Thursday 15 June 2023

உம்முல் ஹைரிய்யாவின் பள்ளிக்கூட தலை நாள்


என் பெயர்த்தி உம்முல் ஹைரிய்யா கல்விக்கூடத்தில் தன் முதல் எட்டை முதல் கணக்கை முதல் நாளை தொடங்குகிறாள்.

ஐம்பது வருடங்களுக்கு பின்னால் உருள்கிறது காலம்.

எங்களூர் சென்றல் பள்ளிக்கூடத்திற்கு வெளிச்சமும் வெப்பமும் மிகுந்த காலைப்பொழுதில் கதற கதற நான் இழுத்து செல்லப்பட்டேன்.

பிறகு புத்தி அறிந்த நாட்களிலிருந்து நான் பள்ளிக்கூட வாழ்க்கையை நேசித்தேன் என்பது தனிச்செய்தி.

என்றாலும் கதற கதற இழுத்து செல்லப்பட்டபோது நான் சந்தித்த  அந்த பொழுது அந்த மனிதர்கள்,  அந்த வகுப்பறை அந்த ஆசிரியர்கள்  குறிப்பாக யாரோ அன்று தேய்த்திருந்த  அத்தர் வாசனை இவை அனைத்தும் என்னுள் இன்று வரை எதிர்மறை பிம்பங்களாகவே உறைந்து விட்டன.

இன்றும் அந்த அத்தரின் வாசனையை நான் எங்காவது நுகர நேர்ந்தால் என் மீது நிகழ்த்தப்பட்ட அந்த வன்முறை முழு தகிப்புடன் எனக்குள் மீண்டும் நிகழவே செய்கிறது.

என் மீது நிகழ்த்தப்பட்ட அந்த வன்செயலை கல்வியின் பெயரால் என் மூன்று பிள்ளைகளின் மீதும் நான் செலுத்தவில்லை என்பதுதான் எனக்கு நானே அளித்துக் கொள்ளும் மன்னிப்பாக பேறாக நான் நினைக்கிறேன்.

வாழ்க்கை என்பதே அறுஞ்சுவைகளால் ஆனதுதான். எனினும் கல்வியின் பெயராலும் வேறெதினினும் பெயராலும் கொடுங்கனவுகள் உனக்கு நிகழாதிருக்கட்டும் என் கண்மணியே!!!



No comments:

Post a Comment