வைகறைத் தொழுகையை நிறைவு செய்து விட்டு நமதூர் நகராட்சி
வளாகத்தைத் தாண்டித்தான் தேனீர் கடைக்கு செல்ல வேண்டும்.
இருள் ஒளியின் முயக்கம் தீரும் வேளையில் நகராட்சி
வளாகத்திற்குள் நிற்கும் வேப்ப மரங்களிலிருந்து காகம் குருவி மைனா குயில் உள்ளிட்ட
இனம் தெரியாத பறவைகளின் பேரொலி கிடைமட்டத்திலும் செங்குத்தாகவும் எல்லா திசைகளிலும்
பீறீடும்.
இத்தனைக்கும் அந்த வளாகத்திற்கு முன் பின்னாக கொத்து
கொத்தாக மரங்கள் நிற்கும் பகுதிகள் இருந்தாலும் இங்கு மட்டுமே பறவைகளின் ஒலி ஆட்சி
ஒலிப்பதன் மறை பொருள்தான் என்ன ? எதனால் இந்த பேரொலி ?
---- வெயிலும் உற்சாகமும் நிரம்பிய இன்னுமொரு பகல்
வேளையைக்காணுவதற்காக விட்டு வைக்கப்பட்டிருக்கும் தங்களின் ஆயுளுக்கான நன்றி கூறலா
?
---- பல்வேறு குடிமைப்பணிகளுக்காக நகராட்சி வளாகத்தில்
எல்லா இருள் மூலைகளிலும் கமுக்கமாகவும் இயல்பாகவும் பரிமாறப்படும் கையூட்டு பணத்தின்
அழுகல் நாற்றத்தை பொறுக்கவியலாத முறைப்பாடா ?
அல்லது
இவை எல்லாம் கலந்த சேர்ந்திசைக் கச்சேரியா ?
யார் அறிவார் ?
No comments:
Post a Comment