Sunday 22 December 2019

சிலுவையும் பேரீத்தம்பழமும்






விரிந்து பரந்த அந்த மாளிகையில் ஓர் அறை.

அந்த அறையின் நடுவில் ஒரு மேசை.

மேசையின் எதிரும் புதிருமாக போடப்பட்டிருந்த இருக்கைகளில் அன்றைய ஸவூதி அரசர் ஃபைஸலும் , அன்றைய அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸின்ஜரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து அமர்ந்திருக்கின்றனர்.
அந்த மேசையின் மீது மூன்று கிண்ணங்கள்.


முதல் கிண்ணத்தில் கனிந்த பேரீத்தம்பழங்கள்.

இரண்டாம் பக்கத்தில் ஒட்டகப்பால்.

மூன்றாம் கிண்ணத்தில் ஒட்டக இறைச்சி.

மெல்ல புன்முறுவலித்தவாறே இந்த மூன்று கிண்ணங்களையும் சுட்டிக் காட்டி மன்னர் ஃபைஸல் ஹென்றி கிஸ்ஸின்ஜரை பார்த்து சொல்கின்றார்.

“இன்று இருக்கும் எண்ணை வளமும் அதை ஒட்டிய பணப்புழக்கமும்  இல்லாமல் போனாலும் எங்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. ஏனென்றால் நாங்களும் எங்கள் முன்னோர்களும் பாலைவனத்திலிருந்து வந்தவர்கள். பல நூறு ஆண்டுகள் இவற்றை உண்டுதான் எங்கள் வாழ்க்கை கழிந்திருக்கின்றது.”
முஸ்லிம்களுக்கு எதிரான போரில் அமெரிக்க அரசு இஸ்ராயீலுக்கு செய்த 

போர் உதவிகளை கண்டிக்கும் முகமாக 1973 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணை வினியோகத்தை நிறுத்தினார் மன்னர் ஃபைஸல்.

அந்த எண்ணெய் தடையை நீக்க சொல்லி அவரை ஹென்றி கிஸ்ஸின்ஜர் மிரட்டியதும் அதற்கு மன்னர் ஃபைஸல் அளித்த விடையும் வரலாற்றின் நினைவுகளில் அழுத்தமாக அமர்ந்திருக்கின்றது.

நிரம்பிய மூன்று கிண்ணங்களின் நிகழ்வானது ஒரு கற்பனையாக கூட இருக்க வாய்ப்பிருக்கின்றது.

ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் மன்னர் ஃபைஸலை நோக்கி விடுத்த மிரட்டலுக்கு அவர் கொடுத்த மறுமொழியின் ஆழத்தை புரிந்து கொள்ள மூன்று கிண்ண நிகழ்வுகள் நமக்கு உதவுகின்றன.

பின்னர் கவனமாக திட்டமிடப்பட்ட ஒரு சதியின் தொடர்ச்சியாக அரச குடும்பத்தைச் சார்ந்த தனது உறவினர் ஒருவராலேயே மன்னர் ஃபைஸல் சுட்டுக் கொல்லப்படுகின்றார்.

விவாதங்களுக்கும் விவகாரங்களுக்கும் உட்பட்ட இப்னு ஸவூத் குடும்பத்தின் மன்னராட்சி.

அந்த மன்னர் தலைமுறையின் தொடர்ச்சியில் வந்த ஃபைஸல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிக்கு காட்டிய மூன்று கிண்ணங்கள்.

அவற்றில் நிரம்பி இருந்த பாலைவன வாழ்க்கை முறை.

அங்கு அரூபமாக இருந்த நான்காவது கிண்ணத்தில் மன்னரின் மண்டியிடாத மனம் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது.

அதற்கான காரண காரிய தொடர் விளைவாக மன்னரின் கொலை நடந்தேறுகின்றது.

படோடபமிக்க மன்னராட்சியும்  X   எளிமையான பாலைவன வாழ்க்கை முறையும்  -- ஒன்றுக்கொன்று முரண்பட்ட வடிவங்கள்  .

இந்த முரண்பாடான இரு துருவங்களுக்கிடையே பயணித்தார் மன்னர் ஃபைஸல்.

ஆதிக்க வெறியின் முன் மண்டியிடாத மனதைப்பெற்றிருந்த அவர்  அந்த பயணத்தின் விலையாக இறுதியில் தன் உயிரைக் கொடுத்தார். இந்த இரு துருவ பயணத்தில் அவரை வழி நடத்திய பாலை வன வாழ்க்கையில் என்ன இருக்கின்றது ?

அண்ட சராசரங்களை துருவி பல அறிவியல் உண்மைகளை காணும் ஒரு அய்ரோப்பியனின் பொது புத்தியானது ஏன்  இஸ்லாத்தின் மீதும் , இஸ்லாம் தவழ்ந்து வளர்ந்த பாலை வன  நாகரீக தொட்டிலின் மீதும் மிகுந்த காழ்ப்புணர்வுடன் உள்ளது ?

இது போன்ற கேள்விகள் பல நாட்கள் விடை தெரியாமல் மனதிற்குள் திரிந்திருக்கின்றது.

எளிமையும் நிதானமும் நிறைந்த பாலைவன தொல்குடி நாகரீகத்தை வெறுமையும்  வெப்பமும் மந்த கதியும் மண்டிய  பிற்போக்கான தோல்வியடைந்த பண்பாடாக உலக மக்களின் முன் சித்தரித்துக் காட்டப்படுகின்றது.

 உலகையே தன் கால்களுக்குள் கீழ் மிதித்து  நிற்கும் ஆட்சி அதிகாரம் , விதம் விதமான நுகர்வு பொருட்கள் , தொழில் நுட்பம் , ஆடை , உணவு . மொழி வசிப்பிடங்கள் , கடை வீதிகள் என எங்கும் ஆதிக்கமும் பள பளப்பும் புதுமையும் இளமையும் வளர்ச்சியும், நிறைந்து ததும்பும் புத்தாக்கமிக்கதாக  அய்ரோப்பிய வாழ்வியல் முறைமை தூக்கிப்பிடிக்கப்படுகின்றது.

திட்டமிட்ட இந்த தொடர் சித்தரிப்பின் விளைவாக இஸ்லாம் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக இல்லை என்ற மனப்பதிவை உலகின் பெரும்பாலான மக்களிடையே ஏற்படுத்துவதில் குறிப்பான நோக்கமும் இலக்கும் கொண்ட சில சக்திகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

இந்த அய்ரோப்பிய சக்திகள் உருவாக்கிய பொய் பிம்பத்தை உடைத்தெறியும் வேலையை இறைவன் ஒரு அய்ரோப்பியரை கொண்டே நடத்திக்காட்டுகின்றான்.

லியோபால்டு வெய்ஸ்  என்ற முஹம்மத் அஸத் என்பவர்தான் அந்த ஆளுமை. அவர் 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய THE ROAD TO MAKKAH  என்ற நூலின் தமிழாக்கமான எனது பயணம் என்ற நூலை வாசித்த போது மனம் நிறைந்தது.

இந்த நூலை எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமியின் மொழியாக்கத்தில் சென்னை ஸாஜிதா புக் சென்டர் வெளியிட்டிருக்கின்றது.

பயணம் , வரலாறு , தத்துவம் , ஒப்பாய்வு என ஒவ்வொன்றுமே தனித்தனியான  மொழி ஆளுகைகளை வேண்டி நிற்கும் துறைகளாகும்.

 நூலாசிரியர் அஸதின் இந்த நான்கு மொழி நடையையும் சீரான விகிதத்தில் சம வேகத்தில் சுவை குறையாமால் மொழியாக்கம் பண்ணுவது என்பது மிகவும் அறைகூவலான பணி. அதை கலாமி தனது தமிழாக்கத்தில் சாதித்திருப்பது பாராட்டிற்குரியது.

 நூலாசிரியரான லியோ பால்டு பிறப்பால் அய்ரோப்பிய யூதர். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை நன்கு கற்றவர். ஹீப்ரூ மொழியிலும் தேர்ச்சி உண்டு.
 நல்ல கல்வி பின் புலம் , பரந்த நூல் வாசிப்பு , மதங்கள் , தத்துவங்கள் பற்றிய ஆழமான ஆய்வு, விரிவான பயண பட்டறிவு , எழுத்தாற்றல் , கலை இலக்கிய ஆர்வம் என பன்முகங்கள் கொண்ட பட்டை தீட்டப்பட்டதாக  அவரது ஆளுமை விரிகின்றது.

இஸ்லாத்தை நோக்கி லியோ பால்ட் அஸத் எடுத்து வைத்த பயணத்தின் முதல் எட்டானது வழமையாக நாம் நினைப்பது போன்று பழைய ஏற்பாட்டின் வாயிலாகவோ அல்லது தலை முறை  தலை முறை வழியாக அவரிடம் வந்து சேர்ந்த யூத நம்பிக்கைகளின் வாயிலாகவோ தூண்டப்படவில்லை.\

ஆனால் அவரது அய்ரோப்பிய யூத பின்புலமானது இயல்பிலேயே ஆய்விற்கான உந்துதலாலும் புதியனவற்றை கண்டறிதல் என்ற வேட்கையாலும் நிரம்பிய ஒன்றாக இருந்தது.

 அந்த இயல்பானது அவருக்குள் உலக வாழ்க்கை , அதன் பொருள் , அதன் இறுதி அடைவிடம் , இடை வழி இலக்குகள் தொடர்பான எண்ணற்ற கூரிய வினாக்களை அலையலையாக  கிளப்பி விட்டிருந்தது.

தன் பிறப்புடன் ஒட்டியுள்ள அந்த இரண்டு அடையாளங்களுக்கும் அன்றாட மனித வாழ்வை எதிர் கொள்ள தேவையான வலிமையோ உள்ளார்ந்த திறனோ  இல்லை என்பதை அவர் தனது வாழ்வின்  தொடக்கத்திலேயே கண்டு கொண்டார்.

யூத , கிறிஸ்தவ போதனைகள் மனிதனின் ஆன்மீக , இம்மை வாழ்வு தொடர்பை  சம நிலையுடன் இயக்குபவையாக முன்பு இருந்தது. தனது தன்னலத்திற்காக அய்ரோப்பாவானது  அந்த மதங்களின் உயிர்க் கருவை அறுத்தெறிந்து விட்டதை நேரடி சாட்சியாக இருந்து அவர் உணர்ந்தார்.

இதன் விளைவாக அவை வெறும் இனப் பெருமிதமாகவும் வெற்று சடங்குகளின் தொகுப்பாகவும் மாறி  தங்களது உயிரோட்டத்தை இழந்து விட்டிருந்தன. மனித குல விடுதலைக்காக வந்தவை நாளடைவில் அனைத்து வகையான பிற்போக்கு தனங்களின் உறைவிடமாக உரு மாறிவிட்டிருந்தன.

இந்த போக்கின் எதிர் வினையாக கிளர்ந்த நாத்திகம் , பொதுவுடைமை , அறிவியல், வளர்ச்சி சார்பு கோட்பாடுகள் அனைத்துமே மனிதனின் வெளிப்புற தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டன. மனித இனத்தின் அகம் சார்ந்த ஆன்மீக மனத் தேவைகளை அவை ஒரு போதும் பொருட்படுத்தவேயில்லை.

இதன் விளைவாக அய்ரோப்பிய உலகு மனிதனை உண்டு உறங்கி நுகர்ந்து களிக்கும் ஒரு உயிரியாகவும் இச்சைகளின் தொகுப்பாகவும் மட்டுமே குறுக்கி பார்த்தது.

மனித மனதின் உன்னதம் , அதன் அளப்பரிய ஆற்றல் , அது கையாளப்பட வேண்டிய விதம் குறித்து எவ்விதமான பழக்கமோ பயிற்சியோ அய்ரோப்பாவிற்கு வாய்க்காமல் போனது ஒரு புறம்.

மறுபுறமோ ஆப்ரஹாமிய மதங்களின் வாயிலாக முன்னர் தனக்கு கிடைத்த விழுமியங்களையும் ஏற்கனவே கைகழுவி விட்டிருந்தது அய்ரோப்பா.
இந்த ஆன்மீக வறுமையின் காரணமாகத்தான் மீட்பு , விடுதலை , அர்ப்பணம் போன்ற உயர்ந்த குணாம்சங்களின் குறியீடாக கிறிஸ்தவம் பயன்படுத்தும் சிலுவையையே போருக்கான  முத்திரையாக அவர்கள் தவறாக பயன்படுத்தியதை காண முடிகின்றது.

இன்னும் நீடித்து வரும் இந்த சிலுவை யுத்த மனப் போக்கின் ஊடாகத்தான் அய்ரோப்பா இஸ்லாத்தையும் அதன் எளிய வாழ்க்கை முறையையும் முஸ்லிம்களையும் தொடர்ந்து படு மோசமாக உருவகப்படுத்தி வருகின்றது.
அய்ரோப்பாவின்  இந்த ஆன்மீக ஓட்டாண்டித்தனமானது  லியோ பால்டுக்குள் ஒரு ஏமாற்றத்தை உண்டு பண்ணியது.

 அந்த ஏமாற்றமானது அவருக்குள் ஒரு வித விசையுடன் கூடிய தீவிர உணர்ச்சியாக திரண்டு எழுந்தது.

இந்த உணர்வின் தகிப்பை அவர் ஆழ்ந்த வாசிப்பின் மூலமாக தணிக்க முயன்றபோதுதான் சீனத்து தத்துவ ஞானி லா ஓ சே யின் தாவோயிஸ போதனைகள் வாயிலாக அவருக்கான நுழை வாயில் திறந்தது.

மனிதனை இயக்கும் மூல விசை அவனது இதயத்திலிருந்துதான் செயல்படுகின்றது.

அந்த மூல விசை ஊற்றெடுக்கும் மனமானது எந்த வித கீழான இச்சைகளாலும் அடிமைப்படுத்தப்படக்கூடாது.

தாழ்த்தும் தளைகளற்ற தூய்மையான விடுதலையை அந்த மனது  பெற வேண்டும்.

 அப்போதுதான் மனித குலத்தை பாதித்திருக்கின்ற அனைத்து விதமான பிரச்னைகளிலிருந்தும் முழுமையாக விடுதலை பெற முடியும் என்பதை லா ஓ சேயின் சிந்தனையிலிருந்து அறிந்தார்.

பல நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்த லியோ பால்டின் உள்ளுணர்வு லா ஓ சேயின் தத்துவப்புள்ளியோடு ஒத்திசைந்து சென்ற எழுச்சி மிகுந்த தருணம் அது.
இது லியோ பால்டின் தேடுதலுக்கான விடையின் முன்னுரையாக இருந்தது.
முழுமையான விடைக்காக அவர் தனது பயணத்தை இஸ்லாம் பின்பற்றப்படுகின்ற முஸ்லிம்கள் அடர்ந்து வாழுகின்ற  நாடுகளின் குறுக்காகவும் நெடுக்காகவும் நடத்தினார். 

உண்மையை அதன்  நிறைந்த வடிவில் கண்டு உணர நாடுகள் , சம வெளிகள் , பள்ளத்தாக்குகள் , கணவாய்கள் , மலைப்பாங்கான பகுதிகள் , காடுகள் என துறவி போல அலைந்து  திரிந்தார்.

பல்வேறுபட்ட நிலவெளிகளில் வித்தியாசமான மனிதர்களுடனும் வெவ்வேறு வகையான வாழ்க்கை முறைகளுடனும் அவருக்கேற்பட்ட பட்டறிவை விரிந்து பரந்த திரைச்சீலையில் வரையப்பட்ட வண்ண மயமான முழு ஓவியம் போல இந்த நூலில் தீட்டிச்செல்கின்றார் லியோ பால்டு.

பயண விவரிப்பு , தத்துவ ஆய்வு , ஒப்பாய்வு என அவரது வர்ணிப்புகள் வெளியெங்கும் சூழும் கதிரவனின் எண்ணற்ற கிரணங்கள் போல விரிந்து படர்கின்றன. அவை வாசகர்களை ஒரே சமயத்தில் பல பயணங்களை நிகழ்த்தியதால் ஏற்படும் முடிவற்ற கிளர்ச்சிகளுக்குள் அழைத்துச் செல்கின்றது.

முஸ்லிம் உலகமெங்கும் வாழும்  சராசரியான வாழ்க்கை வாய்க்கப்பெற்ற எளிய மனிதர்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் எப்படி செயற்படுகின்றது என்பதை அவதானிப்பதுதான் அவரது நோக்கம்.

அன்றாட உணவு , இருப்பிடம் , பாலை வன வாழ்க்கையின் கடினம் போன்ற அறைகூவல்களும் போராட்டமும்  நிறைந்த தினசரி  வாழ்க்கையை அந்த முஸ்லிம்கள் எப்படி எளிமையாக எதிர் கொள்கின்றனர் கையாளுகின்றனர்?
. வாழ்க்கையின் மலைக்க வைக்கும் தடைகளை வெறும் நீர்க்குமிழி போல ஊதித்தள்ளும் ஆழ்ந்த விசை எது ?

என்ற வினாக்களுக்கான விடையை அவர் அடைவதுதான் இந்த நூலின் தலையாய ஓட்டம்.

இஸ்லாமானது  ஆட்சி அதிகார பீடங்களில் இன்று இல்லை. ஆனால் அது  கோடானு கோடி எளிய மனிதர்களின் பற்றுகோடாக விளங்குகின்றது.

இந்த நம்பிக்கைதான் வாழ்க்கை குறித்த அனைத்து அவ நம்பிக்கைகளிலிருந்தும் அவர்களை விடுவிக்கின்றது. மனிதனின் விதியானது பிரபஞ்சத்தின் பென்னம் பெரிய  விதி என்ற நதி ஓட்டத்துடன் இணைந்த சிறு துளிதான்  என்ற  பருண்மையை உணர்த்துகின்றது.

இந்த அறிதலின் வாயிலாக தனிமை , கைவிடப்பட்ட உணர்வு , தலைக்கனமிக்க பெருமை உணர்வு போன்ற அலைக்கழிக்கும் குணங்களிலிருந்து அவன் பாதுகாப்பு பெறுகின்றான்.

அந்த பயணங்களில் நம்பிக்கையின் இந்த பெறுபேறுகளை அவர்  நேருக்கு நேர் உணர்கின்றார்.

சீனத்தின் தாவோயிச தத்துவ ஞானி  லா ஓ சே யின் உரைகல்லில் தெறித்த தீப்பொறியானது அரபு பாலைவனங்களில் நிறைந்த வடிவத்தில் ஒளிர்ந்து முழுமை அடைவதை பின்னர் அவர் தரிசிக்கின்றார்.

கீழான இச்சைகளிலிருந்து விடுதலை பெறும் மனித மனதானது ஒரு உன்னத ஆற்றல் மையத்தின் ஆளுகையின் கீழ் வைக்கப்படும்போது மட்டுமே அதன் விடுதலையானது முழுமை பெறுகின்றது.

அந்த உன்னத ஆற்றல் மையமானது மனம் , ஆன்மா , அண்ட சராசரங்களை படைத்து இயக்கி பாதுகாக்கும் இறைவன் ஒருவன்தான்  என்பதையும் அவர் கண்டறிகின்றார்.

இஸ்லாமிய தீர்க்கதரிசிகளும் , மத அறிஞர்களும் மனித மனதின் ஆன்மாவின்  முழு உரிமையாளன் இறைவன் மட்டுமே என்ற பேருண்மையின் பால் வழிகாட்ட வந்தவர்களே.

அது தவிர மற்றபடி அவர்களுக்கு அந்த ஆளுகையில் எந்த வித பங்கும் பாத்தியதையுமில்லை. அவர்கள் பீடாதிபதிகளும் கிடையாது.
இந்த உத்திரவாத காப்பீடுதான் இஸ்லாமிய நெறியை புரோகிதமாக சீரழிவதிலிருந்து நிரந்தரமாக காத்து வருகின்றது என்பதை அஸத் உறுதிப்படுத்திக் கொண்டார்.

உண்மையை நாடும் தனது உள்ளத்தின் வேட்கையை தணிக்க அவர் பாலை வனத்தில் செய்த பயணமானது கற்பனை சாகசங்களை விவரிக்கும் கதை நூல்களை எல்லாம் தோற்கடித்து விடும்.

அந்த அளவிற்கு அவை  உண்மையான பல திருப்பங்கள் நிறைந்தது.
பாலை வனத்தின் மாசற்ற மண் , விடுதலை உணர்வும் தன்மானமும் பொங்கி வழிகின்ற அன்றாட வாழ்வு ,  ஓடி விளையாடிடும் சிறு உயிர்கள் , வெண் மணலில் கதிரவனின் ஒளிக்கோலம் , பாலை பழங்குடியினரின் அறிவு நுட்பம் , வாய்மை , தெளிந்த மனம் ,  ரீங்கரிக்கும் எளிய வாழ்க்கை முறை , விருந்தோம்பல் , ஒழுக்கம், போர்க்குணம் , பாலை வனத்தில் அவர் வழிதடுமாறி தட்டலைந்து சாவின் வாசல் வரை சென்று மீண்டது ... பற்றிய நுண்ணிய அழகியல் ததும்பும் விவரணைகளும் வர்ணனைகளும் இந்த நூலில் கொட்டிக் கிடக்கின்றன.

புயலின் அழிவும் உண்மையானது . புயலுக்கு முன் நிலவும் அமைதியும் உண்மையானது. இயற்கையின் இந்த முரணியக்கம் பாலை வன மனிதர்களிடமும் வெளிப்படுவதை ஒளிவு மறைவின்றி அஸத் பதிந்துள்ளார்.


இந்த பாலைவன தொல் குடியினர் கண்ணியமும் அன்பும் நிறைந்தவர்கள்தான். அதே போல கற்பனையான நிகழ்வுகளின் தீண்டல்களால் வாளை சுழற்றவும் அவர்கள் தயங்குவதில்லை என்பதை “ எப்போதும் சுவர்க்கமும் நரகமும் அவர்களது அருகிலேயே இருக்கும் “( நூல் பக்கம் : 305 ) என்ற வரிகளின் மூலம் காட்சிப்படுத்துகின்றார் அவர்.

சராசரி முஸ்லிம் மாந்தர்களோடும் பாலை மணல் பரப்போடும் அவரது ஆய்வு நின்றிடவில்லை.

 முஸ்லிம் கல்வி சாலைகள் , கல்வியாளர்கள் , உலமாக்கள் , பல்வேறு உட் சிந்தனை பிரிவுகள் , ஆட்சியாளர்கள் என அவரது பயணம் பெருங்கடலின் உள் நீரோட்டம் போல கண்டங்களை கடந்து அகலிக்கின்றது.

வஹ்ஹாபிய , சூஃபிஸ சிந்தனை பிரிவுகளின் நலவுகள் , பிறழ்வுகள் போன்றவற்றை சார்பு நிலையின்றி ஆய்கின்றார் லியோ பால்டு அஸத்.
ஷியாக் கொள்கையின் மையப்புள்ளியாக அறியாமைக்கால ஃபாரசீக தேசீய மேட்டிமை திகழ்வதை அவர் நுணுக்கமாக கண்டுபிடித்துள்ளார். அவரது பார்வை சரியானதுதான் என்பதை இன்றைய ஈரானிய அரசானது  சிரியா , இராக்கில் மேற்கொண்டு வரும் அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தாலே நமக்கு விளங்கும்.

மீட்பது போல வந்து சுரண்டுவதில் வந்து முடிந்த ஸவூதி அரச குடும்பத்தின் வரலாறு பற்றிய துல்லியமான அவரது விமர்சனம் , முஸ்லிம்களின் தற்கால பின்னடைவின் தலையாய காரணங்களில் ஒன்றாக இஜ்திஹாத் என்ற அறிவியக்கத்தின் செயல்பாடு குறிப்பிட்ட நூற்றாண்டோடு   தேங்கிப்போனதுதான் என்பதை சரியாக அடையாளங்காணுதல் என்பவற்றின் வாயிலாக வரலாற்று துலாக் கோலை நம்முன் நாட்டுகின்றார் லியோ பால்டு.

:
·        அன்றைய இத்தலியின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய லிபியாவின்  ஸனூசி இயக்கத்தினரோடும் உமர் முக்தார் உள்ளிட்ட அதன் தளபதிகளோடும் சேர்ந்து அஸதும் களமாடினார்.

·        ஜியோனிஸத்தலைவர் வெயிஸ்மானுடனான ஒரு சந்திப்பை அஸத் நடத்தினார். அச்சமயம் வெயிஸ்மானின்  முகத்திற்கு எதிரே இஸ்ராயீல் என்ற ஆக்கிரமிப்பு நாட்டின் உருவாக்கம் அநீதியானது என சிங்கம் போல எடுத்துரைத்தார்.

வரலாற்றின் இயக்கத்தை அவதானிக்கக்கூடியவராக மட்டும் இல்லாமல் இந்த நிகழ்வுகளின் மூலம் அதில் பங்கேற்பாளராகவும் அஸத் பரிணமிக்கின்றார்.

அவரின் நூலை வாசித்து முடிப்பவர்கள் அவரது முன்னுரையின் இறுதி பத்திகளை மீண்டும் வாசிக்கும்போது அது முன்னுரையல்ல முடிவுரையின் நீட்சி என்பதை அறிந்து கொள்ள இயலும்.

அந்த முன்னுரையில் அரபு நாடுகளின் எண்ணெய் வளமானது யானையின் காலில் சிக்கிய எறும்பை போல அவர்களது முந்தைய பாலை நில பழங்குடி வாழ்க்கையின் எளிமையையும் தனித்தன்மையையும் நசுக்கியிருப்பதை மிகுந்த மன வேதனையுடன் பதிவு செய்கின்றார்.

 அவரது இந்த வேதனை மிக்க அவதானமானது  828 மீற்றர் உயரமும் , 163 தளங்களும்  கொண்ட துபையின் புர்ஜ் அல் கலீஃபாவின் வடிவில் வாழும் சாட்சியாக இன்று மெய்ப்பட்டுள்ளது. அய்க்கிய அரபு அமீரகத்தின் பாலை நிலமானது உலகின் மாபெரும் திறந்த வெளி நுகர்வு சந்தையாக மாற்றப்பட்டுள்ளது.

அஸதின் இந்த நூலானது அவரது நேர்மையான மன ஓட்டத்தின் பதிவு மட்டுமே. யாரையும் திருப்தி அடையச்செய்யும் நோக்கங்கள் எதுவும் அவரது எழுத்துக்களுக்கு இல்லை என்பதற்கான சான்றுகள் இவை.
இங்குதான் அஸதின் படைப்பானது அவரது இறப்பிற்கு பிறகும் நீடித்திருக்கும் தன்மையை அடைகின்றது.

11/07 2014 











.

No comments:

Post a Comment