Tuesday 14 April 2020

கொரோனாவை மிஞ்சிய தன்னலம்


சென்னையில் கொரோனாவால் இறந்து போன மருத்துவரின் உடலை எரியூட்ட மக்கள் எதிர்ப்பு. மயானக்காவலாளி, மருத்துவமனை ஊழியர்கள் சடலத்தை போட்டு விட்டு  ஓட்டம்





தனியார் மருத்துவமனைகளில் பாரபட்சம் காட்டப்படும்  முஸ்லிம் நோயாளிகள்


வீட்டிற்கு  அத்தியாவசிய பொருளை வினியோகிக்கும் பணியாளருக்கு குடிநீர் மறுப்பு


மருத்துவ பணியாளர்களை வாடகை வீட்டை  விட்டு வெளியேறும்படி உரிமையாளர்கள் கெடுபிடி
-----------------

கொரோனாவின் வலியையும் மிஞ்சிய கொடூரம் நம் மக்களிடம் குடி கொண்டுள்ளது.


கற்றோரின் கொடூரம் இவை எல்லாவற்றையும் விட தாண்டி விடும் அளவிற்கு செல்கின்றது.


கொரோனா பற்றி வானொலியில் பேசிய எழுத்தாளர் ஒருவரும் மருத்துவர் ஒருவரும் கொரோனாவிற்குப்பிறகும் யாரும் யாரையும் தொடாமல் தீண்டாமல் கைகுலுக்காமல் கட்டிப்பிடிக்காமல் இருக்கும் நிலைதான் தொடர வேண்டும்.  கைக் கூப்பி  வணங்கினால் போதும்.   நமது முன்னோர்கள் விஷய ஞானத்துடன்தான் இதுபோன்ற தூய்மை நடவடிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர் என சிலாகிக்கின்றனர்.

----------
கொரோனாவிற்கு பிந்திய நாடு எப்படி இருக்கப்போகின்றது என்பதற்கான மோசமான எதிர்வுகள்தான் இவை.


தன் மனித விலகல் என்ற தொழில் நுட்பச்சொல்லைக்கூட அறியாத தலைமை அமைச்சர்  சமூக விலகல் என்ற  தவறான தீண்டாமைச்சொல்லை படைத்து திருவாய் மலர அது நாடு முழுக்க உலா வருகின்றது. பல்லாயிரமாண்டுகளாக தீண்டாமையையும் சாதி மேட்டிமையையும் உயிர் மூச்சாக கொண்ட நம் சமூகத்திற்கு புதியதாக சொல்லி கொடுக்க வேண்டுமா என்ன?


நமது தன்னலமும் உயிரின் மீதான அளவுகடந்த பேராசையும் மூட நம்பிக்கைகளும்  சக மனிதனின் துயரைக்கூட புரிந்து கொள்ள முடியாத மனக்கடினமும் சமூகத்தை அந்தகார அகழிக்குள் கொண்டு போய் தள்ளியிருக்கின்றது.


முன்னெச்சரிக்கை தேவைதான். ஆனால் அதன் போர்வையில் உங்களின் இழி குணங்கள் நாட்டியமாடுவதைத்தான் பொறுக்க இயலவில்லை.


சீழ் வடியும் உங்கள் புண்ணை, ரத்தத்தை நிணத்தை  எச்சிலை விந்தை அழுகிய சதைத்துண்டங்களை கையாளும் மருத்துவ பணியாளர்களும்  உங்கள் சிறு நீரையும் மலத்தையும் வாயிலும் மூக்கிலும் அன்றாடம் பூசிக்கொள்ளும் தூய்மைப்பணியாளர்களும் உங்களைப்போல தன்னலங்கொண்டு மறுத்தால் உங்களுடன் உங்கள் தூய்மையும் மதமும் பண்பாடும் குருட்டு நம்பிக்கையும் அழுகிய சடலமாக  நாறத்தொடங்கி விடும்.



ஒரு புறம் தூய்மைப்பணியாளர்களுக்கு பாத பூஜை பாசாங்கு காட்டிக்கொண்டு  மறுபுறம் உடன் வாழும் மனிதர்களையும்  விலக்கி நிறுத்தி விட்டு நீங்கள் மட்டும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு தனியே வாழ்ந்து விடப்போகின்றீர்கள்?

நீங்கள் இறை  நம்பிக்கையாளரெனில் நம் அனைவரையும் படைத்த இறைவனின் கையில்தான் நமதும் வாழ்வும் இறப்பும் உள்ளது. உங்களுக்குள்ள அன்னமும் குடிப்பும் தீராத வரை நீங்கள் சாகப்போவதில்லை.

எனக்கு கடவுளும் வேண்டும் சக மனிதனைத்தீண்டவும் கூடாது என்றால் அப்படிப்பட்ட வன்மத்தை தன்னலத்தை இழிகுணத்தை போக்காத கடவுளையும் மதத்தையும் நம்பிக்கையயும் வாரிச்சுருட்டி குப்பைக்கிடங்குக்குள் விட்டெறிவது நல்லது.  எல்லா வாயில்களும் சாளரங்களும் மூடப்பட்ட தனியறையில் இருந்து சமாதியாவது மேல். ஏனென்றால் புறக்காற்றில் சக மனிதனின் மூச்சுமல்லவா கலந்திருக்கின்றது!!!

இன்று காலை தனியாவர்த்தனம் என்ற மலையாளப்படம் பார்த்தேன். அழுத்தமான மூட நமபிக்கையும் தன்னலமும்  ஒரு குடும்பத்தை எப்படி அங்கம் அங்கமாக அங்கமாக புற்றைப் போல அரித்தழிக்கின்றது என்பதை காட்டியிருக்கின்றார்கள்.

சக மனிதன் மீதான நம்பிக்கையும் கருணையும்  தீரா அன்புமே எல்லா பேரிடர்களையும் வெல்லும் அருமருந்து





No comments:

Post a Comment