏறுவதற்கு முன் தான் நினைத்து வைத்திருந்தபடி
பள்ளிவாயில் முஅத்தினைப் போய் சந்தித்தான் வீட்டைக் கண்டுபிடித்த விவரங்களை பகிர்ந்ததும் தன்
வீடும் உறவும் கண்டுபிடிக்கப்பட்டது போல அவர் மகிழ்ந்தார்.
தான் சில மாதங்களிலேயே திரும்ப வருவதாகவும் இனி தொடர்ந்து
வரத் தேவையிருப்பதால் கிண்ணியாவில் மட்டும் வாடகைக்கு வீடொன்றைப் பார்த்துத் தந்தால்
போதும் என்றான்.
கதையை முடிக்கும்போது வண்டியின் தளத்தில் கையை ஊன்றிய கமருத்தீனின் செய்கை யாருக்கும் பிடிபடவில்லை.
ஏதேனும் கண்டி நடனம் ஆடப்போகிறானா?அவன் முகத்தைப் பார்த்தனர். தலையை சிலிர்த்துக் கொண்டு
தொண்டையை நீட்டி வானம் பார்த்து “கொக்கரக்கோ” என கூவினான்.
அடுத்த கூவல் தொடங்கும் முன்னரே வண்டிக்குள்ளிருந்து. “ஓட்டமாவடிகோழி
கிட்ட பட்டினத்து சேவல் இங்கிலீஷ்ல கூவுனதுனால யாருக்கும் புரியாம போயிடுமா?”இருவரின்
குரல்கள் ஒலித்தன.இன்னும் இரண்டு கூவல்களையும் கமருத்தீனின் சேவல் கூடுதல் ஓசையுடன்
கூவி முடித்தது.
இராமநாதபுரத்திற்கு இன்னும் அரை மணி நேரமிருக்க தொடர்ச்சியாக
சாலையோர விளக்குகள் அணைந்திருந்தன. முகப்பு விளக்குகளை உயர் கற்றைக்கு மாற்றியதோடு
ஓட்டுநர் பாடலை ஒலிக்க விட்டார்.
“….. பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும் - கொடி
படையுடனே பவனி வரும் காவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்….. ”.
“பொல்லாத சிறுக்கி. அவ தொண்டய்க்கு தங்கப்பூண்தான் போடணும், ‘ம்’ ம எப்படி நெளிச்சு இறக்குறா பாரேன்?” யாரிடமாவது
பகிர்ந்துக் கொள்ள வேண்டும் போல அலெக்சுக்குத் தோன்றியது.வண்டிக்குள்ளிருந்த மௌனத்தைப்
பார்த்து அமைதியாக இருந்து விட்டான்.
கடல் காற்று விலகி நிலக்காற்றின் மெலிந்த வெப்பம் வண்டிக்குள்
வரத் தொடங்க சாலையின் நடுவில் செவ்வொளிர் கண்களுடன் முயலொன்று திகைத்து நின்றபின் புதருக்குள்
தாவியது.
-------------------------------------------------
சொல்
விளக்கம்
வஃபாத்,மவ்த் -- இறப்பு
கத்தம் –நீத்தாருக்காக குர்ஆன் ஓதல்
தஸ்பீஹ் மணி –
தியான மணி
மனாம் - கனவு
மய்யித் - சடலம்
ஆலிம் - நன்னெறி
அறிஞர்
வக்து -- நேரம்
கோசா – பர்தா
ஹயாத் – உயிரோடு இருத்தல்
களா – நிலுவை
புட்டுவம் - நாற்காலி
ஒழூ – தொழுகைக்கான உடல் தூய்மை
சுஜூத் – சிரம் பணிதல், தொழுகையின் ஒரு நிலை
இமாம் – கூட்டுத்தொழுகைக்கு தலைமை தாங்குபவர்
அத்தஹிய்யாத் – தொழுகையில் அமர்ந்து ஓதும் இறுதி நிலை
சலவாத் – நபி புகழ்
முஅத்தின் – தொழுகைக்கு அழைப்பு கொடுப்பவர்
பிச்சலாட்டம் –மன உளைச்சல், தவிப்பு
குர்ஆன் காயிதா கிதாபு – குர்ஆன் ஒதலுக்கான அடிப்படை எழுத்துப்
பயிற்சி ஏடு
சள்ளைமை – நோய்
தோசி – உப்பு,
மிளகாய்த்தூளிட்ட புளிப்பும் இனிப்புமான பிஞ்சு பழக் கலவை
இத்தா _ கணவனை இழந்த பெண்ணின் காத்திருப்புக் காலம்
கூனி மாசி – உலர்த்தப்பட்ட கூனி இறாலில் தேங்காய்ப்பூ,
வற்றல்,உப்பு,வெங்காயம் சேர்த்து செய்யப்படும் தொடு கறி
“ஒயா கவுஸ் நானாகே புதானே?” -- “ நீங்கள் கவுஸ் நானாவின் மகன்தானே”? சிங்களச்சொல்.
சதுரம் — உடல்
புட்டுவம் -- நாற்காலி
“இந்த கன்ன மொதலாளி”— இங்கே அமருங்கள் முதலாளி. சிங்களச்சொல்.
நானா – அண்ணன்
கைமாற்று -- கடன்
பால் மீன் ஆணம் – தேங்காய்ப்பாலை செறிவாக இட்டு ஆக்கப்படும்
மீன் கறி
சாரம்- லுங்கி, கைலிக்கான Sarong என்ற மலே மொழிச்சொல்லின் திரிபு.
வாப்பா – தந்தை
உம்மா -- தாய்
கிருஸ் கண் – மாறுகண், criss cross என்பதன் மரூ
கோக்கி – சமையலர், Cook என்ற ஆங்கில சொல்லின் மரூ
துரியான் – முள் நாறி பழம், தென் கிழக்காசியாவை பிறப்பிடமாகக்
கொண்ட பழம்
கைமடக்கு -- அன்பளிப்பு
மாலு – மீன். சிங்களச்சொல்
ஹால் – நிலை. இங்கு ஆயுள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது
பஸாது – குழப்பம்,
உள்ளூர் பொருளில் அவதூறு.
துன்யா – உலகம்
ஆகிறத் -- மறுமை
தஹஜ்ஜுத் - வைகறைக்கு
முன்னர் வரையான பின்னிரவு நேரத் தொழுகை
பஹர் -- கடல்
சமா - வானம்
நிகாஹ் - திருமணம்
கிழங்கு பாபத் பொரியல் –அவித்து பொரித்து தாளித்து உண்ணப்படும் மரவள்ளிக்கிழங்கு/மாட்டுக்குடலினால்
ஆக்கப்படும் சிற்றுண்டி
No comments:
Post a Comment